தமிழ் சினிமாவில் திகில் திரைப்படங்களுக்கான புதிய டிரெண்டை ஏற்படுத்தி, அதை தக்க வைத்துள்ள ‘பீட்சா’ பட வரிசையில் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து, நான்காம் பாகம் விரைவில் தொடங்கவிருப்பதாக தயாரிப்பாளர் சி.வி. குமார் தெரிவித்துள்ளார்.
தரமான திரைப்படங்கள் மற்றும் தேடல் உள்ள திறமைகளின் தாயகமான தனது திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மூலம் சி.வி. குமார் தயாரித்த பீட்சா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘பீட்சா 2 வில்லா’ மற்றும் ‘பீட்சா 3 தி மம்மி’ திரைப்படங்களும் தொடர் வெற்றியை பெற்றன.
மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஷ்வின் காக்குமனு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பீட்சா 3: தி மம்மி’ ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளை தொடர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு உலகெங்கும் வெற்றி நடை போட்டு வருகிறது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சி வி குமாரிடம் பேசியபோது “பீட்சா மூன்று பாகங்களின் வெற்றி ‘பீட்சா’ வரிசையின் மீது ரசிகர்கள் வைத்துள்ள அபிமானத்தையும் தரமான உள்ளடக்கத்தை என்றுமே அவர்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் தொடர்ந்து அளித்து வருகிறது. எனவே அவர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ‘பீட்சா’ நான்காம் பாகம் விரைவில் தொடங்கும். அதன் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த வியரங்களை விரைவில் தெரிவிக்கிறோம்” என்றார்.