Home சினிமா இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் சாய்தன்ஷிகா சிறப்பாக நடித்துள்ளார்! -யோகிடா பட விழாவில் நடிகர் விஷால் 

இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் சாய்தன்ஷிகா சிறப்பாக நடித்துள்ளார்! -யோகிடா பட விழாவில் நடிகர் விஷால் 

சாய் தன்ஷிகா பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர். சமீபத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடரிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் வெளிவரவுள்ள படம் ‘யோகிடா.’ கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கௌதம் கிருஷ்ணா.

படத்தில் சாய்தன்ஷிகா குறுகிய காலத்தில் அதிக டிரான்ஸ்ஃபர் பெற்ற நேர்மையான காவல் ஆய்வாளராக, எத்தனை மனிதர்கள் எதிர்த்தாலும் உண்மை உண்மைதான்,  எத்தனை மனிதர்கள் ஆதரித்தாலும் தவறு தவறுதான் என்ற உறுதியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தான் வேலை பார்க்கும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொல்லப்படுகிறார். அதை அவரது குடும்பத்தார் தற்கொலை என மாற்ற முயற்சிக்கின்றனர். இருப்பினும் அதை கொலை என நிரூபித்து குற்றவாளியை கைது செய்கிறார் சாய் தன்ஷிகா. ஆனால் குற்றவாளியை விடுவிக்க சொல்லி பல தரப்பில் இருந்தும் அவருக்கு அழுத்தம் தரப்படுகிறது. அதற்கு மறுப்பதால், இதைவிட மோசமான பகுதிக்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் மீண்டும் அவரை டிரான்ஸ்ஃபர் செய்கிறார்கள்.

இங்கு சாய் தன்ஷிகா சந்திக்கும் பல்வேறு திகைக்க வைக்கும் சம்பவங்களால், அவர் அனுபவிக்கும் பல்வேறு இன்னல்களை சமாளித்து வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் கதை.

படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராதாரவி, நடிகர் விஷால், இயக்குநர் சங்க தலைவர் ஆர் வி உதயகுமார், பேரரசு, மித்ரன் ஆர் ஜவஹர், மீரா கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய நடிகை சாய் தன்ஷிகா “17 வருடங்களாக தமிழ்த் திரையுலகில் எனக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறேன். உழைப்பை மட்டுமே நம்பி இந்த திரைத்துறையில் இத்தனை வருடம் பயணித்ததால்தான் ‘யோகிடா’ வரைக்கும் வந்துள்ளேன். அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்புக்கலை போய்சேர வேண்டும். 15-ஆண்டுகளுக்கும் மேலாக விஷால் அவர்களைத் தெரியும். நானும் அவரும் வரும் ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். அனைவரும் எங்களை வாழ்த்த வேண்டும்” என்றார்.

நடிகர் விஷால் ”’யோகிடா’ திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் சாய்தன்ஷிகா சிறப்பாக நடித்துள்ளார். சண்டைப் பயிற்சியாளர் கணேஷ்குமார் சண்டைக் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளார். தயாரிப்பாளர் வி செந்தில்குமார் எனக்கு நீண்டநாள் நண்பர். இயக்குனர் கௌதம் கிருஷ்ணா அவர்கள் திரைத்துறையில் மேன்மேலும் சாதிக்க வேண்டும். படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

சாய் தன்ஷிகாவும் நானும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இரு வீட்டார் சம்மதத்துடன் முடிவு செய்துள்ளோம். திருமணத்திற்கு பிறகும் அவர் நடிப்பை தொடர்வார்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்