உச்ச நட்சத்திரங்கள், இயக்குநர்கள் என எல்லோரோடும் பணியாற்றிவிட்டு திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டார் அமலா. அழகு, திறமை இரண்டும் சரியான கலவையோடு சேர்ந்திருந்த நடிகை எப்படி மீண்டும் நடிக்காமல் இருக்கலாம் என்று யோசிக்கும்போது ‘கணம்‘ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் அந்தக் கால கனவுக்கன்னி!
அந்தக் காலம் என ஒதுக்கிவிட முடியாது… தமிழ் சினிமாவின் கனவுக்கன்னிகள் பட்டியலில் இன்று வரை கூட தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் அவர்.
அவரிடம் பேசினோம்…
தமிழ்த் திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நீங்கள். திடீரென திருமணம் செய்து கொண்டு ஆந்திர மாநிலத்தில் தங்கிவிட்டீர்கள். தமிழ்நாட்டை, தமிழ் சினிமாவில் நீங்கள் பணியாற்றிய நாட்களை நினைத்துப் பார்ப்பீர்களா?
அங்கு சென்ற முதல் வருடம் சென்னையை அதிகமாக மிஸ் செய்தேன். இங்கு கடலோரமாகத்தான் எனது விடுதி, வீடு எல்லாம் இருந்தது. அதனால் ஒரு சி.டியில் கடலின் ஓசையை நாகார்ஜுனா ஒலிக்க விடுவார். ஏனென்றால் அந்த ஒலியின் இல்லாமையை நான் அதிகமாக உணர்ந்தேன். பின் புதிய சூழல் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கப்பட்டுவிட்டது.
நான் இருந்த அந்த 6-7 வருட காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சிலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், உயர்ந்த இயக்குநர்கள், இளையராஜாவின் அற்புதமான இசை என நிறைந்திருந்தது. இளையராஜா இசையமைத்தால் படம் கண்டிப்பாக வெற்றிதான் என்று ஒவ்வொரு இயக்குநரும் சொல்வதைப் பார்த்திருக்கிறேன்.
எனது தற்போதைய வாழ்க்கை பல வேலைகளுக்கு நடுவில், திருப்திகரமாக, ஆர்வத்துடன் சென்று கொண்டிருக்கும்போது மீண்டும் சினிமாவைப் பற்றி நினைக்க நேரமில்லை. எங்களின் பிராணிகள் நலச் சங்கத்தின் 30வது ஆண்டு இது. 5.5 லட்சம் பிராணிகளுக்கு நாங்கள் இதுவரை உதவியிருக்கிறோம். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவைப் பற்றிய எண்ணம் வராது இல்லையா.
ஆனால் நான் ஒரு தாயான பின்பு, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க அழைத்தனர். நானும் அது குறித்து யோசித்தேன். ஆனால் குழந்தையை சரியாகக் கவனித்துக் கொள்ள முடியாது என்பதால் நடிக்கவில்லை. இப்போது அதற்கான சூழல் உருவாகியுள்ளது.
உங்களை நடிக்க சம்மதிக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல என்கிறார்களே, கணம் இயக்குநர் ஸ்ரீகார்த்திக் எப்படி உங்களை சம்மதிக்க வைத்தார்?
சந்திக்க நேரம் அனுமதி பெற்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். 2-3 மணி நேரம் கதை சொன்னார். அவர் விளக்கிச் சொன்ன விதமும் சரி, கதையும் சரி, அழகாக இருந்தது. அப்படி ஒரு கதையை நீண்ட நாட்கள் கழித்துக் கேட்கிறேன். மிகவும் நெகிழ்ச்சியாக உணர்ந்தேன். அதனால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். வழக்கத்துக்கு மாறான ஒரு படம். மூன்று கதாபாத்திரங்களின் பயணமே இந்தக் கதை. இதில் நாயகன் ஷர்வானந்தின் கதையில் எனக்கும் சிறிய பங்கு இருக்கிறது.
ஷர்வானந்த், ஸ்ரீகார்த்திக், சதீஷ், ரமேஷ் திலக் என இன்றைய தலைமுறைக் கலைஞர்களோடு நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
ஷர்வானந்துடன் தான் எனக்கு அதிக காட்சிகள். மிகத் திறமையானவர். கண்ணியமானவர். ஸ்ரீகார்த்திக்கு, சர்வானந்தும் ஒருவரை ஒருவர் முந்தி பணியாற்றினர். என்னையும் கடுமையாக வேலை வாங்கினார். சரியான தருணம் கிடைக்கும் வரை நடிக்க வைத்தார். அது உங்களுக்குப் படம் பார்க்கும் போது தெரியும். டப்பிங் கொடுக்கும்போது படம் பார்த்தேன். மிகவும் சுவாரசியமானதாக இருந்தது.
நிறைய நகைச்சுவை நிறைந்திருந்தது. நீங்களும் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். அதே சமயம் சில காட்சிகளில் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும். ஏனென்றால் அம்மா நினைவுக்கு வரும்போது யாராக இருந்தாலும் உணர்ச்சிவசப்படுவார்கள். அம்மா கதாபாத்திரம் வந்த பிறகு ஆழமான உணர்வுகள் கதையில் வரும். அதற்கேற்ற ஆழமான இசையும் உள்ளது.
