ஜெயவேல் முருகன் இயக்கியுள்ள திரைப்படம் ‘வருணன் – காட் ஆஃப் வாட்டர்.’ ‘நீரின்றி அமையாது உலகு’ எனும் டேக் லைனுடன் தயாராகியிருக்கும் இந்த படம் வரும் 14ம் தேதி என்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
படக்குழுவினருடன் தயாரிப்பாளர் அன்புச்செழியன், இயக்குநர் சத்ய சிவா, நடிகர் கிருஷ்ணா, ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தின் தலைமை செயலாக்க அதிகாரி கவிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் ஜெயவேல் முருகன், ”நான் கே பி சார் ஸ்கூலில் இருந்து வந்தவன். இது கன்டென்ட் மூவி. தண்ணீரை பற்றிய ஒரு படம். வட சென்னை தான் கதைக்களம். ஆண்டவர் வாட்டர் சப்ளை என்ற பெயரில் மதுரையிலிருந்து இங்கு வந்து தண்ணீர் கேன் சப்ளை செய்பவராக ராதாரவி நடித்திருக்கிறார். ஜான் வாட்டர் சப்ளை என்று சென்னையிலே பிறந்து சென்னையில் வாட்டர் சப்ளை செய்பவர் சரண் ராஜ். இந்த இரண்டு பேருக்கு இடையே நடைபெறும் மோதல் தான் படத்தின் கதை.
ஐம்பூதங்களை பற்றிய ஒரு கதை தான் இது. நாம் என்றைக்கு தண்ணீரை காசு கொடுத்து வாங்க ஆரம்பித்தோமோ அன்றிலிருந்து இந்த இயற்கையின் சாபம் நம்மை துரத்த ஆரம்பித்து விட்டது. அதுதான் இந்த படத்தின் டேக் லைன், ஒன் லைன்.
இதில் தண்ணீரைப் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். தண்ணீர் கேன் சென்னைக்கு 95ம் ஆண்டில் அறிமுகமானது. அதன் பிறகு அது மிகப்பெரிய வியாபாரம் ஆகிவிட்டது. நல்ல சுத்தமான தண்ணீர் எங்கும் கிடைக்கவில்லை. அதுதான் உண்மை. தண்ணீர் சேமிப்பு குறித்து எங்களால் முடிந்தவரை இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். தண்ணீரால் வரும் பிரச்சனைகளை பற்றியும் சொல்லி இருக்கிறோம்.
எல்லோரும் எல்லா வேலையும் செய்கிறார்கள். நான் என்னுடைய நண்பனின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை தழுவித்தான் இப்படத்தின் கதையை எழுதி இருக்கிறேன். அனைவரும் இந்தத் திரைப்படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ஆதரவு தாருங்கள். நீரின்றி அமையாது உலகு” என்றார்.
நடிகர் ராதாரவி, ”இந்த படத்தின் ஹீரோ நடிகர் ஜெயப்பிரகாஷின் மகன் என்றதும் சந்தோஷமாக இருந்தது. தண்ணீர் கஷ்டம் கடுமையாக இருக்கிறது. அதை வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார்கள். படம் நிச்சய வெற்றி பெறும்” என்றார்.
நடிகை கேப்ரியல்லா பேசுகையில், ”படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் சிட்டு. வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை வைத்து எந்தவித டிராமாவும் இல்லாமல் அழகான சினிமாவை உருவாக்கி இருக்கிறோம். உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மார்ச் 14ம் தேதி அன்று வெளியாகும் வருணன் திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகர் துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ”வருணன் படத்தில் முதன்முறையாக கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன். இப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நினைவில் இருக்கிறது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் இரண்டு பயங்களை வென்றிருக்கிறேன். முதலில் எனக்கு உயரம் என்றால் பயம். ஆனால் இந்த படத்தில் 120 அடி உயரத்தில் சண்டைக் காட்சிகள் நடித்திருக்கிறேன். டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் என்றாலும் பயம்.
அவருடைய இயக்கத்திலும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறேன். இதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் தினேஷ் மாஸ்டருக்கும், ஸ்ரீதர் மாஸ்டருக்கும் நன்றி. இப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகர் கிருஷ்ணா, ”இது எங்களுடைய ஃபேமிலி ஃபங்ஷன். என் தம்பி சங்கர் நாக் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து எல்லா விஷயமும் எனக்குத் தெரியும். என்னை பொருத்தவரை சின்ன படம் பெரிய படம் என்று எதுவும் இல்லை. ஓடும் படம்.ஓடாத படம் இந்த இரண்டு தான் இருக்கிறது. நல்ல கதை என்றால் அனைவரும் ஆதரிப்பார்கள். கதை நன்றாக இருந்தால் தான் ராதாரவி நடிப்பார். இந்த படத்தில் ராதாரவியும் நடித்திருக்கிறார். நான் இந்த படத்தை பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் கார்த்திக் ஸ்ரீதரன், பாடலாசிரியர் ஹைடு கார்த்தி, நடிகர் சங்கர் நாக் விஜயன், ஸ்ரீதர் மாஸ்டர், ஆஹா சிஇஓ கவிதா, தயாரிப்பாளர் அன்புச்செழியன், இசையமைப்பாளர் முரளி, நடிகர் ஜெயப்பிரகாஷ், நடிகை ஹரிப்பிரியா, இயக்குநர் சத்யசிவா, இசையமைப்பாளர் போபோ சசி உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.