Home சினிமா திரைப்பிரபலங்கள் பங்கேற்பில் 18-வது எடிசன் விருதுகள் நிகழ்வின் முன்னோட்ட நிகழ்வு!

திரைப்பிரபலங்கள் பங்கேற்பில் 18-வது எடிசன் விருதுகள் நிகழ்வின் முன்னோட்ட நிகழ்வு!

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான கலைஞர்களை தேடி கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் நடிகர் ராதாரவி பேசியதாவது, “18 வருடங்களாக எடிசன் விருதுகள் விழா நடந்து வருவது பெருமையான விஷயம். செல்வகுமாரை எனக்கும் இத்தனை வருடங்களாக தெரியும். இன்னும் பல ஆண்டுகள் அவர் இந்த விருது விழாவினை நடத்த வேண்டும். சினிமாவில் இருப்பதே பெருமையான விஷயம். அத்தகைய சினிமாத்துறையினருக்கான அங்கீகாரமாக இந்த விழா நடப்பது மகிழ்ச்சி”

டாக்டர் சிஎம்கே ரெட்டி, “பல சாதனைகள் வேதனைகள் தாண்டி ஒரு அமைப்பு 18 வருடங்களாக நடப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கே செல்வகுமாருக்கு வாழ்த்துக்கள். மருத்துவ துறையும், சினிமாத்துறையும் சந்திக்கும் ஒரு பொது பிரச்சினை நடைமுறை வாழ்க்கை சிக்கல்கள்தான். சமூகத்தை கெடுக்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுதல் போன்றவற்றை ஊக்குவிக்கும் விதமாக படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும்”.

இயக்குநர் விக்ரமன், “எடிசன் விருதுகள் விழாவில் கலந்து கொள்வது பெருமையான தருணம். என் மகன் சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் விருது வென்றான். அடுத்து அவன் நடிக்கும் படங்களுக்காக சிறந்த நடிகருக்கான எடிசன் விருது வெல்ல வேண்டும் என்பது என் விருப்பம். ஃபிலிம்ஃபேர் விருது, தேசிய விருது, தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் போல எடிசன் விருதும் பெருமைக்குரிய விருது. இந்த விருது விழா இன்னும் பல உயரங்கள் அடைய வேண்டும் என்பது என் விருப்பம்”.

நடிகர் ஜெகன், “எடிசன் விருது விழாவை மூன்று வருடங்கள் தொடர்ந்து தொகுத்து வழங்கியிருக்கிறேன். பலருக்கும் இந்த விருது உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. ராதாரவி சாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதற்கு சிறந்த உதாரணம் அவர் நடித்த ‘சின்ன மாப்பிள்ளை’ என்ற திரைப்படம். அம்பிகா மேமுக்கு நான் பெரிய ரசிகன். அவரது எல்லா படங்களும் எனக்கு பிடிக்கும். விக்ரமன் சாரின் படங்களும் எனக்கு பிடிக்கும். 18 வருடங்கள் எட்டியிருக்கும் எடிசன் விருது விழாவுக்கு வாழ்த்துக்கள்”.

நடிகை அம்பிகா, “18 வருடங்களாக நடக்கும் இந்த விருது விழாவுக்கு வாழ்த்துக்கள். செல்வாவை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். படப்பிடிப்பை பொருத்து விருது விழாவுக்கு வருகிறேன் என சொல்லியிருந்தேன். சரியான தருணமும் அமைந்தது. ராதாரவி அண்ணன் எனக்கு குடும்பம் போல. விழாவில் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி”.

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, “நாங்கள் இன்று இவ்வளவு தூரம் வளர்ந்து நின்றாலும் சினிமாத்துறைக்கு வந்த ஆரம்ப காலத்தில் இயக்குநர் தவிர வேறு யாரேனும் நமது பணியை பாராட்ட மாட்டார்களா, அங்கீகரிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். அப்படியான திறமையானவர்களை கண்டுபிடித்து எடிசன் விருதுகள் கொடுப்பது மகிழ்ச்சியான விஷயம். என்னுடைய ‘சித்திரை செவ்வானம்’ படத்திற்கும் எடிசன் விருது வாங்கியிருப்பது மறக்க முடியாத ஒன்று. ராதாரவி சார், விக்ரமன் சார், அம்பிகா மேம் போன்ற பல முன்னோடிகளால்தான் நாங்கள் இங்கிருக்கிறோம். விருது வென்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

பாடகர் அந்தோணிதாசன், “இந்த விருது விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி. ஆரம்ப காலத்தில் நான் பாடியபோது சுற்றி இருந்தவர்களின் கைத்தட்டல்தான் எனக்கு பெரிய உற்சாகம். திரைத்துறைக்கு வந்த பிறகு விருதுகள்தான் அந்த உற்சாகத்தை கொடுத்தது. என்னைப் போன்றவர்களை கெளரவிக்கும் எடிசன் விருது விழாவிற்கு எனது வணக்கங்கள்”.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், “18 வருடங்களாக நடக்கும் விருது விழாவிற்காக உலகம் முழுவதும் உள்ளவர்களை ஒருங்கிணைப்பது சாதாரண விஷயம் இல்லை. சித்தாந்த ரீதியாக ராதாரவி அண்ணனுடன் முரண்பட்டாலும் அவர் மிகவும் அன்பானவர். என்னை பல இடங்களில் முன்னிறுத்தி பேசியிருக்கிறார். திரைத்துறையில் பல நண்பர்கள் எனக்கு இருந்தாலும் என்னை அடையாளம் கண்டு பொதுவில் பாராட்டியவர் ராதாரவி அண்ணன் தான். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மழைநீர் சேகரிப்பு திட்டம், லாட்டரி தடை சட்டம் இதெல்லாம் என்னுடைய சாதனைகள். அதெல்லாம் பேசுபொருளாக மாறவில்லை. அதற்கான அங்கீகாரத்தை ஆட்சியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஆனால், அதன் மையக்கரு நான் தான். இதை பொதுவில் சொல்லி பாராட்டியவர் ராதாரவி அண்ணன், தமிழ்நாட்டில் வாழுகிற மக்களுக்காகவும், உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்களுக்காகவும் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் பேரியக்கம் தான் தமிழக வாழ்வுரிமை கட்சி. விருது வென்றவர்களுக்கும் விருது விழாவிற்கு வருகை தந்திருக்கும் ராதாரவி, விக்ரமன், அம்பிகா உள்ளிட்ட அனைவருக்கும் என் வணக்கங்கள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்