அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனீஷ்காந்த், விஜயலட்சுமி, காளிவெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘மிடில் கிளாஸ்.’ இந்த படம் வரும் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. முன்னதாக படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் , “இந்தக் கதையை பிடித்து ஒத்துக் கொண்ட டில்லி பாபு சாருக்கு நன்றி. முனீஷ்காந்த், விஜயலட்சுமி என எல்லோரின் கதாபாத்திரத்திற்கும் என்னிடம் ரெஃபரன்ஸ் உள்ளது. ராதாரவி சாரை புதுமையான கதாபாத்திரத்தில் பார்ப்பீர்கள்.
காளிவெங்கட், வேலராமமூர்த்தி, குரேஷி என எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு, இசை என தொழில்நுட்பக் கலைஞர்களும் ஈடுபாட்டோடு வேலை பார்த்தார்கள். ‘குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ கதைகளை தாண்டிய ஒரு விஷயம் இந்தப் படத்தில் இருக்கும். அடுத்து என்ன என்ற த்ரில்லோடு இந்தப் படம் இருக்கும். படத்தை நிச்சயம் தியேட்டரில் சென்று பாருங்கள்” என்றார்.
நடிகர் முனீஷ்காந்த், “கிஷோர் சார் என்னிடம் நீங்கள்தான் ஹீரோ என்றார். நான் முடியாது என்றேன். கதை கேட்டபிறகுதான் தெரிந்தது கதைதான் ஹீரோ என்று. உடனே ஒத்துக்கொண்டேன். இயக்குநர், தயாரிப்பாளர்கள், எடிட்டர், இசையமைப்பாளர் மற்றும் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப் படத்திற்கு நான் எதிர்பாராத பெரிய சம்பளம் டில்லி பாபு சார் கொடுத்தார். திறமைகளை மதித்து வளர்த்து விட்ட டில்லி பாபு சார் போன்ற பல தயாரிப்பாளர்கள் சினிமாவிற்கு தேவை. படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
நடிகை விஜயலட்சுமி, “’மிடில் கிளாஸ்’ படத்தில் ரொம்பவே ரசித்து நடித்தேன். கிஷோருக்கு நன்றி. விஜியும் அன்புராணியும் எதிர் எதிர் துருவங்கள். இந்தக் கதைக்கு முனீஷ்காந்த் சார் தவிர வேறு யாரால் நடிக்க முடியும் எனத் தெரியவில்லை. அவருடன் நடித்தது மகிழ்ச்சி. நாங்கள் நினைத்ததை விட படம் சிறப்பாக வந்திருக்கிறது. அதற்குக் காரணம் டில்லி பாபு சாரின் ஆசீர்வாதம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது, “தொடர்ந்து புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்கள் திறமையை ஊக்குவித்தவர் டில்லி பாபு சார். அவர் தயாரித்த அனைத்துப் படங்களுமே வெற்றிப் படங்கள்தான். அதற்கு காரணம் டில்லி பாபு சார் சினிமா மீது வைத்திருந்த ஈடுபாடு. அவர் கேட்டு ஓகே சொன்ன இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். உங்கள் ஆதரவு இந்தப் படத்திற்கு தேவை. கிஷோர் நல்ல இயக்குநர் என்பதை படத்தின் டிரைய்லரே சொல்கிறது. தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். முனீஷ்காந்தை கதையின் நாயகனாக பார்ப்பதில் மகிழ்ச்சி. கதையின் நாயகனாக இருந்தாலும் அவர் தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். இதுபோன்ற கதாபாத்திரத்தை தைரியமாக தேர்ந்தெடுத்து நடித்த விஜிக்கு வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் ராஜூமுருகன், “என் மனதுக்கு நெருக்கமான படம் இது. எளிமையான கதைதான். ஆனால், அது விஷயம் பெரிது. டிவி நிகழ்ச்சியில் சண்டை போடுவதை கொண்டாடும் இந்த வேளையில், கிரிக்கெட்டில் இருநாட்டு கேப்டன்கள் கைக்கொடுக்காமல் போவதை தேசபக்தி என பேசும் சூழலில் இந்தப் படம் பேசும் விஷயம் முக்கியமானது” என்றார்.
இயக்குநர் சுப்ரமணியம் சிவா, “நம் வாழ்க்கையே பணம் சம்பாதிக்கதான். அதில் இருந்து விலக முடியாது. கார்ல் மார்க்ஸ் மட்டும்தான் ஏழைகளில் இருந்து உலக வரலாறை எழுதினார். அதை எழுதிய கார்ல் மார்க்ஸ் பணத்திற்கு எப்படி கஷ்டப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோன்றுதான் ‘மிடில் கிளாஸ்’ கார்ல் மார்க்ஸூம் கஷ்டப்படுகிறார். விஜயலட்சுமி நுணுக்கமாக சிறப்பாக நடித்திருக்கிறார். பணத்திற்கான போராட்டம்தான் இந்தப் படம். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.
நிகழ்வில் படத்தின் இணைத்தயாரிப்பாளர், குட் ஷோ கே.வி.துரை, இயக்குநர் ரவிகுமார், இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன், கலை இயக்குநர் மாதவன், இயக்குநர் சதீஷ் செல்வகுமார், ஸ்ரீகுமரன் ஃபிலிம்ஸ், ராஜ்சிதம்பரம், இயக்குநர் விஜய் வரதராஜ், இயக்குநர் ஆனந்த், எடிட்டர் சான் லோகேஷ், ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசன், இயக்குநர் விஷால் வெங்கட், இயக்குநர் ஏ. வெங்கடேஷ், இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா, பாடகர் ஆண்டனி தாசன், இயக்குநர் சக்திவேல், இயக்குநர் ரவீந்திரன், நடிகர் குரேஷி, பாடகி சுப்லாஷினி, இயக்குநர் ராகவ் மிருதுத், ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி பாஸ்கர், இசையமைப்பாளர் பிரணவ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் தேவ் உள்ளிட்டோரும் நிகழ்வில் படம் பற்றி பேசினார்கள்.


