பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் என் அரவிந்தன் இயக்கத்தில், ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ள படம் ‘குட் டே.’
படம் ஜூன் 27-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் பிரித்விராஜ் ராமலிங்கம் பேசியபோது, ”ஒரு படம் செய்வதாக இருந்து திடீரென அது ரத்து ஆனபோது, கையில ₹1000 தான் இருந்தது. அந்த நேரத்தில் நண்பர் அரவிந்த் ‘படம் பண்ணலாமா?’ என்றார். அப்படியே அந்த நம்பிக்கையில் ஆரம்பமானது ‘குட் டே’. அன்று நாங்கள் பேசிய ஒரு உரையாடல் தான் இந்த படத்துக்கு விதையாக அமைந்தது. பணம் இல்லாமல், நண்பர்களின் நம்பிக்கையால், உருவானது தான் இந்தப்படம். உருவாக்கப்பட்டது.
சிலர் நம்பிக்கையோடு பணம் கொடுத்தார்கள், சிலர் சம்பளம் வேண்டாமென நடித்தார்கள். எல்லோருக்கும் என் நன்றிகள். என் நண்பர் கவிஞர் கார்த்திக் நேதாவின் வாழ்க்கை, அவர் சொன்ன குடிப்பழக்கம், மனநிலை பற்றிய உண்மையிலிருந்துதான் இந்தக் கதைக்கரு பிறந்தது. 40–50 மணி நேரம் அவருடன் பேசியதிலிருந்து இப்படம் உருவானது. நான் சினிமாவுக்கு நடிகனாகவே வந்தேன். ஆனால் இந்தப் படம் என் முதல் ஹீரோ வாய்ப்பு. அந்த நம்பிக்கையை எனக்குக் கொடுத்தது என் டைரக்டர் அரவிந்த். அவர்தான் என்னை நடிகனாகவே உருவாக்கினார். அவருக்கு என் நன்றி. ரவி சார், தீபக் ராஜு, லைட்மேன் மயில் அண்ணன், யூனியன் நண்பர்கள், பாண்டிச்சேரி ஷூட்டிங் குழு, கோவிந்த வசந்தா, மதன் , டைரக்ஷன் டீம்… எல்லோருக்கும் என் உயிர் நன்றிகள். இவர்களுடைய உழைப்பும் நம்பிக்கையும் இல்லாமல் இந்தப்படம் சாத்தியமில்லை.
எஸ்ஆர் பிரபு சார் படம் பார்த்து நிம்மதியா தூங்குங்கன்னு சொன்னார். குகன் சார், ராஜமுருகன், பாலாஜி அண்ணன், ஜிதேஷ் (Trend Music) எல்லோரும் இந்த படத்தைத் திரைக்குக் கொண்டு வர துணைநின்றார்கள். ஜூன் 27, ‘குட் டே’ திரையரங்கில் வெளியாகிறது. இது நம்ம எல்லாருடைய பயணமும், கனவுகளும் இணைந்த ஒரு உண்மையான கலைச்சோதனை. உங்கள் ஆதரவும், அன்பும் இந்தப் படத்திற்குத் தேவை” என்றார்.
திரைக்கதை எழுத்தாளர் பூர்ணா ஜே.எஸ். மைக்கேல் பேசியபோது, ”இது மூன்று வருடம் கஷ்டபட்டு செய்த படம், அனைவரும் நண்பர்கள், எல்லோரும் சிறப்பாக உழைத்துள்ளோம். ரொம்ப பெரிய படம் இல்லை. ரொம்ப சின்ன படம். ஆனால் ரொம்ப அழகான படம். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா அவரோட கதையை ஒரு முறை சொன்னார். அதிலிருந்து உருவானது தான் இந்த ஒன்லைன். இந்தப்படம் என்டர்டைனும் பண்ணும். உங்களை எங்கேஜும் பண்ணும். இந்தப்படத்தில் புதிதாக ஒன்றை முயற்சி செய்துள்ளோம். இன்டர் கட் இல்லாமல் முழுப்படத்தை சொல்ல முயற்சி செய்துள்ளோம். முதல் ஒரு ரெண்டு நிமிஷம் மட்டும்தான் இன்டர் கட் இருக்கும். அதன் பிறகு முழுக்க கட் ஆகாது. கேமரா ஒரு கேரக்டரை ஃபாலோ செய்யும். இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.
இந்தக்கதை குடி மட்டும் கிடையாது. அந்த குடியால பல மனநிலைகள் பல வாரியா பல அடுக்குகளா மாறும். அந்த மாதிரியான ஒரு பல அடுக்குகள் கொண்ட ஒரு கதாபாத்திரம்தான் இந்த கதையில் இருக்கிற சாந்தகுமார். எழுத்துக்கு வாய்ப்பளித்த என்னுடைய ப்ரொடியூசர் என்னோட டைரக்டர் இருவருக்கும் நன்றி. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்” என்றார்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, நடிகர் கலை இயக்குநர் விஜய் முருகன்,ஜீவா சுப்பிரமணியம், ஒளிப்பதிவாளர் எடிட்டர் மதன் குணாதேவ், இயக்குநர் அரவிந்தன், இயக்குநர் பாலாஜி தரணிதரன், கலை இயக்குநர் சங்கர், இயக்குநர் ராஜுமுருகன், ட்ரீம் வாரியர்ஸ் குகன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

