காவல்துறை உயரதிகாரிக்கான கம்பீரத்தோடு, வழக்கறிஞராக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படம் ‘அரசி.’வழக்கறிஞர், காவல்துறை அதிகாரி, ரவுடி ஆகிய மூன்று பேர் நடுவில் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை சூரியகிரண் இயக்கியுள்ளார்.
வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக் ராஜு, அங்கனாராய், மனிஷா ஜஸ்னானி, சித்தார்த்தராய், அபிஷேக் வினோத், ஹாசினி, சுப்ரமணியம் சிவா,சாப்ளின் பாலு, மோகித் ராஜ், ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ஹரி,சிவா மதன், சக்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. ‘நதியே அடங்காதே அணைக்குள் முடங்காதே’ என்ற பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் பாடலை படத்தின் தயாரிப்பாளர் ஆவடி சே.வரலட்சுமி எழுதியுள்ளார். இந்த பாடல் அனைவராலும் குறிப்பாக மகளிர் மத்தியில் மிகப் பிரபலமாக பேசப்படும் விதத்தில் உருவாகியுள்ளது.
‘அண்ணன மிஞ்ச இங்க யாரும் இல்லை’ எனும் துள்ளளிசை பாடலை இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் இணைந்து பாடியுள்ளனர். கேட்போரை கிறுகிறுக்க வைக்கும்; காண்போரை ஆட வைக்கும் விதத்தில் தயாராகியுள்ளது.படத்தில் ஆறு சண்டை காட்சிகள் உண்டு. ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் மிக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.
டிரெய்லரை பார்க்கும்போது படத்தின் சண்டை காட்சிகளில் வரலெட்சுமி மிரட்டியிருப்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. சண்டைக்காட்சிகளை அமைத்திருப்பது மிரட்டல் செல்வா.55 நாட்களில் சென்னை மற்றும் வேலூர் விஐடி கல்லூரியில் இரவு பகல் பாராது படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
படக்குழு:-
இயக்கம்; சூரியகிரண்
தயாரிப்பு: ரசிமீடியா மேக்கர்ஸ், வி.வி.பிலிம்ஸ் ஏ.ஆர்.கே ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி
ஒளிப்பதிவு: செல்வா. ஆர்
இசை: சித்தார்த் விபின்
பாடல்கள்: அருண் பாரதி, ஆவடி சே.வரலட்சுமி, அருண் பாரதி, நிலவை பார்த்திபன், கானா பிரபா
நடனம்: தீனா
சண்டைப் பயிற்சி: மிரட்டல் செல்வா