எத்தனை எத்தனை கேள்விகள் இந்தச் சமூகத்தில் இருக்கோ, அத்தனை கேள்விகளையும் நான் ஏற்றுள்ள லஷ்மி கேரக்டர் மூலமாக இயக்குநர் கேட்க வச்சிருக்காரு! -காதல் என்பது பொதுவுடமை பட விழாவில் நடிகை ரோகிணி

வினீத், லிஜாமோல் ஜோஸ் நடித்துள்ள காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் ஜெயப்பிரகாஷ், ”நானும் எனது நண்பர் சுரேஷும் உருவாக்கிய கதை தான் இந்த ‘காதல் என்பது பொதுவுடைமை.’ முதலில் இதை தமிழில் எடுக்க நினைக்கவில்லை, நண்பர்கள் தான் இந்த படத்தை தமிழில் எடுக்கலாம் என்று எனக்கு ஊக்கமளித்தார்கள். இந்த திரைப்படத்தை 28 நாட்களில் எடுத்து முடித்துள்ளோம். அனுபவம் வாய்ந்த நடிகர்களால் தான் இதனை இவ்வளவு சீக்கிரம் முடித்தோம்.

இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன் மிகப்பெரிய ஒத்துழைப்பாக இருந்தார்.நான் தமிழில் படம் எடுக்க முயற்சித்த போது சில பேர் மலையாளத்திலும், ஹிந்தியிலும் எடுக்க சொன்னார்கள்.

நான் கோபத்தில் வேண்டுமென்றே எடுத்தேன். தமிழ்நாட்டில் படத்தை வாங்க OTT தளத்தில் வாங்க மறுக்கின்றனர். இதனால் படத்தை வெளியிடுவதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த நேரத்தில் தான் எனக்கு டிஸ்ட்ரிபியூட்டர் தனஞ்செயன் உதவியுள்ளார் அவருக்கு நன்றி. மற்றும் இந்தப் படத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் வினித், ”படத்தில் நடிக்கும் போது படம் எவ்வாறு இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் படம் பார்க்கும்போது அற்புதமாக வந்திருக்கிறது. படம் குறித்து நான் அதிகமாக பேசவில்லை. அது மக்கள் கண்டிப்பாக பார்த்து பேசுவார்கள். இந்த மாதிரியாக படங்களில் தான் முக்கியமான கருத்துக்கள் பலவற்றை பார்க்க முடிகிறது. இந்த படம் வெளிப்படையான விவாதத்தை வைக்கிறது இது அனைவருக்கும் பிடித்தமான ஒரு படமாக அமையும்” என்றார்.

நடிகை லிஜோமோல் ஜோஸ் “ரொம்பப் பெருமையா, சந்தோஷமா, காதல் என்பது பொதுவுடைமை படத்தை உங்க முன்னாடி கொண்டு வர்றோம். ஓரிரு நாளுல, இந்தப் படம் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்னு நாங்க நம்பலை. ஆனா நிச்சயம் நம்மைச் சுத்தியிருக்கிறவங்களைப் பத்தி நல்ல புரிதல் ஏற்படுங்கிறதை நாங்க நம்புறோம். அதைத்தான் இந்தப் படத்தோட வெற்றியா பார்க்கிறோம். அனுபவம் வாய்ந்த நடிகர்களான வினீத் சார், ரோகிணி மேம் கூட நடிக்கக் கிடைச்ச வாய்ப்பை ஆசிர்வாதமாக கருதுறேன்” என்றார்.

நடிகை ரோகிணி, “இந்தப் படம் ஏன் ‘கூடாது’ என்பதுதான் படம் எடுக்கிறதுக்கான முதல் காரணம். ‘இந்தப் படத்தை மலையாளத்தில் எடுங்க’ன்னு சொன்னபோது, ‘இல்ல என் தமிழ் ஆடியன்ஸ் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு’ன்னு ஒரு இயக்குநர் இப்படத்தைக் கொண்டு வந்திருக்காரு.

இது சம்பந்தமான உரையாடலை எங்குத் தொடங்கவேண்டும் என யோசித்து, குடும்பத்தில் துவங்கணும் என ரொம்ப அற்புதமாக எழுதியிருக்கார். நான் குணச்சித்திர நடிகையாக நடிக்க ஆரம்பித்த பின், இந்த மாதிரி ஷேடுள்ள கேரக்டரில் நடிச்சதில்லை. இந்த லக்‌ஷ்மி கேரக்டரை என்னால் சரியாகப் பண்ண முடியுமான்னு நினைச்சேன். எத்தனை எத்தனை கேள்விகள் இந்தச் சமூகத்தில் இருக்கோ, அத்தனை கேள்விகளையும் லக்‌ஷ்மி மூலமாக இயக்குநர் கேட்க வச்சிருக்காரு. நான் சமூகத்தின் முகமாக இந்தப் படத்துல வர்றேன். அது ரொம்பச் சேலஞ்சிங்கா இருந்துச்சு. அதோட, ரொம்ப அன்பான ஒரு அம்மாவோட பரிதவிப்பும் லக்‌ஷ்மியிடம் இருந்தது.

நான் நிறைய அம்மா பாத்திரம் பண்ணியிருக்கேன். விட்னெஸ், தண்டட்டி, 3 என நான் பண்ண ஒவ்வொரு அம்மாவும் வேற வேற அம்மா. ஹீரோக்கு அம்மாவா நடிக்கணும் என இயக்குநர் யாராச்சும் சொன்னா, ‘அம்மாங்கிறது ஒரு கதாபாத்திரமே கிடையாது. ஹீரோக்கு அம்மா யாரு? கோபமானவங்களா? கஷ்டப்பட்டு வந்தவங்களா? இல்ல கர்வமா பேசுறவங்களா? அவங்களால கதையில் ஏதாச்சும் நடக்குதா?’ எனக் கேட்பேன். சில படத்துல தான் நான் ரொம்ப சரியா நடிருக்கேன் எனத் திருப்தியா இருக்கும். அதுல இந்த லக்‌ஷ்மி கேரக்டரும் ஒன்னு. இது எங்களோட கதை. ஒரு அம்மா – பொண்ணு கதை. இந்தப் படம் பேசும் அரசியலை மீறி, இந்தப் படம் உங்களை என்கேஜ் செய்யும்.

இங்கயும் மலையாளப் படங்கள் மாதிரி நல்ல படங்கள் எடுக்க முடியும், அதை ஆதரிக்க தமிழ் ஆடியன்ஸ் ரெடியா இருப்பாங்க என்பதை நாம் நிரூபிச்சுக் காட்டணும். எல்லாத்தையும் விட, பேசாப்பொருளைப் பேசுறதுதான் ஒரு கலையோட வேலையே! அதுதான் கலையின் பொறுப்பும் அழகும். அதை நாங்க செய்திருக்கிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here