அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடிக்க, எம்.கோபி இயக்கியிருக்கும் ‘யாதும் அறியான்’ படம் வரும் ஜூலை 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் கோபி, “எங்களை வாழ்த்த வந்திருக்கும் பெரியவர்களுக்கு நன்றி, அனைவருக்கும் தனி தனியாக நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், நேரம் இல்லாததால் ஒட்டுமொத்தமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெளிச்சத்தில் என்னை பேசவைத்த மற்ற டெக்னீஷியன்களுக்கு நன்றி. செளந்தரராஜன் பிரதர் பேசும் போது நிறைய எதிர்ப்புகள் வந்தது, நாம எதிர்ப்புகளையும், எதிர்மறைகளையும் கடந்து செல்வோம், நம்பிக்கையுடன் இருங்க. விஜய் சாரின் விசயம் எதற்காக வைத்தீர்கள் என்று கேட்டார்கள், நிறைய மீம்ஸ் கூட வந்தது. இந்த காட்சிகள் படத்தில் இருக்காது, நீக்கிடுவாங்க என்று சொன்னாங்க. நீங்க டிரைலரில் என்னவெல்லாம் பார்த்தீர்களோ அது அனைத்தும் படத்தில் இருக்கும். என்னை பற்றியும், படம் பற்றியும் பேசும் போது எனக்கு பயமாக இருந்தது. அதனால், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி படம் பார்க்க வாங்க.
இந்த படத்தை குறிப்பிட்ட ஒரு பட்ஜெட்டில் செய்ததால், ஒரு காட்சியில், ஒரு பேப்பர் போஸ்டரில் வைத்தேன், பெரிய பட்ஜெட்டாக இருந்தால் கிராபிக்ஸ், ஏஐ மூலம் அவரை காண்பித்திருப்பேன், பான் இந்தியா படமாக இருந்தால் முதல்வராக அல்லாமல் அவரை பிரதமராக காட்டியிருப்பேன். அதனால், விஜய் சாரின் ரெபரன்ஸ் எனது அடுத்தடுத்த படங்களில் இருக்கும். எங்கள் படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. சக்சஸ் மீட்டில் சந்திப்போம்” என்றார்.
படத்தின் நாயகன் தினேஷ், “நான் இப்படி இரத்த கரை படிந்த சட்டையுடன் வருவதற்கு இயக்குநர் தான் காரணம், படம் வெளியாகும் வரை நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இயக்குநர் சொல்லிவிட்டார். இந்த ஒரு நிமிஷத்துக்காக தான் இத்தனை வருடங்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன்.
நானும் மீடியா ஃபேமிலியில் இருந்து தான் வந்திருக்கிறேன், நீங்கள் எனக்கு உத்துழைப்பு கொடுத்து இந்த படத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும். இந்த கதையை இயக்குநர் என்னிடம் பீல் பண்ணி சொன்னார், அதனால் தான் நான் ஒத்துக்கொண்டேன். விஜய் விசயம் பற்றி சொன்ன போது, வேண்டுமா என்று கேட்டேன். ஆனால், அவர் ஏற்கனவே செய்து வைத்தது என்று சொன்ன போது, நான் ஓகே சொல்லிவிட்டேன். நான் உங்க வீட்டுப்பிள்ளை, என்னை உச்சத்திற்கு கொண்டு செல்லவில்லை என்றாலும், ஒரு நல்ல நடிகர் என்ற இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் புதுமுகங்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்கள் தான், அவர்களுக்கு நீங்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்க இங்கு வந்தது எனக்கு பூஸ்ட் போல் இருக்கிறது” என்றார்.
இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ் பாபு, “தினமலர் குடும்பத்தில் இருந்து அம்பி, ரெமோ வருவார் என்று எதிர்பார்த்தால் அந்நியனே வந்திருக்கிறார். இன்று சைவத்தை விட அசைவம் தான் டிரெண்டாகி விட்டது. அதனால், அசைவமாகவும், கமர்ஷியலமாகவும் ஒரு படம் கொடுப்போம், என்று திட்டமிட்டு தினேஷ் சார் ஒரு படம் நடித்திருக்கிறார். இன்றைய சூழ்நிலைக்கு எப்படிப்பட்ட படம் ஜெயிக்கமோ அப்படி ஒரு படத்தை தினேஷ் சார் கொடுத்திருக்கிறார், அவருக்கு வாழ்த்துகள்” என்றார்.
நடிகர் செளந்தரராஜா, ஒளிப்பதிவாளர் எல்.டி, இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கஸாலி, நடிகர் ஆனந்த் பாண்டி, நடிகர் சம்பத் ராம், இயக்குநர் பேரரசு , படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுபாஷ், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்துகொண்டு படம் பற்றி பேசினார்கள்.


