ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிப்பில் வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள ‘ஃபோர்த் ஃப்ளோர்’ திரைப்படம், வரும் பிப்ரவரி 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, பா ரஞ்சித், விஜய் ஆண்டனி ஆகியோர் சமூக வலைத்தளம் வழியே இன்று வெளியிட்டனர்.
டிரெய்லர் ஆரம்ப கட்டத்தில் ஒரு அபார்ட்மெண்டில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை காட்டுகிறது. ஹாரர் படம் என்று நினைக்கையில் அப்படியே தடம் மாறி, கொலைகளை அதன் விசாரணைகளைக் காட்டி ஒரு அசத்தலான திரில்லர் அனுபவமாக நிறைவு பெறுகிறது. கனவு, கொலைகள், விசாரணை என வெவ்வேறு பாதைகளில் கதை பயணிக்கிறது. ஒரு புதுமையான திரில்லர் அனுபவத்தை உறுதி செய்யும் இந்த டிரெய்லர், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் ஆரி அர்ஜுனன் நடித்த இந்த படம் அவருடைய நெடுஞ்சாலை, மாயா, ரெட்டைச் சுழி போன்ற குறிப்பிடத்தகுந்த வெற்றிப் படங்களின் வரிசையில் அமையும். மார்கன், மார்க் படங்களில் நடித்த தீப்ஷிகா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். பவித்ரா, சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த இந்த திரைப்படம் கனவுகளுக்கும் நிஜவாழ்க்கைக்கும் இடையே இணைக்கும் பாலமாக எழுதப்பட்டுள்ளது. தீர்க்கதரிசி என்ற திரைப்படத்தை பரபரப்பாக இயக்கியிருந்த எல். ஆர். சுந்தரபாண்டி அதே வேகத்தில் ஃபோர்த் ஃப்ளோர் படத்தை இயக்கியுள்ளார் என அதன் டிரைலரில் தெரிகிறது. தணிக்கை செய்யப்பட்ட இந்த படம் யூ ஏ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளது.
முகம் சுளிக்க வைக்காத,காட்சிகளுடன் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படமாக இந்தப்படம் இருக்கும், பிரச்சனைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கும் நாம் தான் கவனமாக இருக்கவேண்டும் என்ற கருத்தை அதன் திரைக்கதை போக்கிலேயே சொல்லியிருக்கிறது என்றார் இயக்குநர் எல். ஆர். சுந்தரபாண்டி.



