மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் விஜய் சேதுபதி பேசியதாவது…
“முதலில் அட்லி சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் எனக்கு மிகவும் நெருக்கமான உறவு இருக்கிறது. இந்தப் படத்தை தயாரிக்க அவர் முன்வந்தது மட்டுமல்லாமல், கதை கேட்ட உடனேயே ‘இந்தப் படம் உலக விழாக்களிலும், திரையரங்குகளிலும் பெரிய அளவில் பேசப்படும்’ என்று அவர் சொன்ன வார்த்தை எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. முராத் சார், அஜித் சார் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. பாலாஜி தரணீதரனை எனக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாகத் தெரியும். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘ஒரு பக்கக் கதை’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட அவருடைய படங்களைப் பாருங்கள். இத்தனை ஆண்டுகளாக ஒரு மனிதர் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பையும் மரியாதையையும் இழக்காமல் இருப்பது பெரிய விஷயம். யாராவது தன்னைப் பாதித்திருந்தாலும் அவர்களைப் பற்றி தவறாகப் பேசாத ஒரு நல்ல மனிதர். அவருக்கு இரண்டு முகங்கள் கிடையாது. அவர் ஒரு அழகான மனிதர். பாலாஜி மாதிரியான ஒருவரால்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அவரைப் போன்ற ஒரு நெருக்கமான நண்பர் எனக்கு இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.”
“லிஜோமோல் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பில் அவருடைய நடிப்பை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் திரையில் பார்த்தபோது, நாங்கள் கணவன்-மனைவியாக வாழும் அந்த வாழ்க்கை, வீடு, குழந்தை என அந்த உலகத்துக்குள் அவர் முழுமையாகச் சென்றிருந்தது தெரிந்தது. வீட்டில் இருக்கும் ஒருவரைப் போல அந்த இடத்தையும், பொருட்களையும் அவர் பயன்படுத்திய விதம் மிகவும் இயல்பாக இருந்தது. அதை எப்படி அவர் செய்தார் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. லிஜோ, உங்கள் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதேபோல் சாய் அபயங்கர் இந்தப் படத்தில் மிக முக்கியமான பங்கு வகித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அவர் வேறொரு உயரத்துக்கு சென்றிருக்கிறார். அவருடைய இசை இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம். அதே போல் அந்த சின்னப்பையன் ஆவன், கலக்கியிருக்கிறான். சகஸ்ரா இந்தக் கதையைத் தாங்கிச் செல்லும் மிக முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறார். ஆறு, எட்டு மாதங்களுக்கு முன்பு பார்த்த அந்தக் குழந்தை இப்போது எவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்று நடித்திருக்கிறது என்பதைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறான்.”
“இந்தப் படம் எப்படிப்பட்டதாக இருக்கும், என்ன மாதிரியான கதையாக இருக்கும் என்று உங்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கலாம். ஒரு பக்கம் விருதுகளைப் பெறும் படம், இன்னொரு பக்கம் மிகப்பெரிய வசூலைப் பெறும் படம் என்று இரண்டையும் எப்படி ஒரே படத்தில் சாத்தியப்படுத்த முடியும் என்ற கேள்வியும் இருக்கலாம். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘பத்தா’ பதில் சொல்லும் என்று நான் நம்புகிறேன். ஒரு வீரனும், ஒரு அறிவாளியும் சந்தித்தால் அவர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் ஒரு வீரனோ, அறிவாளியோ ஒரு அப்பாவியான மனிதனைச் சந்திக்கும்போது நடக்கும் மாயம் வேறொரு விதமானது. அந்த அப்பாவித்தனத்துக்குள் இருக்கும் அறிவை எவ்வளவு பெரிய சக்தியாலும் வெல்ல முடியாது. அந்த உணர்வுதான் இந்தப் படத்தின் அடிப்படையில் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். விஷ்ணு, பாலா, ஹரிஷ், அர்ஜுன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் வரும் ஒவ்வொருவரையும் நீங்கள் ரசிப்பீர்கள்.