ரசிகர்களை திரையரங்குக்கு வரவைக்கும் அளவு கணம் படத்தில் என்ன இருக்கிறது?
இது ஒரு சாகசப் பயணக் கதை என்று சொல்லலாம். 3 சாதாரண மனிதர்கள் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய கதை. ஒவ்வொரு தோல்விக்குப் பின்னர் எழுவது எப்படி என்பதை அழகாக, கவித்துவமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதில் நிறைய சிரிப்பு நிறைந்திருக்கும். ஒரு அதிர்ச்சி இருக்கும். அந்த அதிர்ச்சியின் மூலம் கூட வாழ்க்கையைப் பற்றி புரிய வரும். நமது சிறந்த முயற்சியைத் தர நமக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பை பயன்படுத்துவது எப்படி என்று உணர வைக்கும். அந்த உந்துதலைக் கொடுக்கும். விழுந்தால் எழுந்திரு என்பதைச் சொல்லும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கையைத் தரும்.
இப்போது நாம் பல மொழிகளைச் சேர்ந்த படங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். கணம் எப்படி தமிழ் ரசிகர்களையும், தெலுங்கு ரசிகர்களையும் ஒரே நேரத்தில் கவரும் என்று நினைக்கிறீர்கள்?
மனித உணர்ச்சிகள் உலகம் முழுக்க பொதுவானதுதான். எனவே கணம் படத்தில் இருக்கும் உணர்ச்சிகள் இளைஞர்களை சென்றடைந்துவிட்டால் கண்டிப்பாகப் படம் தேசிய அளவில், பான் இந்தியா என்று சொல்லும்படி பிரபலமாகும். கண்டிப்பாக திரையில் தமிழ், தெலுங்கு என அத்தனை ரசிகர்களுக்கும் படம் சென்று சேரும் என்று எனக்குத் தெரியும். அம்மா பாசம், இளைஞர்களுக்கான தடைகள், போராட்டங்கள், இதெல்லாம் அனைவருக்கும் பொது. இந்த விஷயங்களை ரசிகர்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்று பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன்.
அம்மா பாடல் குறித்து?
கதையில் அது மிக அழகான, அரிய சூழல். அதற்கேற்ற உணர்ச்சிகரமான பாடல். ஆனால் சோகமான பாடல் கிடையாது, ஆறுதலைத் தான் தரும். அந்தச் சூழலுக்கு இந்தப் பாடல் உயிரைக் கொடுத்திருக்கிறது. ரசிகர்கள் மனதில் நன்றாகப் பதிந்துவிடும்.
தமிழில் டப்பிங் செய்தது எப்படி இருந்தது?
வசனமாகக் கொடுத்தால் நன்றாக தமிழ் பேசிவிடுவேன். ஆனால் சாதரணமாகப் பேசும்போது நான் சிந்திக்கும் ஆங்கிலத்தை ஒவ்வொரு வார்த்தையாகத் தமிழில் மொழிபெயர்த்துப் பேசத் தாமதமாகிவிடும். இப்போது பேசும் மொழி தெலுங்கு என்பதால் நிறைய வார்த்தைகள் தெலுங்கு வேறு வருகிறது. ஆனால் டப்பிங் செய்யும்போது ஸ்ரீகார்த்திக்கே ஆச்சரியப்பட்டுப் போனார். முதலில் தமிழில் தான் பேசுவேன். தெலுங்கை விட அது சுலபமாக இருந்தது.
படப்பிடிப்பு அனுபவம் குறித்து?
ஸ்ரீகார்த்திக் குழுவினர் மிகச் சரியான ஒருங்கிணைப்போடு, திட்டமிடுதலோடு இருந்தனர். ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் சரியாக வைத்திருந்தனர். அதனால் நடிகர்கள் எங்களுக்கு மிகச் சுலபமாக இருந்தது. இப்படி ஒரு தொழில் முறை நேர்த்தியைப் பாராட்டியாக வேண்டும். இந்த நேர்த்தியால் தான் ட்ரீம் வாரியர் இவர்களுக்கு வாய்ப்பு தந்திருக்கிறது என்று நினைக்கிறேன். தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தினமும் படப்பிடிப்புக்கு வருவார். எந்த வித பதட்டமும் காட்டமாட்டார். அன்று அவரது படங்களின் வெளியீடு இருந்தால் கூட அமைதியாகவே இருப்பார். 7 படங்கள் படப்பிடிப்பில் உள்ளன, 2 வெளியாக உள்ளது என எல்லாவற்றையும் எந்த பரபரப்பும் இல்லாமல் பேசுவார்.
அனைவருக்கும் பாயசம் செய்து கொடுத்தீர்களாமே?
(சிரிப்புடன்) ஆம். அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன், ஒரு நாள், ‘அம்மா எங்களுக்குச் சமைத்துப் போடுவீர்களா’ என்று கேட்டபோது என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனக்கு சமையல் தெரியாது என்று சொல்ல முடியுமா? அதனால் மிகவும் ஆசையாகத்தான் செய்தேன். படக்குழுவினர் வீட்டுக்கு வந்து மொத்தத்தையும் அமைதியாக சாப்பிட்டார்கள். பாவம், நிஜமாக அது சுவையாக இருந்ததா என்ற சந்தேகம் இருக்கிறது. நீங்கள் தான் அவர்களிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்.