விஜய் டி.வி.யின் ‘நீயா நானா’ நிகழ்ச்சி நடிகர் கார்த்தியை சிறந்த ஆளுமை 2022 என தேர்வு செய்து கெளரவித்துள்ளது.
கார்த்தி அவரது உழவன் ஃபவுண்டேஷன் மூலம் செய்து வரும் சமூக பணிகளுக்கும், ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன் 1’, ‘சர்தார்’ என அடுத்தடுத்து மூன்று வெற்றிப் படங்கள் கொடுத்ததற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறந்த களப்பணியாற்றி வரும் விவசாயிகளை அடையாளம் கண்டு, வெளியுலகுக்கு அவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே தன்னார்வத் தொண்டு நிறுவனமான உழவன் அமைப்பின் நோக்கமாக இருக்கிறது.
தமிழ் சமூகம் குறித்தும், தமிழர் பெருமை குறித்தும் வெவ்வேறு தளங்களில் தொடர்ந்து தனது குரலை அழுத்தமாகப் பதிவு செய்து வருவதற்காகவும் அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
அவர், எப்படித் தொடர்ந்து சமூகப் பொறுப்புள்ள கதைகளைத் தேர்வு செய்து, வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலம் தனது நடிப்புத் திறனையும் நிரூபித்து வருகிறார் என்பது குறித்து இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டக் காணொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கார்த்தி ஏற்கனவே ஸ்பெயின் நாட்டுப் பயணத்திற்கு திட்டமிட்டிருந்ததால், அவரது நண்பரும், சர்தார் திரைப்படத்தின் தயாரிப்பாளருமான லக்ஷமண், கார்த்தியின் சார்பாக இவ்விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த கெளரவம் நடிகர் கார்த்திக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகக் கூறிய லக்ஷ்மண், உழவன் அமைப்பின் மூலம் கார்த்தி செய்து வரும் பல்வேறு நற்பணிகள் குறித்து நிகழ்ச்சியில் பேசினார்.

