மோகன்லாலின் ‘L2 : எம்புரான்’ படத்தில் ஹாலிவுட் நடிகர் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ ஜெரோம் ஃபிளின்!  

மோகன்லால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ L 2: எம்புரான்’ எனும் திரைப்படத்தில் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ மற்றும் ‘ஜான் விக் சாப்டர் 3 ‘ போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜெரோம் ஃபிளின் நடித்திருக்கிறார் என படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ‘L 2 எம்புரான் ‘ எனும் திரைப்படத்தில் மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாறன், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் , சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன், கிஷோர் ,சாய்குமார், சச்சின் கடேக்கர் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஹாலிவுட்டில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்ற ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ பட புகழ் நடிகர் ஜெரோம் ஃப்ளின்- இப்படத்தில் இடம்பெறும் போரிஸ் ஆலிவர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் படத்தில் போரிஸ் ஆலிவர் எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃப்ளின் படத்தைப் பற்றி தன்னுடைய அனுபவங்களை பிரத்யேக காணொளி மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், ” நான் இந்த திரைப்படத்தில் போரீஸ் ஆலிவர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் கிடைத்த அனுபவத்தை விட இந்திய திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இந்திய கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவத்தை வழங்கி இருக்கிறது.

என்னுடைய வாழ்க்கையில் இந்தியா மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. என்னுடைய இளமைக் காலத்தில் இந்தியாவிற்கு ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறேன். அந்த பயணமும், அதன் மூலம் கிடைத்த அனுபவமும் என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. அதன் பிறகு இந்த கலை உலக வாழ்க்கையை தேர்வு செய்தேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி சொல்வதை விட, குரேஷியின் பயணத்தில் என்னுடைய கதாபாத்திரம் முக்கியமானது. அதனை ரசித்து நடித்திருக்கிறேன். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீபக் தேவ் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் ஆசிர்வாத் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுபாஷ்கரன் மற்றும் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here