அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு முதலமைச்சராக நடித்துள்ள, இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலகப் பிரபலங்கள், மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள், சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் ஹெச் ராஜா பேசியபோது, எனது உடல்நலக் குறைவின் போது டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் என் அருகில் இருந்து அளித்த ஆதரவு மிக முக்கியமானது. எந்த ஒரு விஷயத்தையும் நாம் இயல்பாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன். இறைவன் அருளால் அறுவை சிகிச்சை முடிந்து வெறும் ஆறு மாதங்களிலேயே உங்கள் அனைவரின் மத்தியிலும் மீண்டும் வந்து பேசும் அளவிற்கு உடல்நலம் பெற்றுள்ளேன். இதற்காக இறைவனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் ராஜா அவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட மறந்துவிட்டார். இந்த படத்தில் நடிகர்களுக்கு எந்தவித மேக்கப்பும் போடப்படவில்லை. முற்றிலும் இயல்பான தோற்றத்திலும், எளிய உடைகளிலும்தான் நடித்துள்ளோம். இயக்குநர் மற்றும் படக்குழுவினர் கூறியபடி நடித்துக் கொடுத்துவிட்டு வந்தோம்.
சூழ்நிலைக்கு ஏற்றவாறு மிகவும் இயல்பான முறையில் இயக்குநர் டாக்டர் ராஜா , அவரது குழுவினர் மற்றும் தம்பி குரு ஆகியோர் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். வெறும் வியாபார அல்லது லாப நோக்கத்தை மட்டுமே முதன்மையாகக் கொள்ளாமல் நேர்த்தியாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் இத்திரைப்படம் மக்களிடையே நிச்சயமாகப் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.
இப்படம் மருத்துவ துறையில் பணியாற்றும் செவிலியர்கள் முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது. இப்படம் கண்டிப்பாக பெரிய வரவேற்பைப் பெறும் அனைவருக்கும் என் நன்றிகள்” என்றார்.
முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் “அனைவருக்கும் வணக்கம். முதலில், இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்புக் குழுவினருமான ராஜா அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். எங்களுடன் அரசியல் பயணத்தில் இருந்தவர், இன்று திரைத்துறையில் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். பொதுவாக திரைத்துறையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அரசியலில் இருந்த ஒருவர் திரைத்துறைக்கு வந்து ஒரு சமூகப் பொறுப்புள்ள திரைப்படத்தை உருவாக்குவது மிகவும் பாராட்டத்தக்க விஷயம்.
மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக டாக்டர் சௌந்தரராஜன் அவர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகள். மனதிற்கு நெருக்கமானவர்களைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பேசும்போது அதை மறந்துவிட்டேன். அதற்காகவும் அவர்களிடம் எனது அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் முழுவதும் மதுரையை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். மதுரையுடன் எனக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு உண்டு. எனது தந்தை எனக்கு ‘தமிழிசை’ என்று பெயர் வைத்தது கூட மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்தான். அதனால் மதுரை என்றாலே எனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட பாசம் இருக்கிறது.
இப்படத்தில் நடித்திருக்கும் எங்கள் அண்ணன் ஆளுமை ராஜா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இந்தப் படத்தில் குரு விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். குறிப்பாக மருத்துவம் சார்ந்த ஒரு முக்கியமான சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மருத்துவ விழிப்புணர்வு, சமூகப் பொறுப்பு மற்றும் நல்ல செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம்” என்றார்.
படத்தின் இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா (M.D., USA) பேசியபோது, இந்த திரைப்படத்தின் கதையை அக்கா தமிழிசை மிக அழகாக கூறிவிட்டார். இப்படம் மருத்துவ துறையை பற்றிய படம் அதோடு இன்றைய இளம் தலைமுறையை அச்சுறுத்தும் போதைப்பொருள் பழக்கம், சுயமருந்து உட்கொள்ளுதல், போன்ற முக்கிய சமூகப் பிரச்சினைகளை இப்படம் பேசுகிறது. அதே நேரத்தில் பெற்றோர், ஆசிரியர்கள், மருத்துவர்கள் கடமையை பேசுகிறது.
இப்படத்திற்காக அமெரிக்காவில் இருந்து பலமுறை வந்து பல கஷ்டங்களோடு இப்படத்தை உருவாக்கியுள்ளேன். இப்படத்தில் என் மனைவி மகள் பாடியுள்ளனர். பலர் இப்படத்திற்காக உழைத்துள்ளனர். தமிழ் சினிமாவில் பலர் நல்ல படைப்புகளுடன் வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு சரியான வாய்ப்புகளைத் தந்து அந்த தமிழ் சினிமாவில் நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்பது மட்டும்தான் எங்களது ஆசை.
இப்படத்தில் அண்ணன் ராஜா அவர்கள் மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவர் எனக்காக மட்டுமே இப்படத்தில் எந்த ஒரு சம்பளமும் வாங்காமல் நடித்துத் தந்தார். மிகச் சிறந்த உழைப்பைத் தந்திருக்கிறார். அவரைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். ஆச்சரியப்படுகிறேன். அவர் சிவாஜியைப் போல ஒரு அற்புதமான நடிப்பை இப்படத்தில் தந்திருக்கிறார். அவரை வைத்து தேவர் மகன் பார்ட் 2 எடுக்க வேண்டும் என்பது என் ஆசை. அது கண்டிப்பாக நிறைவேறும் இப்படத்தில் அவரது நடிப்பை அனைவரும் பாராட்டுவீர்கள். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி” என்றார்.
தமிழ் சினிமாவில் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை பொழுதுபோக்குடன் எடுத்துரைக்கும் படைப்புகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அந்த வரிசையில், மருத்துவ விழிப்புணர்வு, மனிதநேயம், குடும்ப மதிப்புகள், பொறுப்பான நிர்வாகம் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு சமூகச் செய்தியை வலியுறுத்தும் திரைப்படமாக ‘செய்! செய்யாதே!’ உருவாகியுள்ளது. அரசியல் நாடகமும் சமூக மருத்துவ விழிப்புணர்வும் இணைந்த தனித்துவமான படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.


