திரைப்பட பத்திரிகையாளர் கவிதா தலைமையில் செயல்படும் தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் (Tamil Movie Journalist Association – TMJA) சார்பில், பத்திரிகையாளர்களுக்கு 4.4.2023 அன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.நிகழ்வில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன், நடிகர் புகழ், நடிகை அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் தலைவர் கவிதா சங்கத்திற்கான அலுவலகம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை பூச்சி முருகனிடம் வைத்தார். நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சங்கம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மருத்துவ முகாமை துவக்கி வைத்த வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் பேசியபோது, ”நான் ஒரு நடிகருடைய மகன்தான். எங்க அப்பா கலைமாமணி எஸ் எஸ் சிவசூரியன் 150 படங்களில் நடித்திருக்கிறார். அவரைப் பின்பற்றி நான் வந்திருக்கிறேன். பொதுவாக நான் சினிமாக்காரனாக வளர்ந்திருந்தாலும் சினிமா நிகழ்ச்சிகளுக்கு அதிகம் செல்வதில்லை.இந்த நிகழ்ச்சி ஒரு வரவேற்கத்தக்க நிகழ்ச்சி என்பதால் வந்திருக்கிறேன். மருத்துவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். கொரோனா காலத்தில் கண் முன்னே பார்த்தோம். கொரோனா வந்த காலத்தில் அனைத்து மருத்துவர்களும் மருத்துவமனையில் தான் இருந்தார்கள். அந்த வகையில் இன்று சேவையாற்ற வந்திருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் அதேபோல் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். காலை எழுந்ததும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதுவும் சினிமாக்காரர்கள் அரசியல்வாதிகள் போன்றோர்க்கு இது மாதிரியான பயிற்சிகள் மிகவும் முக்கியம்,
உடற்பயிற்சியில் கவனம் செலுத்தும் மிகப்பெரிய நடிகர் முத்துராமன். அவர் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க நினைப்பார். ஆனால் ஊட்டியில் ஒரு படப்பிடிப்பின் போது நெஞ்சுவலி வந்து விட்டது. எங்களது குடும்ப நண்பர் அவர் எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவர். ஆயினும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்த அவருக்கே எதிர்பாராத நிலை ஏற்பட்டது.
ஆகையால் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களில் ஈடுபடுபவர்களுக்கு என்று இல்லை யாருக்கு வேண்டுமானாலும். என்ன சூழ்நிலையில் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை தற்போது உள்ளது. ஆகையால் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் சங்கம் நடத்துவது சாதாரண காரியம் அல்ல 100 நல்ல காரியங்கள் செய்தாலும் அதை விட்டு விடுவார்கள் எங்கோ செய்யும் ஒரே ஒரு தவறை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு பேசக் கூடியவர்கள்தான் இன்று பொதுவாக எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். ஒருமுறை இப்படித்தான் நடிகர் சங்க அலுவலக கட்டடத்தை லீசுக்கு விட்டு விட்டார்கள் என தெரிந்ததும், அதை மீட்க ஏழு வருடங்கள் போராடினேன்.
அன்று எனக்கு துணை நிற்க ஒரு நடிகரும் வரவில்லை, எப்படியோ போராடி கோர்ட்டில் ஒரு ஆர்டர் வாங்கினேன் ஆனால் அன்று எனக்கு உறுதுணையாக இருந்தது இந்த பத்திரிகை துறையினர் மட்டும்தான். அதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. அன்று உண்மை செய்திகளை வெளியிட்டு இந்த பூச்சி முருகனை அடையாளம் காட்டினார்கள். யார் இந்த பூச்சி முருகன் என்று அட்டை படத்தில் தலைப்பாகவே வெளியிட்டார்கள். எதற்காக இதை சொல்கிறேன் என்றால் ஒரு சங்கத்தை நிர்வகிப்பது எவ்வளவு கடினம் என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். எனவே தான் கூறுகிறேன் சங்கத்தை நடத்துவது என்பது மிக மிக கடினமான ஒன்று.
பத்திரிகையாளர் சங்கத்திற்காக நீங்களும் கூடிய விரைவில் ஒரு கட்டிடத்தை வாங்க வேண்டும். எங்களுடைய சங்கத்தின் கட்டட பணியை பேங்கில் லோன் எடுத்து மீண்டும் தொடங்க உள்ளோம். திறப்பு விழாவை விரைவில் அறிவிக்கிறோம். நீங்கள் அனைவரும் அதில் பங்கேற்க வேண்டும்” என்றார்.
நடிகை அபிராமி வெங்கடாச்சலம் பேசியபோது, ”எங்க அம்மா அவங்களுடைய ஹெல்த்தை உண்மையாக சரியாக கவனித்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு நாள் திடீரென்று அவர்களுக்கு ஆர்த்ரிடிஸ் பிரச்சனை ஏற்பட்டது. அன்று முதல் அவர் மிகவும் மனம் உடைந்து போனார். அதன் காரணமாக வீட்டில் இருக்கும் ஒருவருக்கு ஏதாவது ஒன்றென்றால் அந்த வீடு என்ன ஆகும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இது போன்ற மருத்துவ முகாம் பத்திரிகையாளர்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நான் உணர்கிறேன்.
இதில் கலந்துகொண்ட மருத்துவர்களுக்கும் நன்றி. பூச்சி முருகன் சார் பேசியதுபோல் ஹெல்த் நல்லா இருந்தா எல்லாமே நல்லா இருக்கும். எனது அடுத்தடுத்த படங்கள் மூலமாக உங்களையெல்லாம் மகிழ்விப்பேன் உங்களுடைய பேராதரவு என்றும் எனக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.நடிகர் புகழ் பேசியபோது, ”ஒரு விஷயத்தை மக்களிடம் எப்படி சேர்க்க வேண்டும் என்பதில் பத்திரிகையாளர்கள் மிகவும் போராடுகிறார்கள். நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். சமீபத்தில் ரிலீஸான நான் நடித்த அயோத்தி படத்தைக் கூட நல்ல முறையில் எழுதி இருந்தார்கள். இன்று எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து ‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் அதற்கும் உங்களுடைய ஆதரவு தேவை” என்றார்.