இறைவனுக்கு அன்பே பிரதானம் என்பதை உணர்ச்சித் ததும்ப போதித்த வரலாறு கண்ணப்பருடையது. அவ்வரலாற்றைப் படிப்பவர்களுக்கு நிச்சயம் ஆன்மிக உணர்ச்சி கண்களில் நீராக எழும்பும். ஆனால் அந்த வரலாற்றை அதே உணர்ச்சியோடு படமாக எடுத்துள்ளனரா?
படத்தின் இறுதியில் கண்ணப்பராக காட்டுப்படும் ஹீரோ விஷ்ணு மஞ்சு படத்தின் துவக்கத்தில் நாத்திகராக இருக்கிறார். அவருக்குள் எப்படி அம்மாம் பெரிய ட்ரான்ஸ்பிரேசன் நடந்தது என்பது தான் படத்தின் மெயின்கதை. கிளைக்கதைகளாக காதல், வாயுலிங்கம் மீட்பு, அரக்கர்களுடன் மோதல், நரபலி என பல இருக்கின்றன. ஆனால் மனதில் எதுவும் பெரிதாக ஒட்டவில்லை
நாயகன் விஷ்ணு மஞ்சு கம்பீரமாக இருக்கிறார். பல காட்சிகளில் நன்றாகவும் நடித்துள்ளார். சரத்குமார் நடிப்பைப் பற்றிச் சொல்ல புதிதாக ஒன்றுமில்லை. வழமை போல் அருமை. ப்ரீத்தி முகுந்தன் ஆக்சன் காட்சிகள், காதல் காட்சிகள், பக்தி காட்சிகள் அனைத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். மோகன்பாபு, மதுபாலா உள்ளிட்ட மற்றும் பலர் ஒகேவாக நடித்துள்ளனர். கேமியோ ரோல் ஸ்டார்ஸ் மோகன்லால், அக்ஷய குமார், பிரபாஸ், காஜல் அகர்வால் ஆகியோரும் அசத்தியுள்ளனர்
இசையாக படம், பாடல்கள் RR என அனைத்திலும் ஜோர். ஒளிப்பதிவாக படம் நல்லதொரு பிரம்மாண்டம். ஆனால் சிஜியில் மிகவும் சொதப்பியுள்ளனர். எடிட்டிங்கில் இன்னுமே எக்கச்சக்க வேலையுள்ளது போல. படம் மிகவும் நீளம்
அலைபாயும் திரைக்கதை நல்ல ஆன்மிக படத்தை அநியாயத்திற்கு சோதிக்கிறது. கண்ணப்பர் வரலாறு மட்டுமே மெயின்ஸ்ட்ரீம் சினிமாவிற்கான மாஸ் கன்டென்ட். அதை வைத்தே திரைக்கதை செய்திருக்கலாம். பிரபாஸ் வரும் காட்சிகளும் அவர் பேசும் வசனங்களுமே படத்தைக் காப்பாற்றியுள்ளது. மற்றபடி உருப்படியான படமாக மாறாமல், ஆடியன்ஸுக்கு நெருக்கடியைத் தருகிறது படம்.
கண்ணப்பர் சற்று முயன்றிருந்தால் வின்னப்பராக மாறியிருப்பார்!


