எது மாதிரியும் இல்லாத புது ஜானரிலான ஹாரர் படம்.
அது ஒரு காட்டுப்பகுதி. அந்த பகுதிக்கு செல்கிறவர்கள் திரும்பி வருவதில்லை. அதற்கு அங்கு சுற்றிக் கொண்டிருக்கும் அமானுஷ்ய சக்திதான் காரணம் என ஊர் மக்களால் நம்பப்படுகிறது.
உண்மையில் காட்டுக்குள் நடப்பது என்ன எனபதை தெரிந்துகொள்ள இரண்டு இளைஞர்கள், இரண்டு இளம் பெண்கள் என நான்கு பேர் குழுவாக காட்டுக்குள் நுழைகிறார்கள். தங்களுக்கு வழிகாட்டுவதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த பெண்ணையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.
காட்டுக்குள் நடப்பதையெல்லாம் தங்களது யூடியூப் சேனலுக்காக பதிவு செய்யத் தொடங்குகிறார்கள்.
அவர்கள் எதையெல்லாம் பதிவு செய்தார்கள் என்பது மீதிக் கதை.
ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ்… இந்த ஐந்து பேர் காட்டுக்குள் துணிச்சலாக சென்று தங்கி, அமானுஷ்ய சக்தியின் உருட்டலுக்கும் மிரட்டலுக்கும் ஆளாகி துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓட்டமெடுக்கும் கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறார்கள்; நடிப்பில் மரண பயத்தைக் காட்டியிருக்கிறார்கள். இன்னொரு விசேச செய்தி, யூடியூபர்களாக வருகிற பெண்கள் தங்களது செழுமையான இளமையை கவர்ச்சி விருந்தாகப் பரிமாறி ஆண் வர்க்கத்தை மூடேற்றி சூடேற்றும் வேலையையும் செய்திருக்கிறார்கள். இடையில் ‘கசமுசா’ சமாச்சாரங்களும் உண்டு.
அமானுஷ்ய சக்தி அங்குமிங்கும் திரிகிறபோது உருவாகிற சப்தங்களை பயம் தரும் விதத்தில் அமைத்திருக்கிறார் ஒலி வடிவமைப்பாளர் கேவ்ய்ன்.
பின்னணி இசையில்லாத குறையை, மனித நடமாட்டத்தினாலும் காற்றினாலும் உருவாகிற இயற்கையான சப்தங்கள் போக்கிவிடுகின்றன. அவற்றை துல்லியமாக பதிவு செய்திருக்கிற ஒலிப்பதிவாளரை ஸ்பெஷலாக பாராட்ட வேண்டும்.
இருள் சூழ்ந்த காடு மேடுகளை இயற்கையாக கிடைக்கிற வெளிச்சத்தைக் கொண்டு படமாக்கி, திகிலுணர்வை அதிகரித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ்.
தமிழின் முதல் ’ஃபவுண்ட் ஃபூட்டேஜ்’ வகை திரைப்படம் என்ற பெருமையோடு வெளியாகியிருக்கிற, சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றிருக்கிற இந்த மர்மர் தருகிற விஷுவல் டிரீட் வித்தியாசமான படங்களை தேடித்தேடி பார்க்கிறவர்களுக்கு திருப்தி தரும். மசாலா சினிமா ரசிகர்களுக்கு சலிப்பு தரும்.
-சு.கணேஷ்குமார்