ஜல்லிக்கட்டு காளை மோதலில் மயிரிழையில் தப்பித்தேன்! -‘காரி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சசிகுமார் பேச்சு

சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி.’

மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.

வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வரும் நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

நிகழ்வில் நாயகன் சசிகுமார் பேசும்போது, “இது எனக்கான கதை. என் மண்ணின் கதை. ஒரேமாதிரி கதையில் நடிக்கிறீர்களே, அதுவும் கிராமத்து படமாக நடிக்கிறீர்களே என்றால், நான் கிராமத்து படம் தான் பண்ணுவேன். அவர்களுக்கு நான் பண்ணாமல் வேறு யார் பண்ணுவார்கள்? என்னுடைய தயாரிப்பில் ஜல்லிக்கட்டு பற்றி படம் பண்ண முயற்சித்தேன், அது முடியவில்லை. லக்ஷ்மண் குமார் தயாரிப்பில் என்னுடைய ஆசை நிறைவேறி இருக்கிறது.

அம்மு அபிராமி இந்த படத்தில் மிக அருமையான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்னைக் கேட்டால் அவர் இதுபோன்று நிறைய கேரக்டர் ரோல்களில் நடிக்க வேண்டும். ஏனென்றால் இப்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதற்குத்தான் நடிகைகள் ரொம்ப குறைவாகவே இருக்கிறார்கள்.

இதில் வில்லனாக நடித்துள்ள நடிகர் ஜேடி சக்கரவர்த்தி, நான் ரிஸ்க் எடுத்து நடித்த காட்சிகளை பார்த்துவிட்டு, என்னை அழைத்து முதலில் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் என அறிவுரை கூறினார்.

இந்த படத்தின் மூலம் ஒன்பதாவது முறையாக புதிய இயக்குனரை அறிமுகப்படுத்துகிறேன். ஹேமந்த் நிச்சயமாக மிகப்பெரிய இயக்குனராக வருவார். இந்தப்படத்தின் வெற்றிக்கு பிறகு, தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் இயக்குனர் ஹேமந்துக்கு பரிசாக கார் கொடுக்காமல், கார்த்தியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டும்.

படத்தில் என்னுடன் நடித்த நிஜமான ஜல்லிக்கட்டு வீரர்கள் எனக்கு பாதுகாப்பாக, பக்கபலமாக இருந்தனர். அவற்றையும் மீறி ஒரு சில சமயங்களில் ஜல்லிக்கட்டு காளை மோதலில் இருந்து மயிரிழையில் தப்பித்தேன். இதில் நடித்ததற்காக அவர்கள் கேட்ட ஒரே பரிசு இந்த படம் வெளியாகும்போது முதல்நாள் மதுரையில் அவர்களுடன் தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்பது தான். ரிலீஸ் நாளன்று அவர்களது ஆசையை நிறைவேற்ற போகிறேன்.

ஜல்லிக்கட்டு மீது தடைகேட்டு யார் எத்தனை வழக்கு போட்டாலும் யாராலும் ஜல்லிக்கட்டு விளையாட்டை அழிக்க முடியாது. ஜல்லிக்கட்டு மாடுகளை நாங்கள் துன்புறுத்தவில்லை.. எதிர்ப்பவர்கள்தான் அதன்மூலம் மாடுகளை அழிக்க நினைக்கிறார்கள். இந்த படத்தில் பதினெட்டு வகையான மாடுகள் பற்றி சொல்லி இருக்கிறோம். என்னுடைய படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.

இது மக்களுக்காக எடுத்த படம். ஜல்லிக்கட்டு பற்றிய படம். அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும். அடுத்த வருடம் நான் மீண்டும் எனது டைரக்ஷனில் படம் இயக்குகிறேன். அதற்கான அறிவிப்பை இந்த படத்தின் வெற்றி விழாவில் அறிவிக்கிறேன்” என்றார்.

இயக்குனர் ஹேமந்த் பேசும்போது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமாரை மேன் ஆப் தி ஆக்சன் என்று கூறினால், ஹீரோ சசிகுமாரை மேன் ஆஃப் ட்ரூ வேர்ட்ஸ் என்று சொல்வேன். படத்தின் கதையை கேட்ட சசிகுமார் நீங்க கதை சொன்ன மாதிரியே படமும் எடுத்துட்டா வெற்றிதான் என்று உற்சாகப்படுத்தினார்.

நாம் எவ்வளவுக்கெவ்வளவு நேட்டிவிட்டியாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு மதிப்பு இருக்கும். ஆனால், இப்போது அந்த நேட்டிவிட்டியை தகர்க்கும் விதமாக தான் பல விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் விளையாட்டுக்கு தடை விதிக்க முயற்சிப்பது.

ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு என்றால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மட்டும்தான் இளைஞர்கள் இன்னும் கலாச்சாரம் தொடர்பான விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை திசை திருப்புவதற்காகத்தான் ஜல்லிக்கட்டு தடை போன்ற விஷயங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த படத்தில் மனிதர்களின் நம்பிக்கை, உறவு சிக்கல்கள் ஆகியவற்றை கூறியுள்ளோம். மொத்தத்தில் இந்த படம் எமோசனல் ஆக்சன் ட்ராமாவாக இருக்கும்” என்றார்.

தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது, “ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கிடைக்காதிருந்த சமயத்தில் தான் இந்த கதையை இயக்குனர் ஹேமந்த் என்னிடம் கூறினார். இந்த கதையை கேட்டதும் எப்படியாவது இதை படமாக எடுத்துவிட வேண்டும் என முடிவு செய்தோம். அதன்பிறகு தமிழக இளைஞர்களின் புரட்சி மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது. சசிகுமாருக்கு என்றே அளவெடுத்து தைக்கப்பட்ட ஒரு சட்டை போல இந்த கதையும் கதாபாத்திரமும் அமைந்துவிட்டது.

காளைகள், குதிரைகளை வைத்து மிகுந்த சிரமத்திற்கு இடையே தான் இந்த படத்தை எடுத்துள்ளோம். அதிலும் மைசூர் எடுக்கப்பட்ட காட்சிகளில் பெரும்பாலும் ரேஸ் குதிரைகளை வைத்தே காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. சமீப காலமாக நம் நம்பிக்கைகளை தகர்க்கும் விதமாக சில விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது ஆனால் அதை தடுத்து, நம்பிக்கை கொடுக்கும் விதமாக இந்தப்படம் இருக்கும்” என்று கூறினார்.

படக்குழு:-

தயாரிப்பு ; பிரின்ஸ் பிக்சர்ஸ் கே.லக்ஷ்மன் குமார்

இயக்கம் ; ஹேமந்த்

இசை ; டி.இமான்

ஒளிப்பதிவு ; கணேஷ் சந்திரா

படத்தொகுப்பு ; சிவநந்தீஸ்வரன்

கலை ; மிலன்

நடனம் ; ஹரி கிரண்

சண்டைப்பயிற்சி ; அன்பறிவு, தினேஷ் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா

பாடல்கள் ; லலித் ஆனந்த், ஹேமந்த்

ஆடை வடிவமைப்பு ; பூர்த்தி பிரவீண்

உடை அலங்காரம் ; பெருமாள் செல்வம்

ஒப்பனை கலைமாமணி வி.சண்முகம்

மக்கள் தொடர்பு ; A.ஜான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here