ஜீ.வி. பிரகாஷ் குமார், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடங்களில் நடிக்க, சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள ‘அடங்காதே’ திரைப்படம் இன்றைய அரசியலை விறுவிறுப்பாக பேசுகிறது.
சுரபி நாயகியாக நடிக்க, பிரபல பாலிவுட் நடிகை மந்திரா பேடி முக்கிய பாத்திரத்தில் தோன்றுகிறார். யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பு மூலம் படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
படம் குறித்து பேசிய இயக்குநர் சண்முகம் முத்துசாமி, “இது சமகால அரசியல் குறித்து பரபரப்பாக விவரிக்கிற அரசியல் திரில்லர். இரு சக்கர வாகனங்களை ரிப்பேர் செய்யும் இளைஞனாக ஜீ.வி. பிரகாஷ் குமாரும், அரசியல் தலைவராக சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரும் மிரட்டியுள்ளனர். கதையில் திருப்பம் ஏற்படுத்தும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அண்ணன் சீமான் அவர்களுக்கு மிக்க நன்றி.
திருச்சியில் ஆரம்பிக்கும் கதை காசி வரை நீள்கிறது. தொடக்கம் முதல் முடிவு வரை ரசிகர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது. தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ள சூழ்நிலையில் வரும் ஜூன் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாவது மகிழ்ச்சி” என்றார்.