Home சினிமா படத்திற்கு நடிகர்கள் சரியாக அமைந்துவிட்டால் பாதி வெற்றி உறுதியாகி விடும், அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி!...

படத்திற்கு நடிகர்கள் சரியாக அமைந்துவிட்டால் பாதி வெற்றி உறுதியாகி விடும், அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி! -‘லெவன்’ பட விழாவில் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் பேச்சு  

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கியுள்ள ‘லெவன்’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் மே 16 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

முன்னதாக படத்தின் டிரெய்லரை உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே ‘லெவன்’ முன்னோட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதையடுத்து இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது.

நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் கே,பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, டி.ஜி. தியாகராஜன், டி. சிவா, இணை தயாரிப்பாளர் கோபாலகிருஷ்ணன், இயக்குநர்கள் அமீர், செல்வராகவன், பிரபு சாலமன், ஏ. எல் விஜய் , விநியோகஸ்தர்கள் ஃபைவ் ஸ்டார் செந்தில், அழகர்சாமி, அருள்பதி , சரிகம ஐஸ்வர்யா, சஞ்சய் வாத்வா, முகேஷ் மேத்தா, மீனா சாப்ரியா, கிருஷ்ண ரெட்டி, பி. எல். தேனப்பன், கதிரேசன், ராஜ் டிவி ரவி, ரகுநந்தன், இயக்குநர்கள் விஷால் வெங்கட், பத்ரி, ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் நடிகர் நவீன் சந்திரா பேசுகையில், ”ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘சரபம்’ என்றொரு தமிழ் படத்தில் நடித்தேன்.‌ அதன் பிறகு தமிழில் ‘லெவன்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன்.

இந்த கதையை கேட்ட பிறகு இதில் நடித்தால் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. தயாரிப்பாளர் அக்பர், இயக்குநர் லோகேஷ், ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஆகிய மூவரும் சேர்ந்து படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை நேர்த்தியாக உருவாக்கினர். அதனால் இந்த திரைப்படத்தை அவர்களால் எளிதாக உருவாக்க முடிந்தது.

இந்த திரைப்படத்தை ஒரு படமாக இல்லாமல் இரண்டு படமாக படப்பிடிப்பு நடத்தினோம். இதன் போது நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றினர். இந்தப் படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. மே 16ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.‌ மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

நான் இமானின் தீவிர ரசிகன். படத்தில் எல்லா பாடல்களும் நன்றாக இருக்கின்றன‌. இதற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘விருமாண்டி’ படத்தில் அபிராமி அவர்களின் நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அவர்களுடன் இணைந்து நடிக்கும் நாட்களுக்காக காத்திருந்தேன், நட்பாக பழகினார். காட்சிகளில் நடிக்கும்போது அவருடைய திறமையை நேரில் பார்த்து வியந்தேன். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.‌

ரியா ஹரி படப்பிடிப்பு தளத்தில் எனக்கு நம்பிக்கை அளித்தவர். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மறக்க முடியாதது. எதிர்காலத்தில் அவர் மிகச்சிறந்த நடிகையாக வலம் வருவார். அதற்காக அவரை வாழ்த்துகிறேன், தெலுங்கு திரையுலகம் சார்பாக அவரை வரவேற்கிறேன்.

‘லெவன்’ படம் நன்றாக உருவாகியுள்ளது, படத்தை சிறப்பான தருணத்தில் வெளியிட வேண்டும் என்பதற்காக காத்திருந்தோம். ரசிகர்களுக்கு நல்லதொரு படத்தை வழங்க வேண்டும் என தீர்மானித்து மே 16ம் தேதி இப்படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், ” இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்திற்கு நடிகர்கள் அமைந்துவிட்டால் பாதி வெற்றி உறுதியாகி விடும் என்று சொல்வார்கள் அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. நவீன், திலீபன், ரியா, அபிராமி, ரித்விகா ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிடில்கிளாஸ் மாதவன் படத்தில் அபிராமியின் ரசிகன் நான்.

