ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், ‘டிரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி, வரும் மே 12-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘ஃபர்ஹானா.’ இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, ”மனுஷ்ய புத்ரன் சார் சொன்ன மாதிரி, வாரா வாரம் என்னுடைய படங்கள் வெளியானது. படம் வெளியாவதற்கும் எனக்கு எந்த சம்பந்தமுமில்லை. அது என் கையிலும் இல்லை. கடந்த வருடத்தில் எனது படம் இரண்டு தான் வெளியானது. ஆனால், எந்த விருதும் கிடைக்க வில்லை. வருடா வருடம் விருதுகள் பல வென்ற எனக்கு இந்த வருடம் பல விருது விழாக்களின் அழைப்பு கூட வரவில்லை. க/பெ. ரணசிங்கம் படத்திற்கு அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை. இதில் எனக்கு வருத்தமே.ஃபர்ஹானா படத்தின் கதையை நெல்சன் சில வரிகளில் தான் சொன்னார். பிடித்திருந்தால் சொல்லுங்கள், நான் டெவலப் செய்து எடுத்து வருகிறேன் என்றார். அதற்குள் ஊரடங்கு வந்துவிட்டது. ஆனால், அடிக்கடி நான் நெல்சன் சாரிடம் அந்த கதை என்ன ஆச்சு? எனக்கு பிடித்திருக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்.
இந்த படம் மிகச் சிறந்த படமாக எனக்கு இருக்கும். அதற்காக நான் நடித்த மற்ற படங்களை குறை சொல்கிறேன் என்று அர்த்தமில்லை. சில படங்கள் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கும்” என்றார்.
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது, ”முதலில் என் அம்மாவிற்கு நன்றி. நான் டைரக்ட் செய்த முதல் படமான ஒரு நாள் கூத்தில் உயிருடன் இருந்தார். ஆனால், இந்த படத்திற்கு அவர் உயிருடன் இல்லை. கொரோனா வந்த பிறகு அனைவருக்குமே வாழ்க்கைமுறை அனைத்துமே மாறிவிட்டது. நிறைய கற்றுக் கொடுத்தது. இந்த காலகட்டத்தில் எனது குடும்பத்தில் 4 பேர் அடுத்தடுத்து என் அம்மாவையும் சேர்த்து மறைந்தார்கள். அந்த உணர்வால் என்னால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. ஆனால், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சார் அடிக்கடி என்னை தொடர்புகொண்டு பேசிக் கொண்டே இருப்பார். அதுதான் எனக்கு மிகுந்த நம்பிக்கையளித்தது. அவருக்கு நன்றி.
அடுத்து பிரகாஷ் பாபு சாரிடம் இந்த கதையை கொடுத்தேன். அவர் நன்றாக இருக்கிறது என்று கூறினார். சில காலத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் என்னை அழைத்து எனக்கு வெப் சீரிஸ் வாய்ப்பு வருகிறது. ஆனால், ஒரு கதையும் சரியாக அமையவில்லை. நீங்கள் கூறிய கதை எனக்கு பிடித்திருக்கிறது. அதை வெப் சீரியசாக எடுக்கலாமா என்று கேட்டார். நான் மீண்டும் பிரகாஷ் சாரை அணுகினேன். அப்போது, பிரபு சார் என்னிடம் இக்கதையை 45 நிமிடம் கேட்டார். அவருக்கும் பிடித்துப் போக.. அப்படித்தான் இந்த படம் தொடங்கியது.
