மிரள வைக்கும் அமானுஷ்ய சம்பவங்களின் அணிவகுப்பாக ‘டார்க் ஜெயண்ட்.’
கடன் பிரச்சனையில் சிக்கியிருக்கும் நாயகன், கிராமத்தில் தன் தாத்தாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் வீட்டை விற்று தன் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம் என முடிவெடுக்கிறான். கிராமத்துக்கு மனைவியோடும் தங்கையோடும் போய்ச் சேர்கிறான். தாத்தா ஒரு வார்த்தைகூட பேச முடியாதவராக, படுத்த படுக்கையாக இருக்கிறார். அந்த வீட்டுக்கு போனதிலிருந்தே அமானுஷ்யமாக விபரீதமாக சிலபல விஷயங்கள் நடக்க, அந்த தாத்தா இறந்துபோய் வெகு நாட்களாகிறது என்கிற அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது.
இப்படி ரசிகர்களை சீட்டின் நுனிக்கு நகர வைக்கும் கதையில் அமானுஷ்ய சம்பவங்களால் நாயகன் படாத பாடு படுவது, தாத்தா மரணத்துக்கு பின்னால் இருக்கிற மர்மங்கள் என விரியும் காட்சிகளில் பரபரப்புக்கும் பயமுறுத்தலுக்கும் பஞ்சமில்லை. வீட்டை விற்க முடிந்ததா? கடன் பிரச்சனைகள் தீர்ந்ததா? என்பதற்கான பதில்கள் கிளைமாக்ஸில்… இயக்கம்
அமானுஷ்யப் படங்களில் நடிப்பதென்றால் ஆதர்ஷ் மதிகாந்துக்கு குஷி மூடு வந்துவிடும் போலிருக்கிறது. கடனில் சிக்கித் தவிக்கும் மனநிலை, அமானுஷ்ய சக்தி உடலை ஆக்கிரமித்தபின் வேறொரு பரிமாணம் என நடிப்பில் வித்தியாசத்தையும் சுறுசுறுப்பையும் காட்டியிருக்கிறார்.
ஆதர்ஷின் மனைவியாக ஜோவிதா லிவிங்ஸ்டன் ஹோம்லி லுக்கும், பயமும், பதற்றமும் கலந்த நடிப்பும் அசத்துகிறது.
அருவி மதனுக்கான ஆரம்பக் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்க, அவரும் அவரது மனைவியாக வருகிற சோனியா அகர்வாலும் இணைந்து பங்களித்துள்ள காட்சிகள் மிரட்டல் ரகம்.
ஆதர்ஷின் தங்கையாக வருபவர், நண்பராக வருகிற அமுதவாணன், காவல்துறை அதிகாரியாக ரபிக் பாட்ஷா, கெஸ்ட் ரோலில் கே.பாக்யராஜ், லிவிங்ஸ்டன் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் படத்துக்கு நல்ல மைலேஜ் தருகிறது.
திக்திக் உணர்வுக்குள் தள்ளும் திகில் காட்சிகளை எந்தெந்த கோணங்களில் படமாக்கலாம் என்பதில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சங்கீத் மணிகோபால்.
பயத்தின் சதவிதத்தை அதிகரிக்க பயன்பட்டிருக்கிறது விக்னேஷ் ராஜாவின் பின்னணி இசை.
ஒரு வீட்டுக்குள் துஷ்ட சக்தியின் பிடியில் சிக்கி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடும் மூன்று பேர், நரபலி அதுஇதுவென அதிரவைக்கும் முன்கதை, ஹீரோவை ஆக்கிரமித்து ஆட்டிப் படைக்கும் சாத்தான் என நீளும் திரைக்கதை… தொழில்நுட்ப ரீதியாக மேக்கிங்கிலும் நேர்த்தி. படம் திகில் விரும்பிகளை உற்சாகக்கபடுத்தும் என்பது உறுதி.
-சு.கணேஷ்குமார்

