தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (Sports Development Authority of Tamilnadu – SDAT) நிரந்தர அங்கீகாரம் கிக்பாக்சிங் விளையாட்டிற்கும், தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்சிங் சங்கத்திற்கும் (பதிவு எண் L-30-31523) வழங்கப்பட்டுள்ளது.அதையடுத்து, தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்சிங் சங்கம், ‘தமிழ்நாட்டில் கிக்பாக்ஸிங் விளையாட்டிற்கு வழிகாட்டி, ஊக்கமளித்து அங்கீகாரம் வழங்கிய தமிழ்நாடு விளையாட்டு துறையை இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் முன்னணியில் கொண்டு வரும் தொலைநோக்கு சிந்தனையில் பெரும்பணி ஆற்றிக் கொண்டிருக்கும், மாண்புமிகு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்சிங் சங்கத்தின் சார்பாகவும், வீரர், வீராங்கனைகள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்’ என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்சிங் சங்கத்தின் நிறுவனரும் பொதுச் செயலாளருமான டாக்டர் சி.சுரேஷ் பாபு (இந்திய கிக்பாக்சிங் சம்மேளனத்தின் பயிற்சி குழு தலைவர் & தலைமை பயிற்சியாளர்) கூறியதாவது, “தமிழ்நாட்டில் கிக்பாக்ஸிங் விளையாட்டிற்கான முக்கியத்துவத்தையும், அங்கீகாரத்தையும் பெற எங்களது குழுவினர் தொடர்ந்து கடின உழைப்புடன் செயல்பட்ட இந்த நீண்ட பயணம் வெற்றியுடன் நிறைவுற்றது. நிரந்தர அங்கீகாரம் பெற உதவிய அனைவருக்கும் நன்றி.
தமிழ்நாடு அமெச்சூர் கிக்பாக்ஸிங் சங்கமானது,வரலாற்று சிறப்புமிக்க இப்பெருஞ்சாதனையை சங்கத்தின் வாரிய உறுப்பினர்கள், வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறோம்” என்றார்.