புகழ், பிரக்யா நயன், ரவி மரியா, அஸ்வின் உள்ளிட்ட பலர் நடிப்பில், சஜோ சுந்தர் முருகேசன் இயக்கியுள்ள படம் ‘4 இடியட்ஸ்.’ இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பேசிய நடிகர் புகழ் ”இங்கு வந்திருக்கும் அனைத்து ஜாம்பவான்களுக்கும் எனது நன்றிகள். இதே சாலிகிராமத்தில் ஒரு காலத்தில் நான் வாட்டர் வாஷில் வண்டி கழுவிக் கொண்டிருந்தேன். இன்றைக்கு என்னுடைய பட ஆடியோ லான்ச் நடைபெறுகிறது. அது எனக்கு மிகவும் சந்தோஷம் . என்னுடைய நண்பர்கள் இல்லாவிட்டால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. அவ்வளவு உதவி செய்திருக்கிறார்கள். இந்த படத்தில் ரவி மரியா உள்ளிட்ட அனைவருடனும் நடித்தது எனக்கு மகிழ்ச்சி” என்றார்.
பட இயக்குனர் சஜோ சுந்தர் முருகேசன் ”நான் திரையுலருக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் என்னுடைய காட்பாதர், என் வாழ்க்கையின் எல்லாமுமாக இருப்பவர் திருப்பூர் சுப்ரமணியன். நான் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்று அவரிடம் கேட்டபோது அவர்தான் என்னை இயக்குனர் ஹரியிடம் அனுப்பி வைத்தார். அவர் உடனடியாக என்னை உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டார்.
உதவி இயக்குனராவது தான் கடினம் என்று கூறினார்கள். நான் உதவி இயக்குனர் ஆன பிறகு இயக்குனராக வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர்களை தேடி அலைந்தேன். தயாரிப்பாளரிடம் கதை சொல்ல முயன்ற போது ஹீரோ கால்ஷீட் இருக்கிறதா என்று கேட்டார்கள். ஹீரோ கால்ஷீட் இருந்தால் சொல்லுங்கள் படம் தயாரிக்கிறேன் என்றார்கள். பின்னர் ஒரு மேனேஜரை தொடர்பு கொண்டு ஹீரோவிடம் கதை சொல்ல எண்ணினேன். அவர்கள் தயாரிப்பாளர் யார் என்று கேட்டார்கள். இப்படியே இரு தரப்பிலும் நான் அலைக்கழிக்கப்பட்டேன். ஒரு கட்டத்தில் லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு கதை கூறி இயக்குனர் வாய்ப்பு பெற்றேன். 4 இடியட்ஸ் படம் மிகவும் நன்றாக உருவாகி இருக்கிறது. கமர்சியல் ரீதியாக காமெடி திரில்லர் கலந்த அத்துடன் ஒரு மெசேஜ் சொல்லும் படமாக இது உருவாகி இருக்கிறது.
புகழ், ரவி மரியா, அஸ்வின், பிரக்யா நயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு எடிட்டிங் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றி தங்களது உழைப்பை ஒட்டுமொத்தமாக இதில் போட்டிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் இப்படத்தை இயக்க எனக்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர்கள், மற்றும் திரையுலருக்கு வர காரணமாக இருந்த திருப்பூர் சுப்ரமணியம் அவர்களுக்கும் எனது நன்றி” என்றார்.
நடிகர் ரவி மரியா ”4 இடியட்ஸ் படம் எனக்கு ஒரு பெரிய தீனி. கரும்புத் தோட்டத்திற்குள் யானையை விட்டால் என்ன செய்யமோ அது போல் இந்த படத்தில் எனக்கு நடிப்பதற்கு அவ்வளவு வாய்ப்பு அமைந்தது பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். வில்லனை சுற்றித்தான் இந்த கதை நகர்கிறது. அந்த வில்லனாக நான் நடித்திருக்கிறேன்.
படத்தில் இயக்குனர் ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் என அனைவரும் கடுமையாக உழைத்து பணியாற்றியிருக்கிறார்கள். இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் விஜய் டிவியின் புகழ் மிகவும் அன்பாக மரியாதையாக பழகக் கூடியவர். எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் அதில் தற்போது புகழும் முக்கியமான நபராக இடம் பெற்று இருக்கிறார்” என்றார்.
திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியன் ”தமிழ் திரை உலகில் கடந்தாண்டு இறுதி கட்டத்தில் சிறை உள்ளிட்ட சில சிறு பட்ஜெட் படங்கள் அற்புதமாக வசூலை குவித்து தயாரிப்பாளர்களை காப்பாற்றியது. இந்த ஆண்டிலும் சிறு பட்ஜெட் படங்கள் பெருமளவில் வெளியாகி திரையுலகை செழுமையாக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 4 இடியட்ஸ் படம் கமர்சியல் ரீதியாக நன்றாக வந்திருக்கிறது. ஏற்கனவே பல்வேறு வெற்றி படங்களை லட்சுமி மூவி மேக்கர்ஸ் தந்திருக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் வெற்றி படமாக அமையும்” என்றார்.
இயக்குனர் ஆர் வி உதயகுமார் ”லட்சுமி மூவி மேகர்ஸின் தயாரிப்பாளர்கள் கே. முரளிதரன், வி. சுவாமிநாதன், ஜி வேணுகோபால் ஆகிய மூவரும் மும்மூர்த்திகள் போல் இருந்து பல்வேறு வெற்றி படங்களை தயாரித்திருக்கிறார்கள். தற்போது முரளிதரன் மகன்கள் இந்த படத்தை தயாரிக்க வந்திருப்பது சந்தோஷத்தை அளிக்கிறது. படத்தின் டிரைலர் காமெடியாகவும் கிளாமரசாகவும் இருந்தது. பட ஹீரோயின் பிரக்யா நயன் நன்றாக நடனம் ஆடி இருப்பதுடன் நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் புகழுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது.
காமெடி த்ரில்லராக வந்திருக்கும் இந்த படத்தில் ரவிமரியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் வில்லன் காமெடி, குணச்சித்திரம் என எந்த வேடமாக இருந்தாலும் அதில் அற்புதமாக நடிக்கும் மல்டி டாஸ்க் திறமை கொண்டவர். அவர் எங்களது இயக்குனர் சங்கத்திலும் முக்கிய பங்கு வகிப்பவராக இருக்கிறார். அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே வெற்றி பெற்றிருக்கிறது. நல்ல ராசிக்காரர்.
இந்த படத்தில் நடித்திருக்கும் அசோகன் சாரின் மகன் வின்சென்ட் அசோகன் தனது பங்கை நன்றாக அளித்திருப்பது டிரெய்லரிலேயே தெரிகிறது. இசையமைப்பாளரும் படத்துக்கு மெருகேற்றி இருக்கிறார் . கலைக்குமார் பாடல்கள் அற்புதமாக வந்திருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்றார்.
விழாவில் நடிகர் வின்சென்ட் அசோகன், நடிகை பிரக்யா நயன் உள்ளிட்டோர் படம் பற்றி பேசினார்கள். இயக்குநர்கள் எழில், பொன்ராம், தயாரிப்பாளர் அம்மா டி சிவா, எச். முரளி, நடிகர் நாசர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்திப் பேசினார்கள்.



