‘தேவதை’ ‘பிசாசை’ காப்பாற்றுமா இல்லையா என்பதுதான் கதை! -’BP 180’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் ஜெபி

இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றிய ஜெபி சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான ’BP 180’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் (மறைந்த) நடிகர் டேனியல் பாலாஜி வில்லன் கதாபாத்திரத்திலும், நடிகை தான்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் புரோமோஷனல் அறிவிப்புகள் படம் குறித்த எதிர்பார்ப்பை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் டேனியல் பாலாஜியின் கடைசி திரைப்படம் இது என்பதால் அவரது ரசிகர்கள் டேனியல் பாலாஜியை திரையில் காண உணர்ச்சி பெருக்குடன் காத்திருக்கின்றனர்.

விறுவிறுப்பான திரைக்கதை, உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் நவம்பர் 28-ம் தேதி ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையனுபவத்தை தரவிருக்கிற இந்தப் படம் குறித்து இயக்குநர் ஜெபியிடம் கேட்டபோது, “’BP 180’ என்பது ஆபத்தான மருத்துவ மற்றும் உளவியல் நிலையைக் குறிக்கிறது. இதில் போதைப்பொருட்கள் புழக்கத்தால் தனிநபர்கள் இரத்த அழுத்தம் அதிகமாகிறது. இந்த கட்டத்தில் அவர்களின் ஆறாவது அறிவு தடுமாறி விலங்குகளைப் போல நடந்து கொள்கிறார்கள். ஆண்கள் கும்பலாக சேர்ந்து மற்றவர்கள் மீது வன்முறைகள் நிகழ்த்துவதையோ அல்லது தனிநபர் பெண்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களை எதிர்கொள்ளும் காலக்கட்டத்தில் வாழ்கிறோம். இவர்கள் மருத்துவரீதியாக ’BP 180’ ஆக உருவகப்படுத்துவார்கள். இந்தக் கதையில், டேனியல் பாலாஜியின் கதாபாத்திரம் இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஒருவர். அவரிடம் சிக்கிக் கொண்ட மருத்துவராக தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.

டேனியல் பாலாஜிக்குள் இருக்கும் அரக்கத்தன்மையை மாற்ற இடைவிடாமல் போராடுகிறார். இந்த ‘தேவதை’ அந்த ‘பிசாசை’ காப்பாற்றுவதில் வெற்றி பெற்றாரா அல்லது இறுதியில் அழிப்பாரா என்பது படத்தின் கதை. என் கதையின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் ரேடியன்ட் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் மற்றும் அதுல் இந்தியா மூவீஸின் பிரதிக் டி. சத்பர் மற்றும் அதுல் எம். போசாமியா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. சமூகத் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குவதே என் நோக்கம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here