இந்திய சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் முக்கியமானவரான அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய படத்தை ‘நெஞ்சுக்கு நீதி’, ‘வீட்ல விஷேசம்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ‘ரோமியோ பிக்சர்ஸ்’ தயாரிக்கவுள்ளது.
தனித்த திரைமொழியுடன், தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு முறையும் அசத்துகிற அல்போன்ஸ் புத்திரனின் ‘நேரம்’, ‘பிரேமம்’ படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்த நிலையில், தற்போது அவர் இயக்கும் புதிய படம் தமிழ் மலையாளம் என இருமொழிகளில் உருவாகிறது.இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த புதிய படத்திற்காக நடிகர்கள் தேவைப்படுவதாகவும், அதற்கான ஆடிசன் 7 நாட்கள் நடக்க இருப்பதாகவும், அந்த ஆடிசனில் 15 வயதிலிருந்து 55 வயது வரையிலான நடிப்பார்வம் கொண்டவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம் என, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார் படத்தின் இயக்குநர்.
இந்த செய்தியினை அடுத்து, ஆடிசனுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர். அவர்களுக்கான ஆடிசனுடன் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் ஆரம்பிக்கும் முன்னதாகவே படத்திற்கு கிடைத்துள்ள எதிர்பார்ப்பு, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.ரோமியோ பிக்சர்ஸ், இயக்குநர் ராஜுமோகன் இயக்கத்தில் ‘பாபா பிளாக் ஷீப்’ படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்க செய்தி.