சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வட்டம்.’
வாழ்க்கையின் வித்தியாசமான தருணங்களை அழகான படம் பிடித்து காட்டும் இப்படம் ஜூலை 29-ம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக, உலகளவில் ப்ரீமியர் ஆகிறது. இதனை ஒட்டி படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
நிகழ்வில் சிபிராஜ், வட்டம் எனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். இந்த கதையை நான் கேட்கும் போது, நான் நடித்துக் கொண்டிருந்த படங்களிலிருந்து மாறுபட்டு, இந்த கதை ஒரு வித்தியாசமான உணர்வை கொடுத்தது. இயக்குநர் கமலகண்ணன் மற்றும் கவிநயம் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளனர். படத்தின் திரைக்கதை சிறப்பாக இருந்தது. இயக்குநர் கமலகண்ணன், இயக்குனர் மணிவண்ணன் போல கருத்துக்கள் கொண்டவர்.மிக சிறப்பாக படத்தை எடுத்துள்ளார். இது எனது முதல் ஓடிடி படம், முதல் படமே டிஸ்னி போன்ற பெரிய தளத்தில் அமைந்தது மகிழ்ச்சி. நான் ஆண்ட்ரியாவின் மிகப்பெரிய ரசிகன், அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது” என்றார்.
நடிகை ஆண்ட்ரியா, நிவாஸ் இசையில் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. சிபி ஒரு கூலான மனிதர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவருடன் இரவில் காரில் ஷூட்டிங்கில் சுற்றி ரோட்டுக்கடையில் சாப்பிட்டதெல்லாம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கமலக்கண்ணன் படத்தை மிக தெளிவாக எடுத்துள்ளார்.” என்றார்.
இயக்குனர் கமலகண்ணன், “இந்த படத்தில் நிறைய வித்தியாசமான தருணங்கள் இருக்கிறது. எனது முதல் படம் நிறைய வரவேற்பை கொடுத்தது. அந்த படத்தில் இருந்து இந்த படம் முழுதாக வேறுபட்டு இருக்கும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் பணிபுரிந்த போது, இயக்குநராக எனது வேலையை மட்டுமே செய்ய கூடி மன சுதந்திரம் கிடைத்தது. நாம் அதிகமாக திரில்லர் படங்களை விரும்ப ஆரம்பித்துவிட்டோம். ஆனால் இந்த சமூகத்தில் அதை விட பல திரில்லிங் தருணங்கள் இருக்கிறது. அது இந்த திரைப்படத்திலும் இருக்கிறது. இது எங்கள் எல்லோருடைய படம். ஓடிடி நிறுவனத்தின் மூலம் பலரை சென்றடையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையேயான பார்வையை கருத்தை இந்த படம் சொல்ல முயற்சித்து இருக்கிறது” என்றார்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, கமலகண்ணன் இயக்கிய மதுபானக் கடை திரைப்படம் எனக்கு பிடித்திருந்தது, அதனால் அவரிடம் கதை கேட்டு படம் எடுக்க முடிவு செய்தோம். இது ஒரு மெயின் ஸ்ட்ரீம் படம். சமூகத்தில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே ஒரு குற்ற உணர்வு இருக்கும், அதை இந்த படம் பேசும். நடிகர் சிபி தான் இந்த கதையை எடுத்து செல்ல சரியாக இருப்பார் என நினைத்து இந்த படத்திற்குள் அவரை கொண்டு வர நினைத்தோம். பின்னர் அதுல்யா, ஆண்ட்ரியா இந்த படத்திற்குள் வந்தது மேலும் பலம். படத்தில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களும் இந்த படத்தை மெருக்கேற்ற பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது, பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது” என்றார்.