நாங்கள் விருப்பத்தோடு சிரமப்பட்டு எடுத்திருக்கும் இந்த படம் ஒரு நல்ல கருத்தைப் பேசுகிறது!

ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க, கஜேந்திரா இயக்கியுள்ள படம் ‘குற்றம் தவிர்.’

இந்த படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இசையமைப்பாளர் கங்கை அமரன், அதிமுக’வைச் சேர்ந்த ஈ. . புகழேந்தி, ஆன்மீகவாதி ஜெய்பிரகாஷ் குருஜி, தொழிலதிபர் பிரகாஷ் பழனி, இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், பேரரசு, பவித்ரன், ராஜகுமாரன், நடிகர் சித்தப்பு சரவணன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும் படக் குழுவினருக்கும் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் பொன்னாடை போர்த்தி வரவேற்று கர்நாடக பாரம்பரிய முறையில் தலைப்பாகை அணிவித்து மரியாதை செய்தார். அது எந்தவொரு தமிழ் திரைப்பட திருவிழாவிலும் இதுவரை கானாத பண்பாட்டுச் செயல்பாடாக இருந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் கஜேந்திரா “இது எங்களுக்கு முதல் படம். நாங்கள் புதிதாகப் படம் எடுக்க வந்திருக்கிறோம் அனைத்து நடிகர்களையும் சென்னையில் இருந்து வரவழைத்து ஒரு தமிழ்ப் படத்தை எடுத்திருக்கிறோம். இதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.

இசையமைப்பாளர் கங்கை அமரன், “கர்நாடகாவிலிருந்து படம் எடுக்க வந்துள்ள இவர்களை வரவேற்கிறேன். இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா நன்றாக இசையமைத்துள்ளார். அவர் எனது உறவினர்தான். நம்ம வீட்டுப் பிள்ளை. இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”என்றார். அத்தோடு ‘மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே ‘என்ற மூகாம்பிகைப் பாடலை முழுதாகப் பாடி படக் குழுவினரை வாழ்த்தினார்.

கதாநாயகன் ரிஷி ரித்விக் “நான் வில்லனாக நடித்து வந்தேன் .இப்போது இதில் கதாநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்கள். பெங்களூரிலிருந்து படம் எடுக்க வந்திருக்கிறார்கள் என்ற போது நான் முதலில் யோசித்தேன். ஆனால் தயாரிப்பாளர் உடனே ஒரு லட்ச ரூபாய் எனக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் செய்தார்கள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் படப்பிடிப்பு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது .உடன் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. பருத்திவீரன் படத்தில் பார்த்து நான் வியந்த சரவணன் சார் இப்படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் பாஸ்கர், எடிட்டர் ரஞ்சித் போன்றவர்களின் ஈடுபாடும் உழைப்பும் சாதாரணமானதல்ல.அனைவரும் சேர்ந்து விருப்பத்தோடு சிரமப்பட்டு எடுத்திருக்கிறோம். படம் ஒரு நல்ல கருத்தைப் பற்றிப் பேசுகிறது. ரசிகர்கள் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.

கதாநாயகி நடிகை ஆராதியா, “‘மதிமாறன்’ படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது நான் இதுவரை 12 படங்கள் நடித்திருக்கிறேன். ஒன்றுதான் வெளியாகியிருக்கிறது. முதன் முதலில் இதில் நடனமாடி நடித்திருக்கிறேன். அந்தக் காட்சியைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா “நான் ஒரு பாடல் காட்சியில் ஆடி நடித்தேன்.அதன் படப்பிடிப்பு இரவு 7 மணிக்கு தொடங்கி 10 மணி வரை சென்றது. ஒரு குடிசைப்பகுதியில் நடந்தது. சுற்றிலும் மக்கள் கூடி இருந்தார்கள்.பத்து மணிக்கு சாப்பாடு வந்திருந்தது.ஆடிய களைப்பு பசியாக இருந்தது.சாப்பிடலாம் என்று திரும்பிப் பார்த்தபோது சாப்பாடு எங்கள் கைக்கு வரவில்லை. தயாரிப்பாளர் பாண்டுரங்கன் அதை எல்லாம் கூடி இருந்த மக்களுக்குக் கொடுத்து விட்டார்.சில நிமிடங்கள் பொறுத்து இருங்கள் என்று எங்களுக்குப் புதிதாக வரவழைத்துக் கொடுத்தார்.அப்படிப்பட்ட நல்ல மனதுக்காரர் பாண்டுரங்கன்.
இந்தப் படத்திற்காக சிவகாசி மாதிரி பாடல்களைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.
அந்த சிவகாசி வாய்ப்பை கொடுத்த பேரரசு சார் இங்கே வந்திருக்கிறார். என்னை விஜய் படம் கொடுத்துப் பெரிய ஆளாக்கி விட்ட வர் அவர்.
இந்தப் படத்தில் அப்பா பாடல் பாடியது சிறப்பானது. படம் வெற்றிபெறும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

பருத்திவீரன் சரவணன் “நான் இதில் வில்லனாக நடித்திருக்கிறேன்” என்றார்

படத்தின் தயாரிப்பாளர் பாண்டுரங்கன், நடிகர் சென்ட்ராயன், நடிகர் மீசை ராஜேந்திரன், நடிகர் சாய் தீனா, நடிகை வினோதினி, ராணுவ வீரரும் நடிகருமான காமராஜ், பிக் பாஸ் டேனியல், ஜெயபிரகாஷ் குருஜி, அரசியல்வாதி ஈ. புகழேந்தி, இயக்குநர் அரவிந்தராஜ், இயக்குநர் பவித்ரன், பாடலாசிரியர் கு. கார்த்திக், தொழிலதிபர் பிரகாஷ் பழனி, இயக்குநர் ராஜகுமாரன், நடிகர் ஜார்ஜ் விஜய், இயக்குநர் பேரரசு உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here