கதைநாயகன் கூலிப்படை கொலைகாரன். ஒரு கட்டத்தில் திருந்துகிறான்.
ஏன் கொலைகாரனாக மாறினான்? ஏன் திருந்தினான்?
இந்த கேள்விகளுக்குப் பதில்களாய் விரியும் காட்சிகள் அத்தனையும் ரத்தச்சகதி. அந்த ரணகளத்திலும் காதல் பூக்கிறது.
நாயகன் தேஜஸ் ராஜன். அடர்ந்த தாடி மீசைக்குள் மறைந்திருக்கும் இறுக்கமான முகத்தைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. ஆயிரம் பேர் தடுத்தாலும் அதையெல்லாம் மீறி சீறிப் பாய்ந்து, ஸ்பைடர் மேன் ரேஞ்சுக்கு பறந்து சென்று கொலை செய்வதைப் பார்க்கும்போது பய உணர்வுக்குள் விழ வேண்டியிருக்கிறது. முதல் பாதி முழுக்க வசனங்கள் இல்லாமல் செயல்பாடுகள் மூலம் மிரட்டுபவர் இரண்டாம் பாதியில் சில வார்த்தைகளை இதமான குரலில் பேசுகிறார்; தனக்குள்ளும் மென்மையான மனதுண்டு என்பதை லேசாக காண்பிக்கும் முகபாவங்கள் பரவாயில்லை ரகம்.
நாயகி ஐரா அகர்வால், நீள் வட்ட முகமும் பளீர் நிறமுமாய் வலம் வருகிறார். தன் தந்தையைக் கொன்றவனை தானே கொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பதாகட்டும், கொலைகாரனை கொல்லும் வாய்ப்பு கிடைக்கும்போது தவித்துப் போவதாகட்டும் நடிப்பில் கேரக்டருக்கு போதுமான உயிரோட்டம் இருக்கிறது.
ஜார்ஜ் மரியான் கூலிப்படையை வழி நடத்துபவராக அசத்தலான கெட்டப்பில் கெத்து காட்டுகிறார். அரசியல்வாதியாக வரும் நாகிநீடு தேவைக்கேற்ப வில்லத்தனத்தில் ஈடுபட சாய் தீனா, கல்கி ராஜா உள்ளிட்டோர் கரடு முரடான மனிதர்களாக களமாடுகிறார்கள்.
மிக்கி ஜெ மேயரின் பின்னணி இசை அதிரடியான சம்பவங்கள் நிரம்பிய கதையோட்டத்துக்கு பொருத்தம்.

