உத்தரப்பிரதேச காவல்துறையை மையமாக வைத்து சுசி கணேசன் இயக்கியுள்ள படம் ‘தில் ஹெ கிரே.’
இந்த படம் பிரபலமான டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பாக திரையிட தேர்வாகியிருக்கிறது. வரும் செப்டம்பர் 12-ம் தேதி வேர்ல்டு பிரிமியராக திரைப்பட விழாவில் ரிலீஸ் ஆகிறது .
இந்த படத்தில் வினித்குமார் சிங், அக்ஷய் ஓபராய், ஊர்வசி ரவ்ட்டேலா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். எம். ரமேஷ் ரெட்டி தாயாரித்திருக்கிறார்.
கூரையில்லாத வீடுகளில் வாழ்வதைப்போல வாழும் இன்றைய சோசியல் மீடியா உலகத்தில், அந்தரங்கம் களவு போனால் நடக்கும் ஆபத்து பற்றி அலசும் இப்படம் தேர்வானது குறித்து சுசி கணேசன் பேசும்போது, “இந்திய அரசின் தேர்வு இப்படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம். அதிலும் முதல் காட்சி, டொராண்டோ திரைப்டவிழாவில் திரையிடப்படுவது, உலக மார்க்கெட்டின் பார்வை இப்படத்தின் பக்கம் திருப்பியிருக்கிறது” என்றார்.
பிரத்யேக காட்சியில் பங்கேற்பதற்காக, சுசி கணேசன், இணை தயாரிப்பாளர் மஞ்சரி சுசி கணேசன், நடிகை ஊர்வசி ரவ்ட்டேலா கனடா செல்கிறார்கள். இந்தியன் பெவிலியன் துவக்க விழாவிலும் கலந்துகொள்கிறார்கள். இந்தாண்டு இறுதியில் வெளியாகும் தில் ஹே கிரே இந்த திரைப்படவிழாவில், வியாபார ரீதியாகவும், கலை நய ரீதியாகவும் அழுத்தமான இடத்தைப் பிடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.