சென்னையையடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ வசதி இல்லாத, மிகவும் பின்தங்கிய கிராமப்புற, ஏழை எளிய மக்களுக்காக ‘நடமாடும் மருத்துவ முகாம் ஊர்தி’ சேவையை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சேவா பாரதி அமைப்பு இணைந்து வழங்கும் நிகழ்வு கடந்த பிப்ரவரி 21; 2023 அன்று நடந்தது.
நிகழ்வுக்கு வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தலைமையேற்று, ‘நடமாடும் மருத்துவ முகாம் ஊர்தி’யை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் கனரா வங்கி இயக்குநர் நளினி பத்மநாபன், சேவா பாரதி மாநில தலைவர் ரபு மனோகர் உள்ளிட்டோர் வரவேற்புரையாற்றினர். தென் பாரத ஆர்.எஸ்.எஸ் மக்கள் தொடர்பு அமைப்பாளர் பிரகாஷ் சிறப்புரையாற்றினார்.
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.