Home சினிமா கேரக்டருக்கு ஏத்த அப்பா கிடைக்கலைன்னா இந்த படம் எடுக்க வேண்டாம்னு முடிவு செய்திருந்தேன்; அப்போதான் காளி...

கேரக்டருக்கு ஏத்த அப்பா கிடைக்கலைன்னா இந்த படம் எடுக்க வேண்டாம்னு முடிவு செய்திருந்தேன்; அப்போதான் காளி வெங்கட் இந்த கதைக்கு ஓகே சொன்னார்! -‘மெட்ராஸ் மேட்னி’ பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்திகேயன் மணி பேச்சு

சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும் அழகான டிராமாவாக கார்த்திகேயன் மணி இயக்கியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி.’

இந்த படம் வரும் ஜூன் 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் கார்த்திகேயன் மணி, ”என் அம்மா நிறைய இலக்கிய வட்டம் போவார்கள். தமிழ் மொழியின் சிறப்பை பற்றி நிறைய சொல்லுவார்கள், உண்மையிலேயே தமிழ் எவ்வளவு பழமை வாய்ந்தது என்ற கேள்வி எனக்குள் வந்தது, அதன் பிறகு நிறையப் புத்தகங்கள் படித்தேன். நம்மளோட வரலாறு இப்ப இருக்கங்களுக்கு யாருக்குமே தெரியலைன்றது எனக்கு மிகப்பெரிய வருத்தமா இருந்தது, ஒரு சில கவிதைகள வச்சே நாலு படம் எடுக்கலாம். கிட்டத்தட்ட புறநானூறே 400 கவிதை இருக்கிறது.

300ன்னு ஒரு படம் வந்திருக்கும். நீங்க எல்லாம் பார்த்திருப்பீர்கள் ரொம்ப பிரபலமான படம். எனக்கு தெரிஞ்சு அந்த படம் தமிழ் படமாகத்தான் எடுத்திருக்கவேண்டும். ஏன்னா அந்த மாதிரி கதை இங்க எவ்வளவோ இருக்கிறது. அந்த மாதிரி கதைகள் நமக்கே தெரியவில்லை. அது வந்து உண்மையிலேயே வருத்தத்துக்கு ஒரு விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன், ஏன் மத்தவங்க எடுக்கலன்றத கேக்குறத விட்டுட்டு, நான் ஏதாச்சும் பண்ணனும்னு தான் இந்தப்படம் எடுக்க முயற்சி செய்தேன். நான் ஐடில இருந்தாலும் எனக்கு வந்து சினிமா மேல பயங்கரமான பேஷன் உண்டு. அதன் தொடக்கமாகத் தான் இந்தக்கதை எழுதினேன்,

நான் வாழ்க்கையில் சந்தித்த, பார்த்த அனுபவங்கள் தான் இந்தப்படம், ஒரு அப்பா பசங்களுக்காக நாய் மாதிரி ஓடுறாரு. திடீரென்று பார்த்தா பசங்களுக்கும் அவருக்கும் ஒரு கேப் இருக்கு. அந்த அப்பாவிற்கு எவ்வளவு வலிக்கும். இந்தக் கதையை நான் எழுதி முடித்த பிறகு, ஒரு நல்ல அப்பா கிடைக்கவேண்டுமென்று நான் வலைவீசி தேடிட்டு இருந்தேன். சரியான அப்பா கிடைக்கலைனா இந்தப்படம் எடுக்க வேண்டாமென்று முடிவு செய்திருந்தேன் அப்போதுதான் காளி சார் இந்த கதைக்கு ஓகே சொன்னார், காளி வெங்கட் நடிப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை, காளி வெங்கட் சாரோட நடிப்பு எல்லாமே ரொம்ப உண்மையா இருந்தது.

ஷெல்லி, விஷ்வா, ரோஷினி எல்லோரும் உங்க வாழ்க்கையைப் பார்ப்பது போலவே நடிப்பைத் தந்துள்ளார்கள். சத்யராஜ் சார் கேரக்டர் இந்த டிரெய்லர்ல மிடில் கிளாஸ் லைஃப்ல என்ன இருக்கும் நோ ஆக்ஷன், நோ அட்வென்சர், நோ ரொமான்ஸ், சோ சேட், அப்படின்னு சொல்லுவார். ஆனால் இதில் எல்லாமே இருக்கும். அது உங்க லைஃப்லயும் இருக்கு. இந்த படம் மூலமா உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை ஞாபகம் வரும்” என்றார்.

நடிகர் காளி வெங்கட்  ”இந்தக் கதை சொன்னவுடனே எனக்குப் புரிந்துவிட்டது. எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்தது. எல்லோர் வாழ்க்கையிலும் இதை உணர்ந்திருப்பீர்கள், ஒரு கட்டத்தில் எல்லா அப்பாவும் தன் பிள்ளைகள் தன்னிடம் இருந்து பிரிந்து செல்வதை உணர்வார்கள், நான் அதிகம் சொல்லவில்லை படம் பார்க்கும் போது நீங்களே உணர்வீர்கள்” என்றார்.

நடிகை ரோஷினி, ”கார்த்திக் சார் கதை சொன்னபோதே என் வீட்டு ஞாபகங்கள் வந்தது, படம் பார்க்கும் போது உங்கள் எல்லோருக்கும் உங்கள் வீட்டுச் சம்பவங்கள் ஞாபகம் வரும். எனக்கு வயதானால் கூட இப்படி ஒரு படம் நான் நடித்திருக்கிறேன் எனப் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன், அந்தளவு மனதுக்கு நெருக்கமான படம் இது” என்றார்.

பாடலாசிரியர் சினேகன் ”இந்தப்படம் எடுத்து முடித்த பிறகு தான் என்னைப் பாடல் எழுதக் கூப்பிட்டார்கள், காளி வெங்கட் நாயகன் என்றார்கள். அவர் எந்தப்படத்திலிருந்தாலும் அதில் ஒரு ஈர்ப்பு இருக்கும். அவர் மிகச்சிறந்த நடிகர். இந்தப்படம் பார்க்கப் போகும் போது வியாபாரத்திற்கு ஏதாவது இருக்க வேண்டுமே என நினைத்தேன் ஆனால் அதையெல்லாம் படம் மறக்கடித்துவிட்டது. அதன் பிறகு தான் இந்தப்பாடல் எழுதினேன். வடிவேலு பாடிய அந்தப்பாடலை நீங்கள் கண்டிப்பாக ரசிப்பீர்கள்” என்றார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, நடிகர் ரமேஷ் திலக், நடிகர் கலையரசன், நடிகை ஷெல்லி, நடிகர் விஷ்வா, நடிகை கீதா கைலாசம், நடிகர் சாம்ஸ், எடிட்டர் சதீஷ்குமார், ஒளிப்பதிவாளர் ஆனந்த் ஜி. கே., இசையமைப்பாளர் பாலசாரங்கன், நிர்வாகத் தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்