‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா கதையின் நாயகனாக நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ பான் இந்திய திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியிருப்பதாக படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
வம்சி இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் கதைநாயகனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் நடிக்கிறார்கள்.
1970களில் ஸ்டூவர்ட் புரம் எனும் பகுதியில் வாழ்ந்த பிரபல திருடனின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் இந்த படத்தை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் அபிஷேக் அகர்வால் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதுகிறார். அவினாஷ் கொல்லா நிர்வாகத் தயாரிப்பாளராகவும், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
பிரமாண்டமான பட்ஜெட் திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடிக்கப்போகும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக 5 ஏக்கர் நிலத்தில் ஸ்டுவர்ட்புரம் எனும் கிராமத்தை உருவாக்கி இருக்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கிராமத்தில் படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்கியிருக்கிறார்கள். இதில் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பங்கேற்கும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்படுகிறது.
டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃப்ரீ லுக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இறுதிக் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருக்கும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
இந்த படத்தில் ரவி தேஜாவின் உடல் மொழி, வசன உச்சரிப்பு மற்றும் கெட்டப் ஆகியவை வித்தியாசமாக இருக்கும். அவர் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரமாக இருப்பதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.