ஒரு படத்திற்கு எழுத்து மிகவும் முக்கியது என்று நான் செல்லும் இடங்களில் எல்லாம் கூறுவேன். என்னுடைய ஆசிரியருடன் இணைந்து இக்கதையை விரிவாக எழுத முயற்சித்தோம். பேச பேச உயிருக்குள் உயிருள்ள கதையாகப் பேச ஆரம்பித்தது. ஃபர்ஹானா திரைப்படம் எனக்கு புது அனுபவமாக இருந்தது. 3வது படம் மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். நான் சென்னை புதுபேட்டையில் வளர்ந்தவன். வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்கும் கடைகள் இருக்கும் தெருவில் தான் வீடு. அங்கு இஸ்லாமியர்கள் அதிகம். புதுபேட்டை, திருவல்லிக்கேணி என்று நான் பிரியாணி சாப்பிட்டு வளர்ந்தது எல்லாமே முஸ்லீம் நண்பர்கள் நடுவில் தான். ஆகையால், நான் எடுக்கக் கூடிய படத்தின் பின்னணி, நான் வளர்ந்த.. அனுபவித்த கதையாக ஏன் இருக்க கூடாது? என்று நினைத்தேன். மதம் சார்ந்து படம் எடுக்கிறேன் என்று சர்ச்சை எழுந்துள்ளது. என்னுடைய நண்பர்களைப் பற்றி தான் எடுத்திருக்கிறேன். மதம் சார்ந்தது அல்ல.. மனம் சார்ந்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்திற்கு வசனம் எழுத மனுஷ்ய புத்ரனிடம் கொடுத்தோம். அவர் அடுத்த நாள் எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருக்கிறது. படிக்க படிக்க சுவாராஸ்மாக இருக்கிறது. நானே எழுதித் தருகிறேன் என்றார். முதன் முதலாக திரைப்படத்திற்காக எழுதிய அவர் வசனம் சிறப்பு வாய்ந்தது. இப்படத்தில் அவருடைய வலிமையான வசனத்தை அனல் பறக்க பேசியது அனுமோல் தான்.
ஐஸ்டின் பிரபாகரனின் வளர்ச்சி என்னை வியக்க வைக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் சிறந்த இசையைக் கொடுத்து வருகிறார். ஃபர்ஹானா படத்திலும் 3 சிறந்த பாடல்களைக் கொடுத்திருக்கிறார். நடிகை ஆண்ட்ரியா இப்படத்திற்காக ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
மான்ஸ்டர், குழந்தைகளுக்கு ஏற்ற மென்மையான படம். ஆனால், ஃபர்ஹானா அப்படி இல்லை. நிறைய விஷூவல் சேலஞ்ச் இருந்தது. என்னுடைய கதையை நான் நினைத்தது போலவே காட்சியாக மாற்றிய கோகுலின் கேமரா கண்களுக்கு நன்றி.
பணத்தை கொடுத்தால் மட்டுமே வெற்றி என்றால் பலருக்கும் வெற்றிக் கிடைக்காது. பணத்தைத் தாண்டி ஆத்மார்த்தமாக பணியாற்றினால் தான் வெற்றி கிடைக்கும். வேலை நேரத்தைத் தாண்டியும் படத்தொகுப்பாளர் சாபு பணியாற்றியதால் தான் இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது.
கத்தி மீது நடக்கக் கூடிய கதைதான் இப்படம். என்னுடைய குழுவில் 4 பேர் இஸ்லாமியர்கள். ஏனென்றால், இஸ்லாமிய பின்புலத்தில் எடுக்கக் கூடிய படத்தில் எந்தவித தவறும் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். இப்படம் இஸ்லாமிய நண்பர்களை தாழ்த்தி எடுக்கவில்லை.
மற்ற மொழிகளில் இஸ்லாமிய பின்புலத்தில் படங்கள் வருகிறது. நமது நாட்டை எடுத்துக் கொண்டால் இஸ்லாமியர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள்.
கிட்டி சாரின் வீட்டிற்கு சென்றேன். வாழ்க்கையை ரசனையாக வாழக்கூடிய மனிதர். இப்படி இருக்கும் ஒரு மனிதரிடம் எப்படி நடிப்பை வாங்குவது என்று தோன்றியது. படப்பிடிப்பு தளத்தில் அவரைப் பார்த்து நாம் எப்படி நன்றாக நடிக்கப் போகிறேன் என்று அனைவரும் பயந்தார்கள். காட்சியில் அவர் கடைசியாக நின்றாலும் நடிப்பில் சிறிது அழகுக் கூட்டி விடுவார்.
ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் வரும் காட்சிகளைத்தான் நான் பெரும்பாலும் ரசித்தேன். இதில் ஜித்தன் ரமேஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் காட்சிக்கு மேலும் வலு சேர்த்தார்கள்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்ததில், குற்றமே தண்டனை என்ற படம் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இப்படம் தொடங்கி 10 நாட்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்தது, பிறகு சரியானது. அவருடைய நடிப்பு திறமையால் பல படங்கள் வந்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.
இந்த காட்சி சவாலாக இருக்கும் என்று நான் நினைத்த காட்சியில் உறுதுணை அளித்து நடித்துக் கொடுத்தார். கிட்டதட்ட 5 மணி நேரம் வெயிலில் நிற்க வைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறேன். ஆனால், இப்படம் அந்த வலிக்கு மருந்தாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.