1980, 90களில் திருவனந்தபுரம் பின்னணியில் நடக்கிற பொலிடிகல் ஆக்சன் திரில்லர்.
கேரள முதலமைச்சருக்காக கொலைக் குற்றங்களில் ஈடுபடுவதை தொழிலாக வைத்துள்ளது கிருஷ்ணன் குட்டி தலைமையிலான கூலிப்படை. அதில் ஒரு கட்டத்தில் ஈழ விடுதலைப் போராளியான இளைஞன் வெற்றி இணைகிறார். அந்த குழுவினர் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கிற, முதலமைச்சருடன் நெருங்கிய தொடர்புள்ள ஆளுமை ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு களமிறங்குகிறார்கள். திட்டமிட்டதை செய்து முடிக்கிறார்கள்.
நாட்கள் கடந்தோடுகிறது. முதலமைச்சர் கிருஷ்ணனின் கூலிப்படையை முழுவதுமாக அழிக்க ஸ்கெட்ச் போடுகிறார்.
அதற்கான காரணம் என்ன? அந்த ஸ்கெட்சிலிருந்து கூலிப்படையும் போராளி வெற்றியும் உயிர் தப்ப முடிந்ததா? வெற்றி கூலிப்படையில் இணைந்தது ஏன்?
இப்படி பல கேள்விகளுக்கான பதில்களாய் விரிகிறது திரைக்கதை…
ஈழ விடுதலைப் போராளியாக ஆர்யா. உடற்கட்டில் பிரமாண்டமாக தெரிபவர் தங்கள் இனத்தை அழிக்க முயற்சிக்கும் இலங்கை ராணுவத்தினர் மீது அசுரனாய் பாய்வதாகட்டும், தன் கண் முன்னே தங்கையை இலங்கை ராணுவ அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்வதை தடுக்க முடியாமல் கதறுவதாகட்டும், முதலமைச்சருக்காக கொலை செய்வதாகட்டும், முதலமைச்சர் தங்களை கொன்று தீர்க்க திட்டமிட்டதும் அவரையும் அவருக்கு துணை நிற்கும் காவல்துறை அதிகாரியையும் ஒழித்துக்கட்ட வலை விரிப்பதாகட்டும் கடுமையான உழைத்திருக்கிறார்.
கூலிப்படை தலைவராக இந்திரன்ஸ் அலட்டலில்லாத உடல்மொழியில் காட்டியிருக்கும் கெத்தும் அவருடன் முரளி கோபி, தேவ் மோகன், சரத் அப்பானி கூட்டணியின் பங்களிப்பும் அசத்துகிறது.
தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்பவராக, முதலமைச்சராக விஜயராகவன், முதலமைச்சருக்காக எதை வேண்டுமானாலும் செய்பவராக, பெண் ஒருவரை கொடுமைப்படுத்தி தன் பாலியல் பசிக்கு பயன்படுத்துபவராக சுனில், முதலமைச்சரை கதிகலங்க வைக்கும் ஆளுமையாக அஸ்யூத் குமார் என கப்பட்ட தரமான நடிகர்கள். ஒவ்வொருவரும் அவரவர் ஸ்டைலில் மிரட்டியிருக்க,
சுனிலால் கொடுமைக்கு ஆளாகும் பெண்மணியாக சாந்தி பாலச்சந்திரன் பரிதாபத்தை அள்ளுகிறார்.
ரெஜினா கஸான்ட்ரா வருவது ஒன்றிரண்டு காட்சிகளிள்தான் என்றாலும் நடிப்பும் நடனனும் கவனம் பெறுகிறது. நிகிலா விமல் உள்ளிட்ட இன்னபிற நடிகர் நடிகைகள் அத்தனைப் பேருக்கும் முக்கியத்துவம் உண்டு.
அஜ்னிஷ் லோக்நாத்தின் பின்னணி இசையில் கதையோட்டத்திற்கு தேவையான அதிரடி ஆர்ப்பாட்டத்திற்கு குறையில்லை. கேரளத்தின் பசுமையான காடு, மலை, அருவி, தமிழகத்தின் பசுமை குறைந்த நிலப்பரப்பு என பல பகுதிகளில் பாய்ந்திருக்கிறது ஒளிப்பதிவாளர் யுவாவின் கேமரா.
படம் முழுக்க வன்முறை வெறியாட்டம், கொடூரமான கொலைகள் என சுறுசுறுப்பு காட்டியிருக்கும் இயக்குநர் ஜீயென் கிருஷ்ணகுமாரின் திரைக்கதையில் தமிழர்களை மோசமானவர்களாக காண்பிக்கிற நோக்கம் இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
Rating 2.5 / 5 


