இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதள தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி.’ அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் – காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் தொடர் இது.
இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ். ஜே. சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார்.
இந்த தொடர் வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் (மட்டுமல்லாமல், 30க்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளுடன், 240 நாடுகளில்) வெளியாகிறது.
இந்த தொடரின் முன்னோட்ட (Trailer) வெளியீட்டு விழா 22.11. 2022 அன்று சென்னையில் நடந்தது. அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், எஸ் ஜே சூர்யா, நாசர், லைலா, விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட், குமரன் தங்கராஜன், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களுமான புஷ்கர் – காயத்ரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் எஸ். ஜே. சூர்யா பேசுகையில், ”இந்தத் தொடரின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் என்னுடைய உதவியாளர். அவரது இயக்கத்தில் முதன் முதலாக வலைதள தொடரில் நடிப்பதை பெருமிதமாக நினைக்கிறேன். இவர் ஏற்கனவே 2017 -ல் என்னிடம் ஒரு கதையை சொன்னார். அப்போது அவரிடம்,’ நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதனால் வலுவான கதையை எழுதி வா’ என்றேன். இந்த முறை அவர் நல்ல கதையுடன் வந்தார். திரில்லர் என்றாலே அதில் பொழுதுபோக்கு அம்சம் நிறைய இருக்கும். இதில் உணர்வுபூர்வமான கதைகளும் உண்டு. அப்படியான கதையில் உருவான இந்த தொடர் பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கும். என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் தயாராகி அமேசான் பிரைம் வீடியோ எனும் சர்வதேச அளவிலான புகழ்பெற்ற டிஜிட்டல் தளத்துடன் இணைந்து முதன் முதலாக வலைதள தொடரில் நடித்திருப்பதை பெருமையாக கருதுகிறேன்.
திறமையான இயக்குநர்களின் படைப்பின் மூலமாகத்தான், ஒரு நடிகர் சிறந்த நடிகராக புகழ் பெற முடியும். அந்த வகையில் என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் ‘வதந்தி’ எனும் இந்தத் தொடரில் நடித்திருப்பதால், சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். ‘உண்மை நடக்கும். பொய் பறக்கும்’ என இந்த தொடரில் ஒரு வசனம் இடம் பெற்று இருக்கிறது கன்னியாகுமரி பகுதியில் உள்ள மக்கள் இயல்பாக பேசும் இந்த பேச்சு, இந்த தொடருக்கு பொருத்தமானது. டேக் லைனாக இணைத்துக் கொள்ளலாம்” என்றார்.இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் பேசுகையில், ”வதந்தி – இந்த சமுதாயத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருக்கிறது. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், மனிதன் தன்னுடைய பொழுதுபோக்கிற்கு கண்டுபிடித்த முதல் விசயமே வதந்தி தான் என்று நான் நினைக்கிறேன். ‘யாகவாராயினும் நா காக்க..’ என்னும் திருக்குறளில், யார் எதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றாலும், வாயிலிருந்து வெளியாகும் வார்த்தைகளையாவது கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இது திருக்குறள். இந்த திருக்குறளை இதுவரை வலிமையாகவும், கூர்மையாகவும் ரசிக்கும் வகையில் யாரும் கதையாக சொல்லவில்லை. ஒருவேளை இதை நேர்த்தியாக சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இதை எப்போது சொன்னாலும் நன்றாக இருக்கும் என நம்பினேன். 11 மாதங்கள் இந்த தொடருக்கான திரைக்கதையை எழுதினேன். தயாரிப்பாளர்களும், நண்பர்களுமான புஷ்கர் – காயத்ரி அவர்களும் இதன் திரைக்கதையை முழுவதுமாக வாசித்து, தங்களது மேலான ஆலோசனையை வழங்கினார்கள்.
என்னுடைய திரையுலக பயணத்தை எஸ் ஜே சூர்யாவிடமிருந்து தான் தொடங்கினேன். அவரையே இந்த தொடரில் இயக்கியிருப்பது என்னுடைய கனவு நனவானது போல் உணர்கிறேன்” என்றார்.