ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடித்துள்ள ‘டீசல்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17-ம் தேதி வெளியாகவிருக்கிறது. முன்னதாக படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் சண்முகம் முத்துசாமி, “‘டீசல்’ படம் ஆரம்பித்ததில் இருந்து வெளியீடு வரை எந்த சோர்வும் இல்லாமல் இன்முகத்தோடு உழைத்த நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், பிரேம்குமார், தங்கதுரை மற்றும் என்னுடைய குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஓப்பனிங் பாடல் பாடி கொடுத்த நடிகர் சிலம்பரசனுக்கு ஸ்பெஷல் நன்றி.
இந்த காலத்தில் எங்களை நன்றாகப் பார்த்துக் கொண்ட தயாரிப்பாளர் தேவராஜுலு மார்கண்டேய சாருக்கு நன்றி. காதல் படங்கள், ஃபேமிலி சப்ஜெக்ட் எல்லாம் நிறைய பார்த்தாச்சு. ஏதாவது புதிதாக கதை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் பெட்ரோல் பங்க்கில் நின்ற டேங்கர் லாரியிலிருந்து பக்கெட் பக்கெட் ஆக பெட்ரோல், டீசலை சிறுவர்கள் திருடி கொண்டிருந்தார்கள். அவர்களை பின்தொடர்ந்து சென்ற போது தான் இந்த அதிர்ச்சிகரமான உலகம் பற்றி தெரிய வந்தது. இதையே படமாக்கலாம் என்று உருவானதுதான் ‘டீசல்’. இதற்குப் பின்னால் இருக்கும் விஷயங்கள் பற்றி நாங்கள் நிறைய தெரிந்து கொள்ள முயற்சித்தபோது உயிர் பயம் வரை அச்சுறுத்தல் நிகழ்ந்தது. இந்த மாஃபியாவால் ஒரு சாதாரண மனிதன் எந்த அளவிற்கு நேரடியாக பாதிக்கப்படுகிறான் என்பதை இதில் சொல்லியிருக்கிறோம். இந்த ‘டீசல்’ படத்தில் நிறைய ரகசியங்கள் இருக்கிறது.
டேங்கர் லாரியில் இருந்து எண்ணெய் கொட்டுவது போல தயாரிப்பாளர் தேவராஜூலு சார் இந்தப் படத்திற்காக பணம் கொட்டியிருக்கிறார். ‘பாகுபலி’, ‘கத்தி’ போன்று அடுத்தடுத்து ரூ. 100 கோடி வசூல் செய்யும் பெரிய படங்களை நீங்கள் தயாரிக்க வேண்டும். தீபாவளிக்கு ‘டீசல்’ படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
நடிகர் ஹரிஷ் கல்யாண், “ஆக்ஷன் படங்கள் மீது எனக்கு அதீத விருப்பம் உண்டு. ஆனால், அதற்கான சரியான கதை வரும் வரை காத்திருந்தேன். அப்படியான கதையாக எனக்கு ‘டீசல்’ அமைந்தது. தங்கத்தை விட அதிக மதிப்பு மிக்கதாக பார்க்கப்படும் எரிபொருள் உலகத்திற்கு பின்னால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை இந்த கதை சொல்லி இருக்கிறது. மக்கள் இந்த படத்தை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். படத்தின் டிரைலர் வெளியான போது பெரிதாக யாரும் திட்டவில்லை. அதுவே எங்களுக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது. ஆக்ஷன் படத்திற்கான சரியான மீட்டரை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறேன் என்று டிரைலர் பார்த்த பலரும் பாராட்டினார்கள். பெட்ரோல், டீசல் என எளிய மக்களின் வாழ்வில் முக்கிய இடம் வகிக்கும் இந்த பொருளுக்கு பின்னால் இப்படியான மாஃபியா நடக்கிறதா என்பதை கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கான படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சினிமாவை உண்மையாக நேசிக்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்காகவே இந்த படம் ஜெயிக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த படத்திற்காக 30 நாட்களும் மேலாக கடலில் ஷூட் செய்து இருக்கிறோம். இந்த சமயத்தில் எங்களுக்கு உதவிய அத்தனை மீனவர்களுக்கும் நன்றி. அதுல்யாவும் சூழலை புரிந்து கொண்டு நடித்துக் கொடுத்தார். படத்தில் இரவு பகல் பாராமல் உழைத்த தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதே என் நோக்கம். தீபாவளிக்கு என் படம் வருவது பெரும் மகிழ்ச்சி. எங்களுடைய முயற்சிக்கு உங்களுடைய ஆதரவும் அன்பும் தேவை” என்றார்.
நடிகர் விவேக் பிரசன்னா, “தயாரிப்பாளர்கள் தரப்பு, இயக்குநர் சண்முகம், ஹீரோ ஹரிஷ் கல்யாண் என இவர்கள் எல்லோருக்கும் இந்த படம் எவ்வளவு முக்கியமானது மனப்போராட்டத்தையும் ஆர்வத்தையும் கொடுத்தது என்பது எனக்கு தெரியும். சரியான தருணத்திற்காக இந்த படம் காத்திருந்தது. பல தலைமுறைகளிடமிருந்து அரசியல் சூழல் பெரும் சொத்தை சுரண்டி அவர்களுக்கே தெரியாமல் எப்படி அவர்களை பலியாக்கினார்கள் என்பதை இந்த படம் சரியாக காட்டி இருக்கிறது. எரிசக்தி தொடர்பான அரசியல் பேசும் படமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாகவும் இது இருக்கும். கரியரின் ஆரம்பத்தில் இருந்தே ஹீரோவாக மட்டுமல்லாது சரியான கதையில், தான் பொருந்திப் போகிறோமா என்பதில் ஹரிஷ் கல்யாண் கவனம் செலுத்தியதால்தான் தற்போது அவருடைய படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. 11 கோடி ரூபாய் எந்த ஹீரோ மீது முதலீடு செய்யலாம் என யோசிக்கும் பட்டியலில் ‘டீசல்’ படத்திற்கு பிறகு நிச்சயம் ஹரிஷ் கல்யாண் இணைவார். அதுல்யா, வினய், ரிச்சர்ட் சார், உடன் நடித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் வினய், “என் கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருக்கும். படம் நன்றாக வந்திருக்கிறது” என்றார்.
நடிகை அதுல்யா, ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட், எடிட்டர் சான் லோகேஷ், கலை இயக்குநர் ரன்வன், நடிகர் தங்கதுரை, நடிகர் பிரேம்குமார், நடிகர் ஜார்ஜ், நடிகர் மேத்யூ, நடிகர் ரமேஷ், நடிகர் ரிஷி ரித்விக், நடிகர் தீனா, இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

