எனை சுடும் பனி சினிமா விமர்சனம்

தமிழகத்தை உலுக்கிய பெரியளவிலான பாலியல் குற்றங்கள் நடந்த பொள்ளாச்சியை கதைக்களமாக எடுத்துக்கொண்டு அதை கொலைக்களமாக மாற்றி பரபரப்புத் தீ பற்ற வைத்திருக்கும் ‘எனை சுடும் பனி.’

தொடர்ச்சியாக இளம் பெண்கள் காணாமல் போவது, பின்னர் சடலமாக கிடைப்பது என அந்த ஊர் அதிர்ந்துபோய் கிடக்கிறது. அப்படியான சூழ்நிலையில், ஒரு தம்பதி தங்கள் மகளைக் காணவில்லை என புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேசனுக்கு போகிறார்கள். போன இடத்தில் ‘இஙகு புகாரை எடுத்துக் கொள்ள முடியாது; வேறு ஸ்டேஷனுக்கு போ’ என துரத்துகிறார் இன்ஸ்பெக்டர். அவர் சொன்ன ஸ்டேசனுக்கு போனால் அங்கும் புகாரை எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள்.

இப்படி அமைந்துள்ள படத்தின் ஆரம்பக் காட்சியே ஒருவித பயத்தை தூண்டிவிட, திடீரென கதையின் நாயகியே காணாமல் போகிறார்.  பெண்கள் காணாமல் போகிற விவகாரத்திற்கு பின் பெரிய சதித்திட்டம் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

அந்த திட்டத்தை செயல்படுத்துவது யார் என கண்டறிய களமிறங்குகிறார் காவல்துறை உயரதிகாரி ஒருவர். அவர் எதையெல்லாம் கண்டுபிடிக்கிறார் என்பது காட்சிகளாக விரிய, குற்றவாளி யார் என்பது கிளைமாக்ஸ்.

கதையின் நாயகனாக நட்ராஜ் சுந்தர்ராஜ். காதலியுடன் உற்சாகமாகவும் சின்னச்சின்னதாய் உருவாகும் சண்டைகளைச் சமாளித்தபடியும் நாட்களைக் கடத்திக் கொண்டிருப்பதில் எதுவும் பெரிதாய் கவனத்தை ஈர்க்கவில்லை. அந்த குறையைப் போக்கும்படி, காதலி காணாமல் போனபின் மனம் கலங்குவது, அவளைக் கடத்தியதே அவர்தான் என சந்தேகப்பட்டு போலீஸார் வெளுத்து வாங்கியபின் பரிதாபமாய் நிற்பது, காதலிக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்வதற்கான முயற்சியில் பதற்றத்தையும் சுறுசுறுப்பையும் கலந்துகட்டி வெளிப்படுத்துவது, ஆக்சன் காட்சிகளில் அளவுமீறாத ஆக்ரோஷம் காட்டுவது என சற்றே பாராட்டும்படி நடித்திருக்கிறார்.

வேலை வெட்டிக்கு போகாமல் பொறுப்பில்லாமல் திரிகிற காதலனை திருத்துவதற்காக பிரியத்தைக் குறைத்து கடுமையாக நடந்துகொள்வது, காமவெறியனிடம் சிக்கிய சூழ்நிலையில் துணிச்சலாக செயல்படுவது என இறங்கியடித்திருக்கும் நாயகி உபாசனா ‘தீராத ஆசை பேசாத பாஷை’ என கடந்தோடும் பாடலில் வெளிப்படுத்தியிருக்கும் மெல்லிய கவர்ச்சியால் கிறங்கடிக்கிறார். அந்த பாடலில் உடுத்திவரும் உடைகள் அத்தனை அழகு; அத்தனை கலர்ஃபுல்.

பெண்களின் தொடர்பு எண்களைப் பெறுவதில் புத்திசாலித்தனத்தையும், அவர்களை அனுபவிப்பதில் காமவெறியையும் சரி விகிதத்ததில் பரிமாறியிருக்கிறார் வில்லனாக வருகிற மலையாள நடிகர் தனேஷ்.

குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் பணியை அதற்கேற்ற பரபரப்பு குறையாமலும்  அலட்டிக்கொள்ளாமலும் செய்திருக்கிறார் காவல்துறை உயரதிகாரியாக வருகிற இயக்குநர் கே பாக்யராஜ்.

மகளைக் காணாத தவிப்பை பொருட்படுத்தாத இன்ஸ்பெக்டரிடம் சூறாவளியாய் சீறுவது, மகளைப் பறிகொடுத்த துக்கத்தில் அழக்கூட முடியாமல் உறைந்துபோவது, கொலைகாரனைப் பழிவாங்குவதில் ஆக்ரோஷம் காட்டுவது என தலைவாசல் விஜய் தந்திருப்பது கதையின் தேவையை கச்சிதமாக நிறைவேற்றுகிற அனுபவ நடிப்பு.

சீரியஸாக பயணிக்கும் கதையில் சில நிமிடங்களே வந்துபோகிற கூல் சுரேஷின் காமெடி ரசிக்க வைக்கிறது. சிங்கம் புலியும் ரிலாக்ஸுக்கு உதவியிருக்கிறார்.

சார்மிளா, மனோபாலா, சித்ரா லெஷ்மணன், ஸ்ரீலேகா என சீனியர் நடிகர் நடிகைகளும் அவர்களுக்கு பொருத்தமான கதாபாத்திரங்களும் படத்தில் உண்டு.

படத்தின் முன் பாதியில் வரிசைகட்டி வரக்கூடிய நான்கைந்து பாடல்கள் கதையோட்டத்திற்கு வேகத்தடையாக அமைந்துள்ளது என்றாலும், அந்த பாடல்களுக்கு மிக்கின் அருள்தேவ் தந்திருக்கும் இசையை குறை சொல்வதற்கில்லை. காதல் பாடல்கள் மனதை வருட சாண்டி மாஸ்டர் ஆட்டம்போடும் ‘அவ சோன்பப்டி நான் தயிர் பச்சடி’ என்ற குடிப்பகப் பாட்டு குதுகலத்துக்கு கேரண்டி.

மங்கிய வெளிச்சத்திலும் இருளிலும் நடக்கும் சம்பவங்கள் அதிகமிருக்க தன்னால் முடிந்தவரை அவற்றுக்கு வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ்.

கதையும் உருவாக்கமும் பெரிதாய் திருப்தி தராவிட்டாலும்,

பொது இடங்களில் பேசும்போது குறிப்பாக போனில் என்கிறபோது தொடர்பு எண்களை சத்தமாக பரிமாறிக் கொள்வதில், சமூக வலைதள நண்பர்கள் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமல் சந்திப்பதில் எத்தனை ஆபத்துகள் இருக்கின்றன என்பதை எடுத்துச் சொன்னதற்காக இயக்குநர் ராம் சேவாவை பாராட்டலாம்.

எனை சுடும் பனி _ செய்திருப்பது சமூக விழிப்புணர்வுப் பணி!

-சு.கணேஷ்குமார் 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here