வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது
அன்பு மயில்சாமி, நடிகை ஃபாத்திமா பாபு, கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், அம்பிகா, பிரவீண் லால் வாணி, ஷகீலா, தனஞ்ஜெயன், வசந்தபாலன், ஸ்ரீகாந்த் தேவா, வனிதா விஜயகுமார், ஜோவிகா விஜயகுமார், தயாரிப்பாளர் மதியழகன், கிரண், ஷார்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய வனிதா விஜயகுமார், ”’பிதா’ படத்தில் மதியழகனுடன் நடித்து வருகிறேன். அந்தப் படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் தான் பாலாவும், சதீஷும். அனைவரும் சினிமாவை நேசிப்பதால் இப்போது நாங்கள் நண்பர்களாகி விட்டோம்.
அம்மாவிற்கு பிறகு அம்பிகா – ஷகிலா ஆகிய இருவரை தான் அம்மாவிற்கு நிகராக பார்க்கிறேன். ஷகிலா இந்த படத்தில் நடித்திருக்கிறார். என்னை இயக்குவது அம்பிகா தான். இந்த படம் தொடர்பான பணிகள் எதுவாக இருந்தாலும் அம்பிகா அக்காவிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் செய்தேன். இன்று வரை பல தருணங்களில் எனக்கு ஆதரவாக செயல்படுபவர் அம்பிகா அக்கா தான்.
வெளிநாட்டில் அனைவரும் ஒரே இடத்தில் தங்கி பணியாற்றினோம், இந்த அனுபவம் மறக்க முடியாதது.
வசந்தபாலனின் படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அவருடைய எழுத்துக்கும் நான் மிகப்பெரிய ரசிகை. அவர் இயக்கத்தில் வெளியான ‘அநீதி ‘ திரைப்படத்தில் நடித்திருந்தேன். அவருடைய எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடமிருந்து மனிதநேயத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அவர் அமர்ந்திருக்கும் மேடையில் நானும் இயக்குநராக அமர்ந்திருப்பதை பெருமிதமாக கருதுகிறேன். என் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி.
நல்ல இயக்குநர் – பெரிய இயக்குநர்- சிறந்த இயக்குநர் – என யாராக இருந்தாலும் ஒரு படத்திற்கு அவர்தான் கேப்டன். அந்த வகையில் என் மீது நம்பிக்கை வைத்து பணியாற்றிய ஸ்ரீகாந்த் தேவாவிற்கும் நன்றி. இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் பெயருக்கு முன் ‘ரொமான்ஸிக்கல்’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
இயக்குநர் பி. வாசு சாரிடம் ‘பொண்ணு வீட்டுக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். அந்தத் தருணத்திலேயே என்னிடம் திறமை இருக்கிறது என்று கண்டுபிடித்து பாராட்டியவர் பாத்திமா பாபு அக்கா. அவர்களுக்கும் நன்றி.
சமூக வலைதளங்களில் என்னை பற்றிய விமர்சனங்களை படிப்பேன். ஆனால் கண்டுகொள்ள மாட்டேன்.
இந்தப் படத்தில் ஷகிலா பேசுவது போல் ஒரு டயலாக் இருக்கும். ‘ஒரு பொண்ணு கர்ப்பமாக இருக்கும் போது அம்மாவை விட புருஷன் கூட இருக்கணும் ‘ என பேசுவார். இது என்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த விஷயம்.
ஜோவிகாவின் தயாரிப்பில் நான் ஒரு திரைப்படத்தை இயக்குவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. ஜோவிகா கதாநாயகியாக அறிமுகமாகிறார். அவர் இரண்டு படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருக்கிறார். தெலுங்கில் சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த சுமந்த் ஆர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம் எஸ் ராஜூ ஜோவிகாவை அறிமுகப்படுத்துகிறார். அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது.
வனிதாவின் குழந்தை யார் என்பதை ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் வருகை தந்து தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.
ஜோவிகா விஜயகுமார் பேசியபோது, ”இந்த விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மேடையில் தயாரிப்பாளராக நிற்க வைத்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவர்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் இப்படம் நிறைவடைந்து இருக்காது.
இந்த விழாவிற்கு அனைவரும் வருகை தந்து, மனமார்ந்த ஆதரவை அளித்து வருவதால் தான் நாங்கள் தனியாக இல்லை என்று உணர்வு ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்தப் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் வருகிறது.
நான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறேன். இதற்காக விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டார்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் மதியழகன், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, இயக்குநர் வசந்தபாலன், நடிகை அம்பிகா, நடிகை ஃபாத்திமா பாபு, ஷகீலா உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.


