அவதூத தத்த பீடத்தின் தலைமை பீடாதிபதி பூஜ்யஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளின் 80-வது பிறந்தநாள் விழா இசைத்தட்டு வெளியீடு, 80 கர்நாடக இசைக் கலைஞர்களின் பங்களிப்பில் புதிய ராகத்தில் கீர்த்தனை என பக்திச் சிலிர்ப்போடு நடந்தது.
விழாவை கணபதி சச்சிதானந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள் ஆர்.சி. உதயசங்கர், ஸ்ரீதர் நாராயணன், கே.எம்.நரசிம்மன், வி.ஜி சுரேஷ்குமார் உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
விழாவில், பிரபல கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன், பிரபலபரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், பிரபல மிருதங்க வித்வான் காரைக்குடி மணி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியம், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை பஜன் மண்டலியை சேர்ந்த இசை கலைஞர்கள் குரலில், கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளின் பாடல்கள் அடங்கிய ‘பஜனை சந்திரிகா’ இசைத்தட்டு வெளியிடப்பட்டது.
80 கர்நாடக இசைக் கலைஞர்கள் ‘தத்தப்ரியா’ எனும் புதிய ராகத்தில் கீர்த்தனை பாடி ‘நாதாபிஷேகம்’ நிகழ்ச்சியை நடத்தி ஸ்வாமிகளுக்கு இசை ஆராதனை செய்தனர்! 80 பேரில் கர்நாடக இசைக் கலைஞரும், முன்னணி திரைப்பட பாடகியுமான மஹதி உள்ளிட்டோரும் அடக்கம்!
ஸ்வாமிகள் தனது அருளுரையில், “குழந்தைகளை நல்ல இசையை கேட்க செய்யவேண்டும். மெல்லிய, இனிமையான இசையை கேட்கும் குழந்தை சமுதாயத்தில் நல்ல குடிமகனாக வளரும் என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் பகவத் கீதையை படிக்கவேண்டும். மக்களிடையே ஒற்றுமையும் சகோதரப் பாசமும் மேலோங்க செய்ய வேண்டும். ஆன்மீகம் தழைக்க வேண்டும். அப்பொழுதுதான் பூமியில் அமைதி, சுபிட்சம் ஏற்படும்.
நல்ல சங்கீதத்திற்கு சகல வியாதிகளையும் நிவர்த்தி செய்யும் சக்தி உண்டு. நாதத்தில் நிம்மதியை பெற முடியும், நல்ல தூக்கத்தை வரவைக்கமுடியும். உடல் வலியை போக்க முடியும்” என்றார்.
சுதா ரகுநாதன் தனது உரையில், ”கடந்த 30 வருடங்களாக, தெய்வப் பிறவியான ஸ்வாமிகளின் ஆசிரமத்தில் பாடிவருகிறேன். அதுவும், இந்த மேடையில் ஸ்வாமிகளைப் பற்றி பேச வாய்ப்பு கிடைத்ததும் பாக்கியம்” என்றார்.
பத்மா சுப்ரமணியம் தனது உரையில், ”கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி கொண்டாடுவதால் கிருஷ்ணருக்காகவோ ராமருக்காகவோ இல்லை. அது நமக்கு பலன் தருபவை. அது நமது பாக்கியம். அது போலவே, ஸ்வாமிகளின் பிறந்தநாளை கொண்டாடுவது, அவரை நேரில் பார்ப்பது நமது பாக்கியம். நாமெல்லாம் நமது கர்வாவின் பலனாக பிறந்துள்ளோம். ஆனால், ஸ்வாமிகளோ கர்மாவை அனுபவிக்க வரவில்லை’ நமக்கெல்லாம் நல்ல கர்மாவை தர வந்துள்ளார். இவரைப் போன்றவர்கள் இருப்பதால்தான் இந்தியாவை பாரத புண்ணியபூமி என்கிறோம்.
இசை மேதையான பூஜ்யஸ்ரீ ஸ்வாமிஜி,‘MUSICFOR HEALING’ அதாவது இசையின் மூலம் வியாதிகளை குணப்படுத்துதல், கட்டுப்படுத்துதல்’ என்ற ஒரு இயற்கை ரீதியானவகையில், அதற்கான ராகங்களை கண்டெடுத்து இசைத்துள்ளார். இது தவிர 5000 பஜனைப் பாடல்களை எழுதிய பெரும் ‘வாக்யேக்காரர்’ அவர். அவற்றை, கர்நாடக இசைக் கலைஞர்கள் அனைவரும்சேர்ந்து கர்நாடக இசையில் அவர் இயற்றிய ராகங்கள் மாறாமல், சங்கீத கீர்த்தனைகளாக மாற்றியமைத்திருக்கிறார்கள்” என்றார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியம், தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோரும் ஸ்வாமிகளைப் பற்றி எடுத்துரைத்தனர்.
ஸ்வாமிகளைப் பற்றி…
பூஜ்யஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகள் கர்நாடகாவில் மேகதாது என்ற இடத்தில், ஸ்ரீ ஜெயலெஷ்மி மாதாவிற்கு,காவேரிக்கரையில்உடல் முழுவதும் விபூதி, ருத்ராக்ஷ மாலையுடன்அவதரித்தவர்.
ஸ்வாமிஜிகள் வெறும் இசையோடு நின்றுவிடவில்லை. புராணங்களையும் இதிகாசங்களையும் நமக்கு தனது ஆன்மீக சொற்பொழிவின் மூலம் இடையில் தனது பஜனைப் பாடல்களைப் பாடுவார். அனைவரும் வாழ்வின் துன்பங்களை மறந்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் அளவுக்கு அந்த இசையும், சொற்பொழிவும் இருக்கும்.