கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ எனும் பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக தயாரித்திருக்கிறது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் சாதனையை படைத்திருக்கிறது.

அதையடுத்து படத்தை தயாரித்த லைகா குழுமம் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து, அமரர் கல்கியின் புகழையும், அவரது சேவைகளையும், பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் இயங்கி வரும் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்க முன் வந்தனர்.
அதையடுத்து நன்கொடையை சுபாஸ்ரன் – மணிரத்னம் இருவரும் இணைந்து கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகன் கல்கி ராஜேந்திரன் முன்னிலையில், அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் சீதா ரவியிடம் வழங்கினர். 
இந்த நன்கொடை அறக்கட்டளையின் மூலதன நிதியாதாரமாக அளிக்கப்பட்டிருக்கிறது!
இந்த செயலுக்கு, திரையுலகினர் மட்டுமல்லாமல், கல்கியின் வாசகர்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.