என்னுடைய முதல் படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்க வேண்டும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற போது தொடக்கத்தில் சற்று பதற்றமாக இருந்தது. ஆனால் வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு என்னுடன் பணியாற்றிய நடிகர்களும் நடிகைகளும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் தான் காரணம். அவர்கள் கொடுத்த முழு ஒத்துழைப்பின் காரணமாகத்தான் படத்தினை திட்டமிட்டபடி நிறைவு செய்தேன். அதற்காக இந்த தருணத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நானும், கார்த்திக்கும் நண்பர்கள். நான் உதவி இயக்குநராகவும், அவர் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி பயணத்தை தொடங்கிய தருணத்திலிருந்தே நண்பர்கள். அவன் தான் இந்தப் படத்திற்கு முதுகெலும்பு. படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எனக்கு கூட சில தருணங்களில் சோர்வு எட்டிப் பார்க்கும். ஆனால் கார்த்திக் சோர்வே இல்லாமல் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டே இருப்பார். இந்தப் படத்தின் டீசர் வெளியானவுடன் வேறொரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமானார்.

இமான் சார் எனக்கு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். படத்தில் பாடல்களிலும், பின்னணி இசையிலும் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். அதிலும் இடைவேளை தருணத்தில் அவர் வழங்கி இருக்கும் பின்னணி இசை நிச்சயம் பேசப்படும். இமான் சாரின் 2.0 வெர்ஷ‌னை இப்படத்தில் பார்க்கலாம்.‌

தயாரிப்பாளர் அக்பர் – படத்திற்கு நிதி அளிப்பதோடு மட்டும் இல்லாமல் இப்படத்திற்காக நாங்கள் எவ்வளவு கடுமையாக உழைப்பை கொடுத்தோமோ, அதற்கு நிகராக அவரும் உழைத்தார். அவர் ஒருபோதும் தயாரிப்பாளராக இருந்ததில்லை, படத்திற்காக அனைத்து பணிகளையும் அவர் செய்தார். அவரைப் பார்க்கும்போது எனக்கு சற்று பொறாமையாக தான் இருக்கிறது. ஏனெனில் அவ்வளவு ஸ்ட்ராங்கஸ்ட் பெர்சன்.‌ அவருக்காகவே இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறும், வெற்றி பெற வேண்டும். ஒரு தயாரிப்பாளர் வெற்றி பெற்றால் தான் ஒரு திரைப்படம் வெற்றி பெறும் என நம்புபவன். அந்த வகையில் இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன்.‌

நடிகர் நவீன் ஒரு கதாபாத்திரத்திற்குள் வந்துவிட்டால் அந்த கதாபாத்திரமாகவே இருப்பார். கேரக்டரை எழுதும்போது திரையில் எப்படி தோன்றும் என்று நினைத்து எழுதுவதில்லை.‌ ஆனால் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புவோம். படம் பார்த்த அனைவரும் படம் எப்படி நன்றாக இருக்கிறது என்று ஒருமித்த குரலில் சொன்னார்களோ, அதேபோல் அனைவரும் நவீன் சந்திராவின் நடிப்பையும் பாராட்டினார்கள். இந்தப் படம் நவீன் சந்திராவிற்கு தமிழ் திரையுலகத்தில் நல்ல பெயரை சம்பாதித்து தரும். நிறைய வாய்ப்புகளும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மே 16 அன்று ‘லெவன்’ படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அற்புதமான திரையரங்க அனுபவம் காத்திருக்கிறது. அதைக் காண திரையரங்கத்திற்கு வாருங்கள்,” என்றார்.

இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில், ”திரையுலகில் 23 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருந்தாலும் இதுவரை கிரைம் திரில்லர் ஜானரிலான திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.‌ அந்த வகையில் ‘லெவன்’ என்னுடைய இசையில் வெளியாகும் முதல் கிரைம் திரில்லர் திரைப்படம்.‌ இதற்காக இயக்குவர் லோகேஷ் அஜில்ஸுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்