‘கற்பனைக்கு அப்பாற்பட்ட, அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்குச் செல்ல தயாராகுங்கள்’ என்று சொல்லி எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டிருக்கும் படம் சிவகார்த்திகேயனின் அயலான்.
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 24 AM ஸ்டுடியோஸ் தயாரிப்பில், KJR ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த படம் தீபாவளி பண்டிகை வெளியீடாக திரைக்கு வரவுள்ளது என படத்தின் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படம் பற்றி, KJR ஸ்டுடியோஸ், கோட்டபாடி ஜே ராஜேஷ் பேசுகையில் “இந்த படத்தை இடைவிடாத கடின உழைப்பைக் கொடுத்து படமாக்கியுள்ளோம். பல தடைகளை தாண்டி படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் சிஜி (CGI) காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளோம். அயலான், ஒரு பான்-இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும் படமாக உருவாகியுள்ளது. படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது. திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தபட்டுள்ளது. மேலும், 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் ஆக்சன் படமாக ‘அயலான்’ இருக்கும். இந்த நேரத்தில், பல ஹாலிவுட் திரைப்படங்களின் CG-க்குப் பின்னால் உள்ள Phantom FX நிறுவனத்திற்கு, அவர்களது அளப்பரிய CG பணிக்காக நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறோம். இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்” என்றார்.