இந்த படத்தின் இயக்குநர் என்னைப் போலவே பிடிவாதமாக இருந்து படத்தை செதுக்கியுள்ளார்! ‘3.6.9’ படத்தின் இசை விழாவில் பாக்யராஜ் பேச்சு

பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம் பி ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9. இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்தப்படத்தில். வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உலக சினிமா வரலாற்றில் 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், ஒரு களத்தில் 24 கேமராக்கள், 150க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைள், 450தொழில்நுட்ப கலைஞர்களை  கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஷரிபா மூலமாக பரிந்துரை செய்யப்பட்டு அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் என்ற அமைப்பில் உலக சாதனைக்கான விருதையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் பாக்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் பாண்டியராஜன், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இசையமைப்பாளர் தீனா, எழுத்தாளர் அஜயன் பாலா, லோக்கல் சரக்கு படத்தின் தயாரிப்பாளர் சாமிநாதன் ராஜேஷ் , ‘நாலேஜ் இன்ஜினியரிங்’ அமைப்பின் நிறுவனர் ஷரிபா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் படத்தின் இயக்குனர் சிவ மாதவ், “கிட்டத்தட்ட ஒன்பது வருட போராட்டத்திற்கு பிறகு இந்த படம் சாத்தியமானது. இதை ஒரு சாதனைப்படமாக எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சொன்னபோது எந்த யோசனையும் செய்யாமல் உடனே ஒப்புக்கொண்டேன். என் மீது நம்பிக்கை வைத்து இதை துவங்கிய தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த படத்திற்காக ஆடிசன் வைத்தபோது கிட்டத்தட்ட 500 பேர்கள் வரை வந்து சென்றனர். அதில் பலபேர் இவர்கள் 81 நிமிடங்களில் ஒரு படத்தை எடுக்கப் போகிறார்களாம்.. இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று எங்கள் காதுபடவே பேசிவிட்டு சென்றார்கள். ஆனால் இன்று நாங்கள் இந்த படத்தை எடுத்து முடித்து விட்டு சாதனையை செய்து விட்டோம் அவநம்பிக்கையுடன் பேசியவர்கள் இதை வெளியே நின்று வேடிக்கை தான் பார்த்துக்கொண்டி இருப்பார்கள்.
இந்த கதை மீது பாக்யராஜ் சார் மிகுந்த நம்பிக்கை வைத்தார். அவரை கதாநாயகனாக தேர்வு செய்வதற்கு இன்னொரு காரணம் என் அப்பாவிற்கு அவரை ரொம்பவே பிடிக்கும். அதனால் இதில் அவர் தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இந்த படத்தில் பணியாற்றிய பின்னர் நானும் அவரது உதவி இயக்குனர்களில் ஒருவராக உணர்ந்தேன். அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன. விஞ்ஞானத்தின் வளர்ச்சி தான் மனிதனின் வளர்ச்சி.. எல்லாவற்றிலும் விஞ்ஞானம் இருக்கிறது. லாரியில் எலுமிச்சை கட்டுவதில் கூட அறிவியல் இருக்கிறது. அந்த விஞ்ஞானம் பற்றி தான் இந்தப் படம் பேசுகிறது” என்றார்.
இயக்குனர் பாக்யராஜ், “நான் கொஞ்சம் பிடிவாதக்காரன் என்று இங்கே சொன்னார்கள். அது உண்மைதான். நல்ல விஷயத்திற்காக எப்போதும் பிடிவாதமாக தான் இருப்பேன். நான் கதை எழுதிய ஒரு கைதியின் டைரி படத்திற்காக நான் எழுதிய கிளைமாக்ஸ் வேறு.. ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களாலும் எனது குருநாதர் பாரதிராஜாவுக்கு அது பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பதாலும் வேறு மாதிரியான கிளைமாக்ஸ் வைத்து படமாக்கி படமும் ஹிட்டானது. அந்த கிளைமாக்ஸும் பேசப்பட்டது. ஆனால் அதே படத்தை இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து நான் இயக்க முடிவு செய்தபோது படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பலரும் என்னிடம் வந்து தமிழில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியையே இந்தியிலும் எடுங்கள்.. அமிதாப்பச்சனுக்கு அதுபோன்ற ஒரு கிளைமாக்ஸ் ரொம்பவே கம்பீரமாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் நான் எழுதி வைத்த கிளைமாக்ஸை படமாக்கியே தீர்வது என்று உறுதியாக இருந்தேன்.
இதுகுறித்து படத்தின் ஹீரோவான அமிதாப் பச்சனிடமே நேரடியாக பேசியபோது,  அவர் என் எண்ணங்களை புரிந்துகொண்டு ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு காட்சியுடன் நீங்கள் மனதில் நினைத்து வைத்திருக்கும் ஒரு காட்சியை எப்படி ஒப்பிட முடியும் அதனால் நீங்கள் நினைத்தபடி விரும்பிய கிளைமாக்ஸ் காட்சியை எடுங்கள் என ஒப்புக்கொண்டார்.
அந்த காட்சியை படமாக்கி முடித்த பின்புதான் அனைவரும் அதை பார்த்து வியந்து பாராட்டினார்கள். அந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்து விட்டு என்னுடைய குருநாதர் பாரதிராஜா வியந்து போய் என்னைப் பாராட்டினார். அப்படி ஒரு நல்ல விஷயம் வரவேண்டும் என்பதற்காக பிடிவாதமாக இருப்பது தவறில்லை.
அதேபோல யாருமே முழுதாக சினிமாவை கற்றுக்கொண்டு உள்ளே நுழைவதில்லை. பல விஷயங்களை இங்கே தான் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும். இந்தி படப்பிடிப்பின் போதும் எனக்கு பல விஷயங்கள் புரியாமலேயே அந்த சமயத்தில் அங்கே தான் கற்றுக் கொண்டு அந்த படத்தை முடித்தேன். அதுபோல இந்த படத்தின் இயக்குனர் சிவ மாதவ்வும் இந்த படத்தை தான் நினைத்தபடி மிக நேர்த்தியாக பிடிவாதமாக இருந்து செதுக்கி உள்ளார். அந்த வகையில் நிச்சயம் இந்த படம் அனைவராலும் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here