ஹீரோவும் ஹீரோயினும் காதலித்து கல்யாணம் செய்து கொள்ள, ஹோட்டல் ஒன்றில் நடக்கிறது முதலிரவு. அந்த காட்சியை ரகசிய கேமரா பதிவு செய்துவிட, அந்த குற்றத்தைச் செய்தது யார், எதற்காக என்பதெல்லாம் ‘சட்டென்று மாறுது வானிலை’யின் ஸ்க்ரீன்பிளே. வீடியோவில் சிக்கிய ஹீரோ கண்டிப்பாக குற்றவாளியை பழி வாங்காமல் விட மாட்டார். அந்த சம்ஹார சம்பவம் எப்படி நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்..
ஜெய் நடிப்பில் எப்போதும் இருக்கிற துறுதுறுப்பு இதிலும் இருக்கிறது. காதலனாக மென்முகமும் பழி வாங்கும்போது போதுமான கோபமும் காட்டி கவர்கிறார்.
அமைச்சரின் மகளாக வருகிற மீனாட்சி கோவிந்தராஜன் பயம், பதட்டம், காதல், கவலை, வேதனை என எல்லா உணர்வுகளையும் தேவைக்கேற்ப பிரதிபலிக்கிறார்.
சைபர் கிரைமை ரசித்து செய்கிற கருடா ராமின் வில்லத்தனம் மிரட்டல்.
காமெடி வில்லனாக யோகிபாபு சில தருணங்களில் ரசிக்க வைக்கிறார். அரசியல்வாதியாக சரவண சுப்பையா இன்னபிற கேரக்டர்களில் சத்யன், ஆதித்யா கதிர். நடிப்பு கச்சிதம்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசை, ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு கதையோட்டத்திற்கு பலம்.
திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சனைகள், எல்லா பக்கமும் எதிரிகள் என்ற நிலைமைக்கு தள்ளப்படும் இளைஞன் ஒருவனை மையப்படுத்தி, விறுவிறுப்பான கிரைம் திரில்லர் அனுபவம் தர நினைத்த இயக்குநர் பாபு விஜய் இன்னும் கொஞ்சம் வலுவான திரைக்கதை அமைத்திருக்கலாம்.
சட்டென்று மாறுது வானிலை – ஓரளவே உற்சாகமாகிறது ரசிகர்களின் மனநிலை!
-சு.கணேஷ்குமார்
