Home சினிமா ‘மால்’ சினிமா விமர்சனம்

‘மால்’ சினிமா விமர்சனம்

ஒரேபொருளை அபகரிக்க ஒன்றுக்கும் மேற்பட்டோர் போடும் திட்டமும் அவர்களை வேட்டையாட முயற்சிக்கிற சட்டமும் என பரபரக்கும் கதையோட்டத்தில் ‘மால்.’
கோடிக்கணக்கான மதிப்புள்ள பழங்காலச் சோழர் சிலையொன்று களவுபோக, அதை மீட்க காவல்துறையின் உயர்மட்டக் குழு தீவிரம் காட்டுகிறது.
கடத்தல் பிஸினஸில் தேர்ந்த ஒரு கும்பல் சிலையை நல்ல விலைக்கு விற்று கரன்சியில் மிதக்க ஸ்கெட்ச் போடுகிறது. அந்த திட்டத்தில் குழப்பம் ஏற்படவே சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, காவல்துறை அதிகாரியொருவர் சிலையைக் கைப்பற்றி கோடீஸ்வரனாக நினைக்கிறார்.
லோக்கல் திருடர்கள் இரண்டு பேர் அந்த சிலைக்கு குறிவைக்கிறார்கள். அப்படியே சிலை அங்கிருந்து இங்கு, இங்கிருந்து அங்கு என கைமாறிக் கொண்டேயிருக்க இந்த விவகாரத்தால் ஒருசில உயிர்கள் பலியாகிற சம்பவங்களும் நடக்கிறது.
ஒரு காட்சியை தவறவிட்டாலும் நடப்பது என்ன என்பது புரியாமல் போய்விடும்படி திரைக்கதையில் விறுவிறுப்பையும் திருப்பங்களையும் கலந்துகட்டி இயக்கியிருக்கிறார் தினேஷ் குமரன்.
உள்ளூர் களவாணிகளை அதட்டி மிரட்டி, அவர்கள் ஆட்டையைப் போடும் பொருளை தன் அக்கவுண்டில் போட்டுக் கொள்கிற காவல்துறை அதிகாரியாக கஜராஜ். சிலைக்கு ஆசைப்பட்டு கொலை செய்கிற அளவுக்கு இறங்குவது, தனக்கு பயந்து பதுங்கும் திருடர்கள் பிடியில் அகப்பட்டு கம்பீரத்தை விட்டுக் கொடுக்காமல் திணறுவது என உடலமைப்பில் இருக்கிற கனத்தை நடிப்பிலும் காட்டியிருக்கிறார்.
தங்கள் ஏற்பாட்டை மீறி, கட்டுப்பாட்டைத் தாண்டி சிலை காணாது போய்விட, தங்களுக்குள் கொதித்துக் கொந்தளிக்கிற கடத்தல் உலக தாதாக்களின் நீயா நானா ஆட்டம் நல்ல விறுவிறுப்பு!
கர்ணா என்ற பெயரில் கடத்தலின் மூளையாக செயல்படுகிற சாய்கார்த்தியின் மிரட்டலான நடிப்பு கேரக்டரை பலப்படுத்தியிருக்கிறது. அவருக்கு துணைவியாக வருகிறவரின் வாட்டசாட்டமான உடற்கட்டில் தளதளப்பான கவர்ச்சி ததும்புகிறது. அந்த பெட்ரூம் சீனும் சூடேற்றுகிறது.படத்தின் இயக்குநர் தினேஷ் குமரனுக்கும், அவரது நண்பனாக வருகிற அஷ்ரப்புக்கும் படம் நெடுக ஓடிக் கொண்டிருக்கிற முக்கிய கதாபாத்திரங்கள். இருவரும் செயின் அறுப்பில் ஈடுபடுவது, அறுத்ததை போலீஸிடம் பறிகொடுப்பது, சூழ்நிலை சாதகமானதும் அதே போலீஸை துப்பாக்கி முனையில் மிரட்டுவது என துடிப்பான நடிப்பால் அசத்தியிருக்கிறார்கள். தினேஷ்குமரனுக்கு பிளாக் காமெடி அசத்தலாய் வருகிறது என்பது தனியாக குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டிய சங்கதி!
ஊடகவியலாளர்களாக வருகிற விஜெ பப்பு, ஜெய் ஜோடி முகம் தெரியாத ஒருவருக்கு உதவப்போய் ஆபத்தில் சிக்கிக் கொள்வது, நிறைவுக் காட்சியில் சற்றே சாதுர்யமாக செயல்பட்டு தாங்கள் சார்ந்த பணிக்கு பெருமை சேர்ப்பது என கதையின் போக்கில் கரைந்திருக்கிறார்கள். அவர்களுக்கிடையில் மலரும் காதல் கவர்கிறது.
கான்ஸ்டபிளாக வருகிற ‘நக்கலைட்ஸ்’ பிரசன்னா உள்ளிட்ட இன்னபிற நடிகர்களின் பங்களிப்பு நிறைவு!
பத்மயன் சிவானந்தத்தின் பின்னணி இசை காட்சிகளுக்கு தேவையான வேகத்தைக் கொடுத்திருக்கிறது!
ஒன்றுக்கொன்று தொடர்பின்றி அங்கும் இங்கும் அலைபாயும் காட்சிகளை தன் எடிட்டிங் திறமையால் நேர்த்தியாக ஒருங்கிணைத்திருக்கிற சிவராஜ் ஆர் ஒளிப்பதிவையும் கச்சிதமாக கையாண்டிருக்கிறார்
கதையின்போக்கும் திரைக்கதையிலிருக்கும் கவனம் ஈர்க்கும் அம்சங்களும் இந்த படத்தை இயக்கியவர் ஏற்கனவே பல படங்களை இயக்கிய அனுபவமுள்ளவராக இருப்பார் என நினைக்க வைக்கிறது. உண்மை என்னவென்றால் படத்தை இயக்கியிருப்பவர் புதியவர்; வயதில் வாலிபப் பருவத்தின் ஆரம்பத்திலிருப்பவர்!
ஆஹா ஓடிடி தளத்தில் செப்டம்பர் 22; 2023 அன்றிலிருந்து காணக்கிடைக்கிற ‘மால்’ அலுக்காமல் சலிக்காமல் பார்க்க நல்ல சாய்ஸ்.
REVIEW OVERVIEW
‘மால்' சினிமா விமர்சனம்
Previous articleபின் தங்கிய மக்களுக்கு மகிழ்ச்சியளிக்க ‘ஜவான்’ படத்தை போட்டுக் காட்டிய ஷாருக்கானின் மீர் அறக்கட்டளை!
Next article
mall-movie-reviewஒரேபொருளை அபகரிக்க ஒன்றுக்கும் மேற்பட்டோர் போடும் திட்டமும் அவர்களை வேட்டையாட முயற்சிக்கிற சட்டமும் என பரபரக்கும் கதையோட்டத்தில் ‘மால்.' கோடிக்கணக்கான மதிப்புள்ள பழங்காலச் சோழர் சிலையொன்று களவுபோக, அதை மீட்க காவல்துறையின் உயர்மட்டக் குழு தீவிரம் காட்டுகிறது. கடத்தல் பிஸினஸில் தேர்ந்த ஒரு கும்பல் சிலையை நல்ல விலைக்கு விற்று கரன்சியில் மிதக்க ஸ்கெட்ச் போடுகிறது. அந்த திட்டத்தில் குழப்பம் ஏற்படவே சந்தர்ப்பத்தை பயன்படுத்தி,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்