Home பொது வைப் வித் அரவிந்த்… உலக இசை தினத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் ராக்ஸ்டார் அனிருத் கொண்டாட்டம்!

வைப் வித் அரவிந்த்… உலக இசை தினத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் ராக்ஸ்டார் அனிருத் கொண்டாட்டம்!

வைப் வித் அரவிந்த்… உலக இசை தினத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் ராக்ஸ்டார் அனிருத் கொண்டாட்டம்!
உலக இசை தினத்தை முன்னிட்டு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்ற ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரனின் ‘வைப் வித் அரவிந்த்’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பி்த்தனர்.
பிராண்ட் அவதார் மற்றும் அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ், யுனிவர்சல் மியூசிக் இந்தியா மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூவுடன் இணைந்து வழங்கிய இந்த நிகழ்வில் இந்தியாவின் செல்வாக்கு பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத்தின் இசையை கொண்டாடப்பட்டது.
‘மொட்டமாடி மியூசிக்’ குழுவினர் அனிருத்தின் பிரபலமான பாடல்களை உற்சாகத்துடன் இசைத்து ரசிகர்களை மகிழ்வித்ததோடு அந்த மாலைப்பொழுது தொடங்கியது. டிஜே தீபிகா தனது துள்ளலான இசை மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
‘ராக்ஸ்டார்’ அனிருத் வருகைக்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அரங்கம் நிறைந்த ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் அனிருத் மேடைக்கு வந்தார். ‘அரவிந்த்’ மற்றும் தனது மிகவும் பிரபலமான ஹிட் பாடல்களை அவர் பாடியபோது அரங்கம் உற்சாகத்தில் திளைத்தது. அந்த மாலைப்பொழுது இசை, கொண்டாட்டம் மற்றும் ரசிகர்களின் உற்சாகம் நிறைந்த பிரம்மாண்ட நிகழ்வாக மாறியது.
நிகழ்வில் பேசிய அனிருத், எக்ஸ்பிரஸ் அவென்யூவுடனான தனது நீண்டகால உறவை நினைவுகூர்ந்தார். சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு உலகளவில் டிரெண்டான ‘ஒய் திஸ் கொவெறி டி’ பாடலின் வெற்றியின்போது இதே இடத்திற்கு வந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். தற்போது தனது சுயாதீன இசை நிறுவனமான அல்புகெர்கி ரெக்கார்ட்ஸின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’தை கொண்டாட அதே இடத்திற்கு மீண்டும் வந்துள்ளது சிறப்பான தருணம் என்றார்.
’அரவிந்த்’ ஆல்பம் உருவான கதை பற்றியும் அவர் பேசினார். தனது நெருங்கிய நண்பரான அரவிந்துக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே இந்தப் பாடல் உருவாக்கப்பட்டதாகவும், மேலும் இது தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான மற்றும் இசைப்பயணத்தில் முக்கியமான மைல்கல் என்றும் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் பல நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய அனிருத், தனது விருப்பமான நகரம் எப்போதும் சென்னைதான் என குறிப்பிட்டார். சென்னை ரசிகர்களின் அன்பு, எனர்ஜி மற்றும் உற்சாகத்திற்கு ஈடு இணையில்லை என்றும், இந்த நகரம் எப்போதும் தனக்கு ஸ்பெஷல் என குறிப்பிட ரசிகர்கள் அவரை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். மேலும், இந்த சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்த பிராண்ட் அவதார், எக்ஸ்பிரஸ் அவென்யூ, அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கும் அனிருத் நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ரசிகர்களின் பங்கேற்பு அமைந்தது. பல்வேறு கலந்துரையாடல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் ரசிகர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டதுடன், அனிருத் வால் ஆஃப் ஃபேமில் தங்களது வாழ்த்துகள் மற்றும் நினைவுகளை பதிவு செய்தனர். யுனிவர்சல் மியூசிக் இந்தியாவுடனான தனது பார்ட்னர்ஷிப்புடன் அசல் இசை, படைப்புரிமை மற்றும் வளர்ந்து வரும் திறமைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் அனிருத்தின் சுயாதீன இசை நிறுவனமான அல்புகெர்கி ரெக்கார்ட்ஸுக்கும் இந்த நிகழ்வு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு வந்து அனிருத் மீது அன்பு காட்டியதோடு, மக்களை ஒன்றிணைப்பதில் இசைக்குள்ள ஆற்றலையும் இந்நிகழ்வு நிரூபித்தது. இந்நிகழ்ச்சி எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தை இசை, கலாச்சாரம் மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டக் களமாக மாற்றியதோடு ரசிகர்களுக்கும் மறக்க முடியாத அனுபவமாக மாறியது.
நிகழ்ச்சி நிறைவடைந்தபோது ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தது. அதாவது, வைப் வித் அரவிந்த் வெறும் இசை நிகழ்ச்சி மட்டுமல்ல! இசை, நட்பு, நினைவுகள் மற்றும் ஒரு கலைஞருக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையிலான அழகான உறவை கொண்டாடிய நிகழ்வாக மாறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்