கரடி,புலி என பல விலங்குகளுடன் ‘மரகதமலை’ என்ற திரைப்படம் குழந்தைகள் கொண்டாடும் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகிறது.
இந்த படத்தை தயாரித்து, கதை திரைக்கதை, வசனம், பாடலை எழுதி இயக்குகிறார் எஸ்.லதா.
படத்தில் கதாநாயகன் சந்தோஷ் பிரதாப், கதாநாயகியாக தீப்ஷிஹா. முதன்மை கதாபாத்திரத்தில் தம்பி ராமையா. அவர்களுடன் மாஸ்டர் சஷாந்த், அரிமா, மஹித்ரா, கலைக்கோ, ஜெகன், சம்பத் ராம், வில்லனாக டெம்பர் வம்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படம் இந்த கோடையில் குடும்பங்கள் குழந்தைகளோடு கொண்டாடும் வகையில் மே மாதம் திரைக்கு வரவுள்ளது.
18 ஆம் நூற்றாண்டில் நடந்த கதையாக பீரியட் படமாக உருவாகிறது. படப்பிடிப்பு தடா காட்டுப்பகுதியில் பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு, மொத்தம் 40 நாட்கள் தொடர்ந்து படமாக்கப்பட்டது.
குழந்தைகளை கவரும் வகையில் பல குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் புலி, யானை, டிராகன், கொரில்லா, பாம்பு, குதிரை என படம் அட்டகாசமாக புதுமையான ஃபேண்டஸி டிராமாவாக உருவாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் குழந்தைகள் ரசிக்கும் படங்கள், அவர்களுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த ஏக்கக்தை போக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
சுதா கோங்குரா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ப்ரியா, லட்சுமி ராமகிருஷ்ணன், ஹலிதா சமீம், கிருத்திகா உதயநிதி வரிசையில் அடுத்த பெண் இயக்குநராக இணைகிறார் எஸ்.லதா.
அவரிடம் படம் பற்றி கேட்டபோது, ”ராஜா ராணி கதைகள் என்றால் எனக்கு கொள்ளை பிரியம். சின்ன வயதில் பாட்டி, அம்மா சொல்லும் கதைகள் பல கேட்டு வளர்ந்தேன். கேட்ட கதையோடு என் கற்பனையும் சேர்த்து என் குழந்தைகள் உட்பட யாரை பார்த்தாலும் கதை சொல்லி அசத்துவது என் வழக்கம். அது கால போக்கில் படம் எடுக்கும் ஆசையெய் தூண்டியது. படம் எடுப்பதற்காக நிறைய கதைகள் கேட்டேன். நான் கதைகள் கேட்டு வருவதை பார்த்து, என்னம்மா, நீங்களே நல்ல கதை சொல்றீங்க.. நீங்களே உங்களுக்கு பிடிச்ச மாதிரி கதை ஏன் எழுத கூடதுன்னனு என் பிள்ளைங்க கேட்டாங்க.. அப்படி உருவானது தான் இந்த படம். நல்ல டெக்னீசியன்களை வைத்து ஆரம்பித்து முடித்து விட்டேன்” என்றார்.