கிராமத்துப் பின்னணி, திருவிழா, ஊர்ப் பஞ்சாயத்து, மெல்லிய காதல் என கலந்துகட்டிய கதம்பமாய், புதுமுகங்களின் நடிப்பில் ‘மாடன் கொடை விழா.’
அந்த ஊரில் காலங்காலமாக குறிப்பிட்ட ஒருவரின் நிலத்தில் சுடலை மாடனுக்கு கொடை விழா அதாவது திருவிழா நடத்துவது வழக்கம். அப்படி ஒருமுறை விழா நடக்கும்போது திருநங்கை ஒருவர் மர்மமான முறையில் இறந்துபோகிறார். அத்தோடு திருவிழா நடப்பது நின்றுபோகிறது.
ஒரு கட்டத்தில் அந்த நிலத்தின் உரிமையாளருக்கு அவசரமாக பணம் தேவைப்பட, ஊரிலிருக்கும் பணக்காரரிடம் அடகு வைக்கிறார். சில வருடங்கள் கடந்த நிலையில் தன்னிடம் அடகு வைக்கப்பட்ட நிலத்தை தன் பெயரில் மாற்றிக் கொள்கிறார் அந்த பணக்காரர்.
இந்த நிலையில், மீண்டும் சுடலை மாடனுக்கு திருவிழா நடத்த நினைக்கிறார் நில உரிமையாளரின் மகன் முருகன். பணக்கார மனிதர் நிலம் தன்னுடையது என சொல்லி தர மறுக்கிறார். இரு தரப்புக்கும் மோதல் உருவாகிறது.
இப்படி பரபரப்பு பற்றிக் கொள்ளும் கதையில், முருகன் நினைத்தபடி திருவிழா நடத்த முடிந்ததா இல்லையா என்பது நிறைவுக் காட்சி. கடந்த முறை திருவிழா நடந்தபோது ஒருவர் இறந்துபோனதன் பின்னணியில் நடந்தது என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது திரைக்கதை…
முருகனாக கோகுல் கெளதம். கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்துக்கு அவரது தோற்றம் கச்சிதமாக பொருந்திப்போக, திருவிழா நடத்தும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுபவரிடம் ஆரம்பத்தில் நிதானமாக பேசுவது, கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் வரும்போது அதற்கேற்ற ஆக்ரோஷம் காட்டுவது, மாடன் அருள் தனக்குள் இறங்கியபின் உக்கிரமாக ஆடுவது, கெடுதல் செய்ய முன்வருவோரை துவைத்து துவம்சம் செய்வது என காட்சிகளின் தன்மையுணர்ந்து நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். காதல் காட்சிகளில் உணர்வுகளை இன்னும் கொஞ்சம் நன்றாக வெளிப்படுத்தியிருக்கலாம்.
நாயகி ஷர்மிஸா, அலங்கரித்த சிலைபோல் அத்தனை லட்சணமாக இருக்கிறார். கண்களாலும் நடிக்கிறார். கதையம்சமுள்ள படங்களை இயக்கவுள்ள இயக்குநர்கள் அம்மணியை தாராளமாய் தட்டித் தூக்கலாம்.
நாயகனின் அப்பாவாக வருகிற சூப்பர்குட் சுப்ரமணி, சந்தர்ப்ப சூழ்நிலையால் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினாலும் மகனின் திருவிழா நடத்தும் முயற்சிகளுக்கு பக்கபலமாக நிற்பது, தன் நிலத்தை சூழ்ச்சியால் அபகரித்தவரிடம் நிலத்தை திருப்பிக் கேட்டு கெஞ்சிக் கதறுவது என தன் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார்.
தான் நேசித்த திருநங்கையை இழந்த வலியை உணர்வுபூர்வமாகவும், அந்த இழப்புக்கு காரணமானவர்களை பழிவாங்கும் உணர்ச்சியை ஆவேசமாகவும் பிரதிபலித்திருக்கிறார் பலவேசமாக வருகிற பால்ராஜ் மாரியப்பன்.
வில்லனாக வருகிற டாக்டர் சூர்யநாராயணனின் திமிர்த்தனம், நாயகனின் சித்தப்பாவாக வருகிறவரின் கொந்தளிப்பு, அம்மாவாக வருகிறவரின் தவிப்பு, திருநங்கையாக வருபவரின் ஏக்கம் நிரம்பிய கண்கள்… ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு அம்சம் கதையோட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன.
‘மண்வெட்டி நுனி பளபளன்னு’, ஆகாசமும் அத்திப் பூவாகுதே’, பாடல்களில் தென்றலின் குளுமையை பரவச் செய்திருக்கிற இசையமைப்பாளர் விபின் பின்னணி இசையை கதைக்களத்தை மேம்படுத்தும் விதத்தில் தந்திருக்கிறார். கதைநாயகன் அருள் வந்து ஆடுகிற, அசுரவதமாக நீளும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் அதிரடியான இசையால் மிரட்டியிருக்கிறார்.
நெல்லை மாவட்டத்தின் சுற்றுவட்டத்தை, கொடைவிழா தருணங்களை சின்ராஜ் ராமின் கேமரா கண்கள் மூலம் பார்க்கும்போது பிரமாண்டமாக இருக்கிறது.
பாரம்பரிய திருவிழாக்கள் மக்களுக்குத் தருகிற மகிழ்ச்சி, அதன் மூலம் விளைகிற ஒற்றுமை, அதில் நடக்கிற பிரச்சனைகள் என கிராமத்துக்கு மண்ணில் வசிக்கிற உணர்வை காட்சிகளின் வழியாக கடத்தியிருக்கிற இயக்குநர் ஆர் தங்கபாண்டி, ‘எம்மதமும் சம்மதம்’ என்கிற மனப்பான்மையுடன் செயல்படுகிற கிறிஸ்தவ பாதிரியார் கொடை விழாவில் கலந்துகொள்கிற காட்சியை படத்தில் இணைத்து நம் மண்ணிலிருக்கும் மதநல்லிணக்கத்தை ஊர் உலகத்துக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்!
மாடன் கொடை விழா _ மண்வாசனைத் திருவிழா!
-சு.கணேஷ்குமார்