படத்தைப் பார்த்து முடித்த பிறகு சபரி எனக்கு தொலைபேசியில் அழைத்து, இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னார். அந்த அளவுக்கு ஒருவர் நம்முடைய படத்தை நம்புகிறார் என்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் படம் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்று நானும் முழுமையாக நம்புகிறேன். செல்வா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், பாடலாசிரியர்கள், படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றி. யாருடைய பெயரையாவது சொல்லத் தவறியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். எல்லாரையும் திரையரங்கில் சந்திப்போம். இந்தப் படம் உங்களை நிச்சயம் மகிழ்விக்கும். நன்றி. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.”
இயக்குநர் பாலாஜி தரணீதரன் பேசியதாவது…
“‘பத்தா’ படத்தின் கதையை நான் கொரானா ஊரடங்கு காலத்தில்தான் எழுத ஆரம்பித்தேன். இந்தத் திரைக்கதையை முடிக்க எனக்கு நிறைய காலம் எடுத்துக்கொண்டது. முடித்தவுடன் முதலில் சேதுவிடம்தான் கதையைச் சொன்னேன். அவர் அட்லியிடம் கூட்டிப்போனார். அவர் கதை கேட்டதும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல், உடனே இந்தப் படத்தைப் பண்ணலாம் என்று சொன்னார். அதன்பிறகு தயாரிப்பாளர்கள் முராத் கெதானி சார், அஜித் அந்தாரே சார் ஆகியோரிடம் கதையைச் சொன்னபோதும், அவர்களும் உடனடியாக படத்தைப் பண்ணலாம் என்று சம்மதித்தார்கள். அதனால் இந்தப் படம் உருவான பயணம் எனக்கு மிகவும் எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. படப்பிடிப்புத் தளத்தில் சேதுவும் நானும் மிகவும் நட்பாகப் பழகி, அனைவரும் ரசித்து வேலை செய்யும் சூழலை உருவாக்கினோம். நான் நினைத்த தோற்றத்தையும் கதைக்கான உலகத்தையும் சரியாக திரையில் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் செல்வகுமாருக்கு என் நன்றிகள்.”
“இந்தப் படத்தில் கலைக்குப் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. நான் ஒரு கதையை நினைத்தேன், அதை படமாக எடுத்து முடித்துப் பார்த்தபோது, ‘இந்தக் கதை இவ்வளவு பெரிய உலகமாக இருக்கிறதே’ என்று எனக்கே தோன்றியது. அதை சரியான அளவில், சுவாரஸ்யம் குறையாமல் திரையில் கொண்டு வருவதில் கலை இயக்குநர் முத்துராஜ் மற்றும் அவரது குழுவின் பங்கு முக்கியமானது. அதேபோல் சாய் அபயங்கர் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். எங்களுடைய இசைப் பயணம் வித்தியாசமானது. நான் நினைத்த எல்லைகளைக் கடந்து புதிய விஷயங்களைச் செய்ய வைத்ததற்கு சாய்க்கும் அட்லிக்கும் நன்றி. பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையையும் அவர் அற்புதமாகச் செய்திருக்கிறார். இந்தப் படத்துக்காக சாய் இன்னும் மிகப்பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.”
இந்தப் படத்தில் நடித்த லிஜோமோல், ஹரிகிருஷ்ணன், ஷாந்தி பாலச்சந்திரன், சகஸ்ரா, சாய் பிரித்வி, விஜயகோவிந்த், அர்ஜுன் சர்மா உள்ளிட்ட அனைவரும் படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் அன்பாகவும், அதே நேரத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடனும் பணியாற்றினார்கள். அவர்களுடைய நேர்மையான உழைப்பு என்னையும் இன்னும் சிறப்பாக வேலை செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வை ஏற்படுத்தியது. ‘பத்தா’ படத்தை நம்பி இருக்கும் அனைவருக்கும் இந்தப் படம் அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”



