முக்கோண காதல் கதையில் சற்றே வித்தியாசமான படைப்பாக ‘என் காதலே.’
இளைஞன் தீனா மீன்பிடி தொழிலில் ஈடுபாடு கொண்டவன். ஒருகட்டத்தில் அவன், நம்மூர் கலாச்சாரம் பண்பாடு பற்றியெல்லாம் தெரிந்து கொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த இளம்பெண் ஹெலனுக்கு கார் டிரைவராக, ஊரைச் சுற்றிக் காண்பிக்கும் கைடாக நியமிக்கப்படுகிறான். தீனாவின் நல்ல குணங்கள் பிடித்துப்போக ஹெலனுக்கு அவன் மீது ஈர்ப்பு உருவாகிறது. நாட்கள் போகப்போக தீனாவும் ஹெலனும் காதலர்களாகி மகிழ்ச்சியாக நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த விஷயம் சிறுவயதிலிருந்தே தீனாவுடன் பழகிவருகிற, அவனைக் காதலித்துக் கொண்டிருக்கிற தனத்துக்கு தெரியவர அதன்பின் நடக்கும் பிரச்சனைகளை உணர்வுபூர்வமான திரைக்கதையாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜெயலெஷ்மி. தீனாவுக்கு யாருடன் கல்யாணம் நடந்தது என்பது கிளைமாக்ஸ்…
மீனவன் தீனாவாக லிங்கேஷ். ஆரம்பக் காட்சியில் மீன் கவுச்சி வீசும் அழுக்கு உடையோடு நடமாடி தொழில் எதிரிகளை அடித்துத் துவைப்பது கெத்தாக இருக்க,
அடுத்தடுத்த காட்சிகளில் ஸ்டைலிஷ் லுக்குக்கு மாறி, வெளிநாட்டுப் பெண்ணுடன் ஆங்கிலத்தில் சரளாமாக உரையாடி பொழுதைக் கழிக்கும்போது ‘அவரா இவர்?’ என ஆச்சரியப்படுத்துகிறார்.
காதல் காட்சிகளில் லிங்கேஷ் ‘நமக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை’ என்பது போல் முகபாவம் காட்ட, ஹெலனாக வருகிற லண்டன் பெண் லியா ரொமான்ஸ் எபிசோடுகளுக்கும், காதல் நிறைவேறாது என்பது புரிந்து கலங்கி நிற்கும்போதும் கண்களில் உணர்வுகளைக் கடத்தி ஏற்ற கேரக்டருக்கு உயிரோட்டம் தந்திருக்கிறார்.
அத்தை மகன் மீது காதல், அவனை வேறொரு பெண் காதலிப்பது தெரிந்தபின் பதற்றம், அதன் தொடர்ச்சியாக ஆத்திர ஆவேசம் என கலந்துகட்டிய நடிப்பாலும் லட்சணமான முகவெட்டாலும் பளீர் புன்னகையாலும் மனதில் நிறைகிறார் தனமாக வருகிற திவ்யா.
மதுசூதன், காட்பாடி ராஜன் இருவரும் மீனவ சமூகத்தின் ஆளுமைகளாக வலம் வர,
மாறன், கஞ்சா கருப்பு இருவரும் அடிக்கும் லூட்டிகள் ‘இதெல்லாம் ரொம்ப ஓவர்யா’ என்று சொல்லும்படியிருந்தாலும் ரசிக்க வைக்கின்றன.
சாண்டி சாண்டல்லோ இசையில் ‘என்னானதோ ஏதானதோ’, ‘ஒருமுறை உன் மடியில்’ பாடல்கள் இதமாக கடந்தோட ‘ராசா நா ஒத்த ரோசா’ குத்தாட்டப் பாடலின் இசை பரவசம் தருகிறது. பாடலுக்கான ஆட்டம் செம ஹாட்டாக இருக்கிறது.
ஒளிப்பதிவு நிறைவு. எடிட்டரின் பங்களிப்பை குறை சொல்லும்படியான காட்சிகள் படத்தில் உண்டு.
மீனவ கிராமம், இரு தரப்புக்குள் போட்டி பொறாமை, பகையுணர்ச்சி, சூழ்ச்சி என விரியும் ஆரம்பக் காட்சிகள் வழக்கமான கேங்ஸ்டர் படங்களைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தாலும்,
போகப்போக வெளிநாட்டினர் வருகை, அவர்களுக்கு நம்மூரின் கலாச்சாரங்களை புரியவைப்பது, காதல் சென்டிமென்ட், அம்மா சென்டிமென்ட், திருவிழா கொண்டாட்டம், டூயட் பாடல், காமெடி கலாட்டா அதுஇதுவென மசாலா அம்சங்கள் தொற்றிக்கொள்வதால் ரசிகர்கள் உற்சாக மூடுக்கு மாறுவதற்கு வாய்ப்பு உருவாகிவிடுகிறது.
ஒரு ஆணை இரு பெண்கள் காதலிக்கிற பார்த்துப் பழகிய கதைக்களத்தில், அந்த இரு பெண்களில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என கதையை கட்டமைத்திருப்பதும்,
அடிதடியில் துவங்கி, காதல் மோதல் என கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்கியிருப்பவர் ஒரு பெண் என்பதும் படத்தின் தனித்துவம்!