‘வீரம்’ படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் பாலா. தமிழில் மிகச்சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ஏராளமான மலையாளப் படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். அவர் கேரள அரசின் சிறந்த நடிகருக்கான ‘கோல்டன் அவார்ட்’ என்கிற விருது பெறுகிறார் என்பது இப்போதைய செய்தி!
நடிகர் பாலா பற்றியும், அவரது சமீபத்திய வெற்றி குறித்தும், அவரது அடுத்தகட்ட முயற்சிகள் பற்றியும் சில தகவல்கள் இதோ…
மலையாளத்தில் கலாபம் தொடங்கி பிக் பி, ரிங் டோன்,காயம், ஹிட் லிஸ்ட், புலி முருகன், லூசிபர் போன்று சுமார் 50 படங்களில் நடித்து அழுத்தமாகத் தனது பங்களிப்பைப் பதிவு செய்து வைத்திருப்பவர். முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து அவர்களது அன்பைப் பெற்றிருப்பவர்.
பல மலையாள சேனல்களின் போட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்துள்ளவர்.
கிட்டத்தட்ட நான்காண்டுகள் எந்தப் படத்திலும் நடிக்காமலிருந்தவர், அனூப் இயக்கத்தில் ‘ஷபீக்கிண்டே சந்தோஷம்’ படத்தில் நடித்தார். சில தினங்களுக்கு முன் வெளியான இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று சூப்பர் ஹிட் ஆகி உள்ளது.
மம்முட்டி உட்பட பல நடிகர்கள் பாலாவின் நடிப்பைப் பாராட்டி உள்ளனர். இந்தப் படத்தைத் தயாரித்தவர் நடிகர் உண்ணி முகுந்தன். படம் நல்ல விலைக்கு வியாபாரமாகி , ரசிகர்களிடம் கொண்டாடப் பட்ட பிறகும், படத்தில் நடித்த பாலாவுக்கு சம்பளம் எதுவும் தரப்படாமல் இழுத்தடித்ததாகத் தெரிகிறது. இதனைச் செய்தியாக பாலா வெளிக் கொண்டுவந்த போது,பாலா ரசிகர்களுக்கும் உண்ணி முகுந்தன் ரசிகர்களுக்கும் கருத்து மோதலில் தொடங்கி கை கலப்பு வரை சென்றுள்ளது.
உண்ணி முகுந்தனின் செய்தியாளர் சந்திப்பில் பாலாவின் சம்பளப் பிரச்சினை பற்றி ரசிகர்கள் கேள்வி கேட்க, பெரும் பிரச்சனையாக ஆனது.
இது பற்றிப் பாலா பேசும்போது, ”உண்மை எப்போதும் உறங்காது. எனக்காக குரல் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி” என்றார்.
விரைவில் நடிகர் பாலா திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இது தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகிறது. அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டு வருகின்றன.

